சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருப்புத்தூர்
1.026   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கள் விம்மு வெறி
பண் - தக்கராகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RbUaUwyjqEk
6.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   புரிந்து அமரர் தொழுது ஏத்தும்
பண் - திருத்தாண்டகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_IAxIoG1ly8

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.026   வெங் கள் விம்மு வெறி  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்புத்தூர் ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு புத்தூரீசர் திருவடிகள் போற்றி )
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

[1]
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்,
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.

[2]
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,
ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.

[3]
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

[4]
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத்
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,
பசை விளங்கப் படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.

[5]
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.

[6]
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்,
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

[7]
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்
திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

[8]
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

[9]
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல்
தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர்,
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

[10]
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்; அவலம் அடையாவே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.076   புரிந்து அமரர் தொழுது ஏத்தும்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருப்புத்தூர் ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு புத்தூரீசர் திருவடிகள் போற்றி )
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன்
காண், போர் விடையின் பாகன் காண், புவனம் ஏழும்
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண், விரைக் கொன்றைக் கண்ணியன் காண், வேதம் நான்கும்
தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டோன்
காண், தீர்த்தன் காண், திருமால் ஓர் பங்கத்தான் காண்
திருந்து வயல் புடை தழுவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[1]
வார் ஆரும் முலை மங்கை பங்கத்தான் காண்; மாமறைகள் ஆயவன் காண்; மண்ணும், விண்ணும்,
கூர் ஆர் வெந்தழலவனும், காற்றும், நீரும், குலவரையும், ஆயவன் காண்; கொடு நஞ்சு உண்ட
கார் ஆரும் கண்டன் காண்; எண்தோளன் காண்,
கயிலை மலைப்-பொருப்பன் காண் விருப்போடு என்றும்
தேர் ஆரும் நெடுவீதித் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[2]
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண், பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண்,
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நல்  கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்
பொன் காட்டக் கடிக்கொன்றை, மருங்கே நின்ற புனக் காந்தள் கை காட்ட, கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின்திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[3]
ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும், இந்திரனும், பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்;
தோடு ஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம், துன்னிய செஞ்சடையான் காண்; துகள் தீர் சங்கம்
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு - மாமணி காண் வளம் கொள் மேதி
சேடு ஏறி மடுப் படியும் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[4]
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண், கா மரு பூங் கச்சி ஏகம்பத்தான் காண்,
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண்புலியூர் மன்று ஆடீ காண்,
தரு மருவு கொடைத் தடக்கை அளகைக்கோன் தன் சங்காத்தி, ஆரூரில்-தனி யானை காண்
திரு மருவு பொழில் புடை சூழ் திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[5]
காம்பு ஆடு தோள் உமையாள் காண, நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண்; கையில் வெய்ய
பாம்பு ஆட, படுதலையில் பலி கொள்வோன் காண்; பவளத்தின் பருவரை போல் படி மத்தான் காண்;
தாம்பு ஆடு சின விடையே பகடாக் கொண்ட
சங்கரன் காண்; பொங்கு அரவக்கச்சையோன் காண்
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[6]
வெறி விரவு மலர்க்கொன்றை, விளங்கு திங்கள்,
வன்னியொடு, விரிசடை மேல் மிலைச்சினான் காண்;
பொறி விரவு கதம் நாகம், அக்கினோடு பூண்டவன் காண்; பொரு புலித்தோல் ஆடையான் காண்;
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண்; ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல்
செறி பொழில் சூழ் மணி மாடத் திருப் புத்ரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[7]
புக்கு அடைந்த வேதியற்கு ஆய்க் காலற் காய்ந்த
புண்ணியன் காண்; வெண் நகை வெள்வளையாள் அஞ்ச,
மிக்கு எதிர்ந்த கரி வெருவ, உரித்த கோன் காண்; வெண்மதியைக் கலை சேர்த்த திண்மையோன் காண்;
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல்
திக்கு அணைந்து வரு மருங்கில்-திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[8]
பற்றவன் காண், ஏனோர்க்கும் வானோருக்கும்; பராபரன் காண்; தக்கன் தன் வேள்வி செற்ற
கொற்றவன் காண்; கொடுஞ்சினத்தை அடங்கச்
செற்று, ஞானத்தை மேல் மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன் காண்; பிறங்கு அருவிக் கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண்; பேர் எழில் ஆர் காமவேளைச்
செற்றவன் காண் சீர் மருவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[9]
உரம் மதித்த சலந்தரன் தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண், உலகு சூழும்
வரம் மதித்த கதிரவனைப் பல் கொண்டான் காண், வானவர்கோன் புயம் நெரித்த வல்லாளன் காண்,
அர மதித்துச் செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண், அலைகடல் சூழ் இலங்கை வேந்தன்
சிரம் நெரித்த சேவடி காண் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000