சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam பொது
1.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அவ் வினைக்கு இவ் வினை
பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -திருநீலகண்டப்பதிகம் )
Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY
Audio: https://www.youtube.com/watch?v=MpLvZhSMyNc
4.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிவன் எனும் ஓசை அல்லது,
பண் - பியந்தைக்காந்தாரம்   (பொது - சிவனெனுமோசை )
Audio: https://www.youtube.com/watch?v=dBNu2cZFh9U
4.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு
பண் - சாதாரி   (பொது - திருஅங்கமாலை )
Audio: https://sivaya.org/audio/4.009 தலையே, நீ வணங்காய்.mp3
Audio: https://www.youtube.com/watch?v=YNtyl_vCMWI
4.011   திருநாவுக்கரசர்   தேவாரம்   நமச்சிவாய பதிகம், சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
பண் - காந்தாரம்   (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )
Audio: https://www.youtube.com/watch?v=GcaDjvjf6fA
4.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பருவரை ஒன்று சுற்றி அரவம்
பண் - பழம்பஞ்சுரம்   (பொது -தசபுராணம் )
Audio: https://www.youtube.com/watch?v=Y5yd2BE7cIw
4.018   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம்   (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )
Audio: https://sivaya.org/audio/4.018 ondru kolaam avaravar.mp3
Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0
4.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
பண் - கொல்லி   (பொது -நினைந்த திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA
4.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டனேன் பட்டது என்னே! தூய
பண் - கொல்லி   (பொது -தனித் திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M
4.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள் அவா மனத்தன் ஆகி
பண் - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=bz7ls6HtjmQ
Audio: https://www.youtube.com/watch?v=tFKw3jGkwP8
4.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
பண் - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=cGo7sTd0afU
4.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்
பண் - திருநேரிசை   (பொது -குறைந்த நேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=0q7NJVbvNjk
4.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   தம் மானம் காப்பது ஆகித்
பண் - திருநேரிசை   (பொது -குறைந்த நேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=MZTHaYJyPyE
4.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   எட்டு ஆம் திசைக்கும் இரு
பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -ஆருயிர்த் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=8Rzb2aTC8Oo
4.111   திருநாவுக்கரசர்   தேவாரம்   விடையும் விடைப் பெரும் பாகா!
பண் - திருவிருத்தம்   (பொது -சரக்கறை திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=V2RlPFkwLy8
4.112   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=IGooaC72-8s
4.113   திருநாவுக்கரசர்   தேவாரம்   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s
5.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=n2pq1VKybbE
5.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் வீணையும், மாலை
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=J7MfBAIcQ04
5.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏ இலானை, என் இச்சை
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=XxaVOKR-ShI
5.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=B9FQAcbnw-g
5.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   காசனை, கனலை, கதிர் மா
பண் - திருக்குறுந்தொகை   (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=c2WcT__hjhA
5.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   புக்கு அணைந்து புரிந்து அலர்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=WI0HX_u-5aU
5.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொன் உள்ளத் திரள் புன்சடையின்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=SaeKB96LR80
5.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=HlK5Udb1OqY
Audio: https://www.youtube.com/watch?v=Sg6F6-2IZNM
Audio: https://www.youtube.com/watch?v=xuThl5Vc2Mg
5.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு அலைத்தது ஓர் மேனி,
பண் - திருக்குறுந்தொகை   (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=mbZXQYi281U
5.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாவமும் பழி பற்று அற
பண் - திருக்குறுந்தொகை   (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=VY4akPi1XfY
5.100   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=lk4SHPhE4ng
6.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,
பண் - தக்கேசி   (பொது -க்ஷேத்திரக்கோவை )
Audio: https://www.youtube.com/watch?v=fvw53cffuNU
6.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்
பண் - திருத்தாண்டகம்   (பொது -அடைவுத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=6DIhALQKGjY
Audio: https://www.youtube.com/watch?v=_h7Ni6-aIaw
6.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   அப்பன் நீ, அம்மை நீ,
பண் - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE
6.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw
6.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
பண் - திருத்தாண்டகம்   (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=WBrpAfWDe_4
6.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
பண் - திருத்தாண்டகம்   (பொது - மறுமாற்றம் )
Audio: https://www.youtube.com/watch?v=ySLUSOx0X50
7.063   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மெய்யை முற்றப் பொடிப் பூசி
பண் - தக்கேசி   (பொது -திருமுதுகுன்றம் )
Audio: https://www.youtube.com/watch?v=O7QN_V51nHE
9.012   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்
பண் -   (பொது -திரைலோக்கிய சுந்தரம் )
Audio: https://www.youtube.com/watch?v=HOLFzgY4IKs
Audio: https://www.youtube.com/watch?v=Iqo6harvYXs
Audio: https://www.youtube.com/watch?v=dLve31rr8K4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.116   அவ் வினைக்கு இவ் வினை  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் பொது -திருநீலகண்டப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[1]
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று, இருபொழுதும்,
பூவினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்;
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[2]
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்,
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்!
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

[3]
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

[4]
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[5]
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி,
பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[6]
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே
உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்;
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[7]
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்;
சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!

[8]
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்,
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[9]
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்,
இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண்
திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.008   சிவன் எனும் ஓசை அல்லது,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் பொது - சிவனெனுமோசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?-
அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்;
கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;
அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.

[1]
விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;
அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.

[2]
தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;
வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து
ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?

[3]
வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர,
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்;
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி,
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.

[4]
உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா;
இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒரு பால் இசைந்தது; ஒரு பால்,
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்;
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.

[5]
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல்கால் சிலம்ப, அழகு ஆர்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்;
மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம், அழலே.

[6]
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்;
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?

[7]
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்;
களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்-
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே.

[8]
மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்;
விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.

[9]
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது, ஒர் காது சுரிசங்கம் நின்று புரள,
விதி விதி வேத கீதம் ஒரு பாடும் ஓத, ஒரு பாடு மெல்ல நகுமால்;
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம்,  இயல்பே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.009   தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  
பண் - சாதாரி   (திருத்தலம் பொது - திருஅங்கமாலை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!

[1]
கண்காள், காண் மின்களோ!-கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை,-கண்காள், காண்மின்களோ!

[2]
செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை, செம்பவள
எரி போல், மேனிப் பிரான், திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ!

[3]
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கண்ணனை,
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்!

[4]
வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து,
பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- வாயே, வாழ்த்து கண்டாய்!

[5]
நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன் சடை நின் மலனை,
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,-நெஞ்சே, நீ நினையாய்!

[6]
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று,
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!

[7]
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து.
பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?

[8]
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?

[9]
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?

[10]
இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல் கணத்து எண்ணப் பட்டு,
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ?

[11]
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை, என் உள்ளே, தேடிக் கண்டு கொண்டேன்!

[12]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.011   நமச்சிவாய பதிகம், சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் பொது - நமசிவாயத் திருப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் இனி என்செய்வது என்று வினவினான். அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர். திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

[1]
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்;
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது;
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!

[2]
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!

[3]
இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
விடுக்கிற்பிரான்! என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கற் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!

[4]
வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்;
அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்;
திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!

[5]
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;
குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!

[6]
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்,
நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!

[7]
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!

[8]
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!

[9]
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.014   பருவரை ஒன்று சுற்றி அரவம்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் பொது -தசபுராணம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயம் ஆய்,
திரு நெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட, மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே! எனலும்,
அருள் கொடு மா விடத்தை, எரியாமல், உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.

[1]
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட, நிலம் நின்று தம்பம் அது அப்
பரம் ஒரு தெய்வம் எய்த, இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்,
பரமுதல் ஆய தேவர், சிவன் ஆயமூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

[2]
காலமும் நாள்கள் ஊழி படையா முன், ஏக உரு ஆகி, மூவர் உருவில்,
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி, நின்ற தழலோன்,
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறள் ஆய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரம் ஆய மூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

[3]
நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்,
ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே.

[4]
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று
அலை நலிவு அஞ்சி ஓடி, அரியோடு தேவர் அரணம் புக, தன் அருளால்-
கொலை நலி வாளி, மூள அரவு, அம் கை நாணும், அனல் பாய நீறு புரம் ஆம்-
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

[5]
நீல நல் மேனி, செங்கண், வளை வெள் எயிற்றின், எரிகேசன், நேடி வரும் நாள
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண், வந்து குறுகிப்
பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த, உயிர் வவ்வு பாசம் விடும்-அக்
காலனை வீடு செய்த கழல் போலும், அண்டர் தொழுது ஓது சூடு கழலே.

[6]
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில்,-அவி உண்ண வந்த இமையோா
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம் ஆய்-
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டு கொள்கை கடனே.

[7]
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா,
உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட, இருள் ஓட, நெற்றி ஒரு கண்
அலர்தர, அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச, மதி போல்
அலர்தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவன், ஆம், நமக்கு ஓர் சரணே.

[8]
கழை படு காடு தென்றல் குயில் கூவ, அஞ்சுகணையோன், -அணைந்து புகலும்
மழை வடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ, இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல,
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல் வண்ணன் எந்தை சரணே.

[9]
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக, நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை, எந்தை பெருமான், உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல் வித்து, அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி, ஆழியவனுக்கு அளித்த அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

[10]
கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது; கருதேல், உன் வீரம்; ஒழி, நீ!
முடுகுவது அன்று, தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா,
விடு விடு என்று சென்று விரைவு உற்று, அரக்கன், வரை உற்று எடுக்க, முடிதோள
நெடு நெடு இற்று வீழ, விரல் உற்ற பாதம் நினைவு உற்றது, என் தன் மனனே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.018   ஒன்று கொல் ஆம் அவர்  
பண் - இந்தளம்   (திருத்தலம் பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திங்களூரில் அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று திருநாவுக்கரசர் பெயரில் பல தர்மங்களை செய்து வந்தார். திங்களூர் வந்த திருநாவுக்கரசர். அப்பூதிஅடிகளைப் பற்றி கேள்வி பட்டு, அப்பூதியின் வீடு அடைந்தார். வந்தவர் திருநாவுக்கரசர் என்றவுடன், அப்பூதி வீடே மிகுந்த மகிழ்வுடன் அமுது தயார் செய்தார்கள். தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டி உயிர் துறந்தார். மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகளுக்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். மூத்த திருநாவுக் கரசை அழையும் என்று அப்பர் கூற, இப்போது அவன் இங்கு உதவான் என்று அப்பூதிகூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் ஒன்றுகொலாம் என்ற திருப் பதிகம் பாடியருளினர்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;
ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;
ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;
ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.

[1]
இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்;
இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண்,
இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு,
இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.

[2]
மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன;
மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை;
மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்;
மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.

[3]
நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன;
நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்;
நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.

[4]
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்;
அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன;
அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை;
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.

[5]
ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன;
ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்;
ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்;
ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.

[6]
ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன;
ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்;
ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.

[7]
எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்;
எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்;
எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன;
எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.

[8]
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன;
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை;
ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை;
ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.

[9]
பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்;
பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன;
பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை;
பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.074   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்  
பண் - கொல்லி   (திருத்தலம் பொது -நினைந்த திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[1]
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும்
இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச
வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[2]
கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை,
இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை,
பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[3]
செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல்
கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு
ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

[4]
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு
ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக
நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

[5]
கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்,
விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற
நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

[6]
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை,
சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர்
சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா
ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[7]
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும்
மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த
குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[8]
விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை,
கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை,
எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[9]
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள்
குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்-
அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.075   தொண்டனேன் பட்டது என்னே! தூய  
பண் - கொல்லி   (திருத்தலம் பொது -தனித் திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!

[1]
பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே!
என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள்
சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே!
நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!

[2]
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்;
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!

[3]
உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி,
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே.

[4]
வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா;
வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்;
வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று
வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே!

[5]
உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை,
உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி
எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே?

[6]
மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன்
வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்;
சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ!

[7]
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை!
சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை,
எங்கு உற்றாய்? என்ற போதா, இங்கு உற்றேன் என் கண்டாயே!

[8]
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ, புகுந்தீர்? என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு,
வெள்ளரோம்! என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.

[9]
பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்;
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.076   மருள் அவா மனத்தன் ஆகி  
பண் - திருநேரிசை   (திருத்தலம் பொது -தனித் திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்;
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும்
அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப்
பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!

[1]
மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி,
பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி,
தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு,
செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே!

[2]
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு
எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால்,
எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?

[3]
காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை ஆக,
வாய்மையே தூய்மை ஆக, மனமனி இலிங்கம் ஆக,
நேயமே நெய்யும் பாலா, நிறைய நீர் அமைய ஆட்டி,
பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே.

[4]
வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி
அஞ்சல்! என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே!
நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்;
நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே?

[5]
நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்;
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே! அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய்; நிலாவி நிற்க,
நோய் அவை சாரும் ஆகில், நோக்கி நீ அருள் செயாயே!

[6]
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே
வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே,
உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும்,
கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே?

[7]
ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய்,
ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,-
தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய
ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே!

[8]
நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம்
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்!
சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக்
குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே!

[9]
நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா;
அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்;
படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை;
கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.077   கடும்பகல் நட்டம் ஆடி, கையில்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் பொது -தனித் திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே!
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?

[1]
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும்,
தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும்,
பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை,
ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே?

[2]
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்;
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால்-தூய விண் ஏறல் ஆகும்;
விளக்கு இட்டார் பேறு, சொல்லின், மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்;
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளும் ஆறே!

[3]
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்,
வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே!

[4]
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று
துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார்
முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.

[5]
தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்;
அண்டனே! அமரர்கோவே! அறிவனே! அஞ்சல் என்னாய்-
தெண் திரைக் கங்கை சூடும் திருத் தகு சடையினானே!

[6]
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்;
ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!

[7]
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர
வைத்த கால், அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்;
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி தன் மேல்
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே.

[8]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.078   வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் பொது -குறைந்த நேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!
இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!

[1]
கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர் தங்களோடும்
உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்;
பெற்றிலேன்; பெருந் தடங்கண் பேதையார் தமக்கும் பொல்லேன்;
எற்று உளேன்? இறைவனே!-நான் என் செய்வான் தோன்றினேனே!

[2]
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்;
மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை;
ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

[3]
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே,
அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு இடைந்து உருகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!

[4]
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன்,
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!

[5]
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக்
கூச்சு இலேன்; ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்;
நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்
ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே!

[6]
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை,
பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை,
நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

[7]
விளைக்கின்ற வினையை நோக்கி, வெண் மயிர் விரவி, மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம்
திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன், இருமி ஊன்றி;-என் செய்வான் தோன்றினேனே!

[8]
விளைவு அறிவு இலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து
களைகணும் இல்லேன்; எந்தாய்! காமரம் கற்றும் இல்லேன்!
தளை அவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன்; எந்தாய்!-என் செய்வான் தோன்றினேனே!

[9]
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும்
எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.079   தம் மானம் காப்பது ஆகித்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் பொது -குறைந்த நேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!

[1]
மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும்
சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்;
கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்,
இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே!

[2]
கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து
ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்;
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே!

[3]
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்;
பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்;
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை
என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

[4]
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்;
பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்;
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

[5]
வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய,
தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்-
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன்,
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!

[6]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.084   எட்டு ஆம் திசைக்கும் இரு  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் பொது -ஆருயிர்த் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும்(ம்) இறைவா, முறை! என்று
இட்டார் அமரர் வெம் பூசல் எனக் கேட்டு, எரிவிழியா,
ஒட்டாக் கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால்
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[1]
பேழ்வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறிப் பிறங்கு-இலங்கு
தேய் வாய் இளம்பிறை செஞ்சடை மேல் வைத்த தேவர் பிரான்,
மூவான், இளகான், முழு உலகோடு மண் விண்ணும் மற்றும்
ஆவான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[2]
தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரி ஆர் இலங்கிய சூலத்தினான், இமையாத முக்கண்
பெரியான், பெரியார் பிறப்பு அறுப்பான், என்றும் தன் பிறப்பை
அரியான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[3]
வடிவு உடை வாள் நெடுங்கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி,
பொடி கொள் அகலத்துப் பொன் பிதிர்ந்தன்ன பைங்கொன்றை அம்தார்
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[4]
பொறுத்தான், அமரர்க்கு அமுது அருளி(ந்); நஞ்சம் உண்டு கண்டம்
கறுத்தான்; கறுப்பு அழகா உடையான்; கங்கை செஞ்சடை மேல்
செறுத்தான்; தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால்
அறுத்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[5]
காய்ந்தான், செறற்கு அரியான் என்று, காலனைக் கால் ஒன்றினால்
பாய்ந்தான்; பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால்
மேய்ந்தான்; வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல்
ஆய்ந்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[6]
உளைந்தான், செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால்
களைந்தான், அதனை நிறைய நெடுமால் கண் ஆர் குருதி
வளைந்தான், ஒரு விரலி(ந்)னொடு வீழ் வித்துச் சாம்பர் வெண் நீறு
அளைந்தான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[7]
முந்து இவ் வட்டத்து இடைப் பட்டது எல்லாம் முடி வேந்தர் தங்கள்
பந்தி வட்டத்து இடைப்பட்டு அலைப் புண்பதற்கு அஞ்சிக் கொல்லோ,
நந்தி வட்டம் நறு மா மலர்க் கொன்றையும் நக்க சென்னி
அந்தி வட்டத்து ஒளியான் அடிச் சேர்ந்தது, என் ஆர் உயிரே!

[8]
மிகத் தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய்ம் மருவி,
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்கு உறுப்பான்; வரும் பொன்
முகத்தால் குளிர்ந்திருந்து, உள்ளத்தினால் உகப்பான் இசைந்த
அகத்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[9]
பைம் மாண் அரவு அல்குல் பங்கயச் சீறடியாள் வெருவக்
கைம்மா, வரிசிலைக் காமனை, அட்ட கடவுள்; முக்கண்
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[10]
பழக ஒர் ஊர்தி அரன், பைங்கண் பாரிடம் பாணி செய்யக்
குழலும் முழவொடு மா நடம் ஆடி, உயர் இலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.111   விடையும் விடைப் பெரும் பாகா!  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் பொது -சரக்கறை திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[1]
விஞ்சத் தடவரை வெற்பா! என் விண்ணப்பம்; மேல் இலங்கு
சங்கக் கலனும், சரி கோவணமும், தமருகமும்,
அந்திப் பிறையும், அனல் வாய் அரவும், விரவி எல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[2]
வீந்தார் தலைகலன் ஏந்தீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சாந்து ஆய வெந்ததவள-வெண் நீறும், தகுணிச்சமும்,
பூந்தாமரை மேனி, புள்ளி உழை-மான் அதள், புலித்தோல்,
தாம்தாம் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[3]
வெஞ்சமர் வேழத்து உரியாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும், வான்மதியும்,
நஞ்சம் மா நாகம், நகுசிரமாலை, நகுவெண்தலை,
தஞ்சமா வாழும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[4]
வேலைக்-கடல் நஞ்சம் உண்டாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
காலற் கடந்தான் இடம் கயிலாயமும், காமர் கொன்றை,
மாலைப் பிறையும், மணி வாய் அரவும், விரவி எல்லாம்
சாலக் கிடக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[5]
வீழிட்ட கொன்றை அம்தாராய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சூழ் இட்டு இருக்கும் நல் சூளாமணியும், சுடலை நீறும்,
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும், அரவும், என்பு, ஆமை ஓடும்,
தாழ் இட்டு இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[6]
விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி-நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்-
தண்தார் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[7]
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை,
வடு விட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
தடுகுட்டம் ஆடும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[8]
வெண் திரைக் கங்கை விகிர்தா! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கண்டிகை பூண்டு, கடி சூத்திரம்மேல் கபாலவடம்,
குண்டிகை, கொக்கரை, கொன்றை, பிறை, குறள் பூதப்படை
தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[9]
வேதித்த வெம்மழு ஆளீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சோதித் திருக்கும், நல் சூளாமணியும், சுடலை நீறும்,
பாதிப்பிறையும், படுதலைத்துண்டமும், பாய் புலித்தோல்,
சாதித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[10]
விவந்து ஆடிய கழல் எந்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
தவந்தான் எடுக்கத் தலைபத்து இறுத்தனை; தாழ் புலித்தோல்
சிவந்து ஆடிய பொடி-நீறும், சிரமாலை சூடி நின்று
தவம் தான் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.112   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் பொது -தனித் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு
வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து,
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.

[1]
உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக்
கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப்
படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண்
சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே!

[2]
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ?
உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.

[3]
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!

[4]
முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து
எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்;
தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை,
தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே.

[5]
விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த
மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய
பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன்
கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே.

[6]
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய்,
வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே.

[7]
வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.

[8]
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால்,
இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே!

[9]
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை-
பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று,
மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.113   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் பொது -தனித் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே
பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல்
பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும்,
பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே.

[1]
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும்
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த
இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால்,
தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே!

[2]
மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை
காவாய்! என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால்
தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.

[3]
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும்
நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?

[4]
அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான்,
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ-
சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே?

[5]
உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப்
பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்;
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான்
தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே.

[6]
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்;
வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும்
இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்!ப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே!

[7]
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால், பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ? என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.

[8]
வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன்,
சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல்
வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய்,
ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே.

[9]
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,
பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.

[10]
மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து
மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.089   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

[1]
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்;
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்;
இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து,
இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.

[2]
மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்
மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்;
மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்;
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.

[3]
நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம்
நாலுவேதம்,-சரித்ததும்,-நன்நெறி
நாலுபோல்-எம் அகத்து உறை நாதனே.

[4]
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை
அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம்
அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்;
அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.

[5]
ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்;
ஆறு சூடிய அண்ட முதல்வனார்;
ஆறு கூர்மையர்க்கு அச் சமயப் பொருள்
ஆறுபோல்-எம் அகத்து உறை ஆதியே.

[6]
ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்-
ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு-
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல்,
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.

[7]
எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில்,
எட்டு வான் குணத்து, ஈசன் எம்மான்தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே;
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே.

[8]
ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு;
ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,
ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை;
ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.

[9]
பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்;
பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை;
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.090   மாசு இல் வீணையும், மாலை  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சாரவேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான். திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்த போது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுபடுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தங்களது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

[1]
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.

[2]
ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்;
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;
தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி?
வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே!

[3]
நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண் இலீர்?
சுடலை சேர்வது சொல் பிரமாணமே;
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்,
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!

[4]
பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்;
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,
காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!

[5]
குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும்,
நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,
பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?

[6]
வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

[7]
எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான்,
தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்து கொண்டு,
உழுத சால்வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!

[8]
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்,
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.

[9]
விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.091   ஏ இலானை, என் இச்சை  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

[1]
முன்னை ஞான முதல்-தனி வித்தினை;
பின்னை ஞானப் பிறங்கு சடையனை;
என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன்
தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.

[2]
ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

[3]
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை;
புழுவினும் கடையேன் புனிதன் தமர்-
குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?

[4]
மலையே வந்து விழினும், மனிதர்காள்!
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே?
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை,
கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?

[5]
கற்றுக் கொள்வன வாய் உள, நா உள;
இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள;
கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்;
எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?

[6]
மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்;
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே?
புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி
இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.

[7]
என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்;
தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.

[8]
தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி;
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்-
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.092   கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -காலபாசத் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!

[1]
நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக்
கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே!

[2]
கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை
நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!

[3]
சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன்,
சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்,
போற்றி! என்று உரைப்பார் புடை போகலே!

[4]
இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்!
பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர்,
நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!

[5]
வாமதேவன் வள நகர் வைகலும்,
காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு
தாமம், தூபமும், தண் நறுஞ் சாந்தமும்,
ஏமமும், புனைவார் எதிர் செல்லலே!

[6]
படையும் பாசமும் பற்றிய கையினீர்!
அடையன்மின், நமது ஈசன் அடியரை!
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடை புகாது, நீர், போற்றியே போமினே!

[7]
விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும்,
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே;
அச்சம் எய்தி அருகு அணையாது, நீர்,
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே!

[8]
இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார்,
மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்-
தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!

[9]
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம்,
ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால்
பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!

[10]
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்,
சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர்
சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.

[11]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000