9.005 சேந்தனார் - திருவீழிமிழலை (திருவீழிமிழலை ) |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9.005  
சேந்தனார் - திருவீழிமிழலை
பண் - (திருத்தலம் திருவீழிமிழலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=CxQDHD6c8PA
Audio: https://www.youtube.com/watch?v=Kke8qkjlv0s
Audio: https://www.youtube.com/watch?v=_ou2wl3evf0
ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் யோகநா யகனை அன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே. | [1] |
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே. | [2] |
மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த மருந்தைஎன் மாறிலா மணியைப் பண்டலர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு) எளியதோர் பவளமால் வரையை விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ் திருவீழி மிழலையூர் ஆளும் கொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக் குறுகவல் வினைகுறு காவே. | [3] |
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த சசிகுலா மவுலியைத் தானே என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர் மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி மிழலையுள் விளங்குவெண் பளிங்கின் பொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக விடுவனோ பூண்டுகொண் டேனே. | [4] |
இத்தெய்வ நெறிநன் றென்(று)இருள் மாயப் பிறப்பறா இந்திர சாலப் பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த புராணசிந்தா மணி வைத்த மெய்த் தெய்வ நெறிநான் மறையவர் வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் அத்தெய்வ நெறியிற் சிவமலா(து) அவமும் அறிவரோ அறிவுடை யோரே. | [5] |
அக்கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோ(டு) அழுந்தியான் அவமே புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட புனிதனை வனிதைபா கனைஎண் திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப் பொடியணிந்(து) அடிமைபூண் டேனே. | [6] |
கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும் கமழ்பொழில் தழுவிய கழனித் திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ் மாடநீ டுயர்திரு வீழித் தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி நம்பியைத் தன்பெருஞ் சோதி மங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை வருந்திநான் மறப்பனோ இனியே. | [7] |
ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக் கண்முக கரசர ணத்தோன் பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த படர்சடை மின்னுபொன் முடியோன் வேயிருந் தோளி உமைமண வாளன் விரும்பிய மிழலைசூழ் பொழிலைப் போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தரா திகளே. | [8] |
எண்ணில்பல் கோடி சேவடி முடிகள் எண்ணில்பல் கோடிதிண் தோள்கள் எண்ணில்பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும் எண்ணில்பல் கோடி எல்லைக்(கு)அப் பாலாய் நின்(று)ஐஞ்ஞூற்(று) அந்தணர் ஏத்தும் எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி இவர்நம்மை ஆளுடை யாரே. | [9] |
தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் மிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன் மறலிவேள் இவர்மிகை செகுத்தோன் திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப் பொடியணிந்(து) அடிமைபூண் டேனே. | [10] |
உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல் அருள்சொரி தரும்உமா பதியை வளங்கிளர் நதியும் மதியமும் சூடி மழவிடை மேல்வரு வானை விளங்கொளி வீழி மிழலைவேந் தேயென்(று) ஆந்தனைச் சேந்தன்தா தையையான் களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனககற் பகமே. | [11] |
பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி நீடலங் காரத்து எம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்துநின் றானை வேடலங் காரக் கோலத்தின் அமுதைத் திருவீழி மிழலையூர் ஆளும் கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக் கெழுமுதற்(கு) எவ்விடத் தேனே. | [12] |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9.006  
சேந்தனார் - திருவாவடுதுறை
பண் - (திருத்தலம் திருவாவடுதுறை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=4wIBnbeq_Rk
Audio: https://www.youtube.com/watch?v=Mpevt7yqbgQ
Audio: https://www.youtube.com/watch?v=b1qy2RLVlSg
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேய ஐயா ! திருவா வடுதுறை அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால் மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று) அருளாது ஒழிவது மாதிமையே. | [1] |
மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ் சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழி யோர்தொழும் ஆதி அமரர் புராணனாம் அணிஆ வடுதுறை நம்பிநின்ற நீதி அறிகிலள் பொன்நெடும் திண்தோள் புணர நினைக்குமே. | [2] |
நினைக்கும் நிரந்தர னே !என்னும் நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர் நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல் நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் ! மனக்கின்ப வெள்ள மலைமகள் மணவாள நம்பிவண் சாந்தையூர் தனக்கின்பன் ஆவடு தண்துறைத் தருணேந்து சேகரன் என்னுமே. | [3] |
தருணேந்து சேகர னேஎனும் தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப் பொருள்நேர்ந்த சிந்தை யவர்தொழப் புகழ்செல்வம் மல்குபொற் கோயிலுள் அருள்நேர்ந்(து) அமர்திரு வாவடு துறையாண்ட ஆண்டகை அம்மானே தெருள்நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே. | [4] |
திலக நுதல்உமை நங்கைக்கும் திருவா வடுதுறை நம்பிக்கும் குலக அடியவர்க்(கு) என்னையாட் கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல் அலதொன்(று) அறிகின்றி லேம்எனும் அணியும்வெண் ணீ(று)அஞ் செழுத்தலால் வலதொன் றிலள்இதற்(கு) என்செய்கேன் வயலந்தண் சாந்தையர் வேந்தனே ! | [5] |
வேந்தன் வளைத்தது மேருவில் அரவுநாண் வெங்கணை செங்கண்மால் போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப் புரவித்தேர் சாந்தை முதல் அயன் சாரதி கதியருள் என்னும் இத் தையலை ஆந்தண் திருவா வடுதுறையான் செய்கை யாரறி கிற்பாரே. | [6] |
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்(கு) எழுந்தோ டிக்கெட்ட அத்தேவர்கள் சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்என் சொல்லிச் சொல்லும் இத் தூமொழி கற்போல் மனம்கனி வித்தஎங் கருணால யாவந்திடாய் என்றால் பெற்போ பெருந்திரு வாவடு துறையாளி பேசா(து) ஒழிவதே. | [7] |
ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும் மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும் முனிகோடி கோடியா மூர்த்தியும் அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர் அணிஆ வடுதுறை ஆடினாள் இழிவொன்றி லாவகை எய்திநின்(று) இறுமாக்கும் என்னிள மானனே. | [8] |
மானேர் கலைவளையும் கவர்ந்துளம் கொள்ளை கொள்ளவழக்(கு) உண்டே ! தேனே ! அமுதே !என் சித்தமே ! சிவலோக நாயகச் செல்வமே ! ஆனேஅ லம்புபுனற் பொன்னி அணியா வடுதுறை அன்பர்தம் கோனே !நின் மெய்யடி யார்மனக் கருத்தை முடித்திடுங் குன்றமே ! | [9] |
குன்றேந்தி கோகன கத்(து)அயன் அறியா நெறிஎன்னைக் கூட்டினாய் என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள் இளவல்லி எல்லை கடந்தனள் அன்றே அலம்பு புனற்பொன்னி அணியா வடுதுறை ஆடினாள் நன்றே இவள் நம் பரமல்லள் நவலோக நாயகன் பாலளே. | [10] |
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான் போலும்என் ஆருயிர்ப் போகமாம் புரகால காமபு ராந்தகன் சேலும் கயலும் திளைக்குநீர்த் திருவா வடுதுறை வேந்தனோ(டு) ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவைபொய் யாததே. | [11] |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9.007  
சேந்தனார் - திருவிடைக்கழி
பண் - (திருத்தலம் திருவிடைக்கழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=1vuwyId6-SU
Audio: https://www.youtube.com/watch?v=6tWeIEDg-M0
Audio: https://www.youtube.com/watch?v=6vC6iwpjUVg
மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளும் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே. | [1] |
இவளைவா ரிளமென் கொங்கைபீர் பொங்க எழில் கவர்ந் தான்இளங் காளை கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவரும் கள்வன் திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும் குழகன்நல் அழகன்நங் கோவே. | [2] |
கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன் காவல்நற் சேனையென் னக்காப் பவன்என் பொன்னை மேகலை கவர்வானே தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயில் ஊரும் சுப்பிர மண்ணியன் தானே. | [3] |
தானமர் பொருது தானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலவிளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே ! | [4] |
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளாத(து) அழகோ மணமணி மறையோர் வானவர் வையம் உய்யமற்(று) அடியனேன் வாழத் திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிளையே. | [5] |
கிளையிளங் சேயக் கிரிதனை கீண்ட ஆண்டகை கேடில்வேற் செல்வன் வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை கார்நிற மால்திரு மருகன் திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற முளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு) அருளுங்கொல் முருகவேள் பரிந்தே. | [6] |
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ சுந்தரத்(து) அரசிது என்னத் தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல் மையல்கொண்(டு) ஐயறும் வகையே. | [7] |
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை வானமர் விளைத்ததா ளாளன் புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன் திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என் துடியிடை மடல்தொடங் கினளே. | [8] |
தொடங்கினள் மடலென்(று) அணிமுடித் தொங்கல் புறஇதழ் ஆகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து) அறுமுகத்(து) அமுதினை மருண்டே. | [9] |
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர் வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. | [10] |
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூய்மொழி அமரர்கோ மகனைச் செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் இவைசுவா மியையே செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே. | [11] |