9.001 திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9.001  
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=5iRwR3Nng10
Audio: https://www.youtube.com/watch?v=qfokVeeAam0
Audio: https://www.youtube.com/watch?v=rkPKs6yF0rc
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே ! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே. | [1] |
இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள் இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூயநற் சோதியுள் சோதீ ! அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா ! அயனொடு மாலறி யாமைப் படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே. | [2] |
தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா ! சாமகண்டா ! அண்ட வாணா ! நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத் தந்தபொன் அம்பலத்து அரசே ! கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத் தொண்டனேன் கருதுமா கருதே. | [3] |
பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என் பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே ! கருமையின் வெளியே கயற்கணாள் இமவான் மகள்உமை யவள்களை கண்ணே ! அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே. | [4] |
கோலமே மேலை வானவர் கோவே ! குணங்குறி இறந்ததோர் குணமே ! காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா! காம நாசா ! ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற் கோயில்கொண்டு ஆடவல் லானே ! ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே. | [5] |
நீறணி பவளக் குன்றமே ! நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே ! வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா ! ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத் தரசே ! ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே. | [6] |
தனதன்நல் தோழா சங்கரா ! சூல பாணியே! தாணுவே சிவனே ! கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே கண்கள்மூன் றுடையதோர் கரும்பே ! அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரசே கரனே ! நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே. | [7] |
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் தனைத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே ! அறம்பல திறங்கண்டு அருந்தவர்க்கு அரசாய் ஆலின்கீழ் இருந்தஅம் பலவா ! புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே. | [8] |
தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம் நெறித்தரு ளியவுருத் திரனே ! அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட ஆடப்பொன் னம்பலத்து ஆடும் சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே. | [9] |
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு அருள்புரி வள்ளலே ! மருளார் இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர் ஏறிய ஏறுசே வகனே ! அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ் அடர்த்தபொன் னம்பலத் தரசே ! விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே. | [10] |
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன்திரு மாலொடு மயங்கி முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள் அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள் நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே.
| [11] |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9.002  
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=WUr9nMreBwU
Audio: https://www.youtube.com/watch?v=scvCJ54-XNo
Audio: https://www.youtube.com/watch?v=xHDI7yMfkWo
உயர்கொடி யாடை மிடைபட லத்தின் ஓமதூ மப்பட லத்தின் பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச் சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்தசிற் றம்பலக் கூத்தா ! மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே வடிகள்என் மனத்துவைத் தருளே. | [1] |
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் கனகமா ளிகைகலந் தெங்கும் பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம் திரண்டசிற் றம்பலக் கூத்தா ! உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன்னடிக் கீழ(து)என் னுயிரே. | [2] |
வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம் கரும்பொடு மாந்துமே திகள்சேர் பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச் சிரம்புரை முடிவா னவர்அடி முறையால் இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால் நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே. | [3] |
தேர்மலி விழவில் குழலொலி தெருவில் கூத்தொலி ஏத்தொலி ஓத்தின் பேரொலி பரந்து கடலொலி மலியப் பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச் சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில் திழந்தசிற் றம்பலக் கூத்தா ! வார்மலி முலையாள் வருடிய திரள்மா மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே. | [4] |
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு) இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப் பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதணம் முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச் சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த செம்பொற் சிற்றம்பலக் கூத்தா ! பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக் கச்சுநூல் புகுந்ததென் புகலே. | [5] |
அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று) அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச் செதுமதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச் சிற்றம்பலக் கூத்தா ! மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே. | [6] |
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடியணி பூணநூல் அகலம் பெருவரை புரைதிண் தோளுடன் காணப் பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த் திருமரு(வு) உதரத் தார்திசை யடைப்ப நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா ! உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே. | [7] |
கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க் கங்கணம் செங்கைமற் றபயம் பிணிகெட இவைகண்(டு) உன்பெரு நடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த் திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே ! சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா ! அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே. | [8] |
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர் திருக்கடைக் காவலின் நெருக்கிப் பெருமுடி மோதி உகுமணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச் செருநெடு மேரு வில்லின்முப் புரம்தீ விரித்தசிற் றம்பலக் கூத்தா ! கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல மலர்முகம் கலந்த(து)என் கருத்தே. | [9] |
ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம் பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன் பேர்கள்ஆ யிரம்நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச் சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா ! நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம் நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. | [10] |
காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன் படக்கடைக் கணித்தவன் அல்லாப் பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச் சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட செல்வச்சிற் றம்பலக் கூத்தா ! பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள் பொறுப்பர்என் புன்சொலின் பொருளே. | [11] |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9.003  
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=4GI1EP9_Ov4
Audio: https://www.youtube.com/watch?v=q0_f2Zr0ucY
Audio: https://www.youtube.com/watch?v=sfukyR4JIPY
உறவா கியயோ கமும்போ கமுமாய் உயிராளீ என்னும்என் பொன்னொருநாள் சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற மறவா என்னும் மணிநீர் அருவி மகேந்திர மாமலைமேல் உறையும் குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [1] |
காடாடு பல்கணம் சூழக் கேழற் கடும்பின் நெடும்பகற் கான்நடந்த வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும் வினையேன் மடந்தைவிம் மாவெருவும் சேடா என்னும் செல்வர்மூ வாயிரம் செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும் கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [2] |
கானே வருமுரண் ஏனம் எய்த களியார் புளினநற்கா ளாய்என்னும் வானே தடவும் நெடுங் குடுமி மகேந்திர மாமலை மேலிருந்த தேனே என்னும் தெய்வவாய் மொழியார் திருவாளர்மூ வாயிரவர் தெய்வக் கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [3] |
வெறியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள் விசயற்(கு) அருள்செய்த வேந்தே என்னும் மறியேறு சாரல் மகேந் திரமா மலைமேல் இருந்த மருந்தே ! என்னும் நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக் குறியே !என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [4] |
செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல் திரைவீரை தீங்குழல் சேவின்மணி எழுந்தின்று என்மேல் பகையாட வாடும் எனைநீ நலிவதென் னேஎன்னும் அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு) அரசுக் கரசே ! அமரர்தனிக் கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [5] |
வண்டார் குழலுமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத் தின்பின் கண்டார் கவல வில்லாடி வேடர் கடிநா யுடன்கை வளைந்தாய் ! என்னும் பண்டாய மலரயன் தக்கன் எச்சன் பகலோன் தலைபல் பசுங்கண் கொண்டாய் என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [6] |
கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்(டு) உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை வராக முன்னோடி விளியுளைப்ப நடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத்(து) அரையா என்பார்க்கு நாதாந்தபதம் கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [7] |
சேவேந்து வெல்கொடி யானே ! என்னும் சிவனே ! என் சேமத்துணையே என்னும் மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில் வளர்நா யகா ! இங்கே வாராய் என்னும் பூவேந்தி மூவா யிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற கோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [8] |
தரவார் புனம்சுனை தாழ்அருவித் தடம்கல் லுறையும் மடங்கல் அமர் மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும் மழைசூழ் மகேந்திர மாமலைமேல் சுரவா ! என்னும் சுடர்நீள் முடிமால்அயன் இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம் குரவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [9] |
திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப் பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள் பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும் வருநீர் அருவி மகேந்திரப்பொன் மலையின் மலைமக ளுக்கருளும் குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
| [10] |
உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று) உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப் பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப் பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும் சுற்றாய சோதி மகேந்திரம் சூழ மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில் குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [11] |
வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து) அவனிச் சிவலோக வேதவென்றி மாறாத மூவாயிர வரையும் எனையும் மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும் ஆறார் சிகர மகேந்திரத்(து) உன் அடியார் பிழைபொறுப்பாய் மாதோர் கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [12] |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9.004  
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=1j-NRVYzTe0
Audio: https://www.youtube.com/watch?v=BsT_xXqAIOw
Audio: https://www.youtube.com/watch?v=NB60NNrqsvk
இணங்கிலா ஈசன் நேசத்(து) இருந்தசித் தத்தி னேற்கு மணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக் குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப் பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [1] |
எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி விட்டிலங்(கு) அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [2] |
அருள்திரள் செம்பொன் சோதி அம்பலத் தாடுகின்ற இருள்திரள் கண்டத் தெம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யா அரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்க ளாய பிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [3] |
துணுக்கென அயனும் மாலும் தொடர்வரும் சுடராய் இப்பால் அணுக்கருக்(கு) அணிய செம்பொன் அம்பலத் தாடிக்(கு) அல்லாச் சிணுக்கரைச் செத்தற் கொத்தைச் சிதம்பரைத் சீத்தை ஊத்தைப் பிணுக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப்பேய்க ளோடே. | [4] |
திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக் கூத்(து) உகந்து தீய நசிக்கவெண் ணீற(து) ஆடும் நமர்களை நணுகா நாய்கள் அசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப் பிசுக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [5] |
ஆடர(வு) ஆட ஆடும் அம்பலத்(து) அமிர்தே என்னும் சேடர்சே வடிகள் சூடத் திருவிலா உருவி னாரைச் சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப் பேடரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே. | [6] |
உருக்கிஎன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல் மாறாத் திருக்குறிப்(பு) அருளும் தில்லைச் செல்வன்பாற் செல்லும் செல்வில் அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப் பெருக்கரைக் காணா கண்வாய் பேசா(து)அப் பேய்க ளோடே. | [7] |
செக்கர்ஒத்(து) இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லைச் சொக்கர்அம் பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டா எக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத்த ராதிப் பொக்கரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே. | [8] |
எச்சனைத் தலையைக் கொண்டு செண்டடித்(து) இடபம் ஏறி அச்சங்கொண்(டு) அமரர் ஓட நின்றஅம் பலவற்(கு) அல்லாக் கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசுநூல் கற்கும் பிச்சரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [9] |
விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும் அண்ணல்அம் பலவன் கொற்ற அரசனுக்(கு) ஆசை இல்லாத் தெண்ணரைத் தெருளா உள்ளத்(து) இருளரைத் திட்டை முட்டைப் பெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [10] |
சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம் உறைப்புடை யடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ(று) ஆடார் இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [11] |