சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
திருவிசைப்பா

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.022   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=CT2NY76fkys
Audio: https://www.youtube.com/watch?v=NYMysGOpkRc
Audio: https://www.youtube.com/watch?v=ceD-7NUFGIQ

9.022 திருவாலியமுதனார் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
மையல் மாதொரு கூறன் மால்விடை
   யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக்
   கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
   நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென்
   சிந்தையுள்ளிடம் கொண்டனவே.
திருவடிகள்
[1]
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த
   தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
   யார்தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து)
   ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என்
   சிந்தையுள்ளிடங் கொண்டனவே.
கிண்கிணி
[2]
குருண்ட வார்குழல் கோதை மார்குயில்
   போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள்
   திருமல்கு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ
   ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
   யுள்ளிடங் கொண்டனவே.
திருத்துடை
[3]
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
   மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ்
   தடமல்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
   வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே
   தமியேனைத் தளர்வித்ததே.
பூணூல், கச்சு
[4]
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம்
   நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வணங்கும் அணியார்
   தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும்
   திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்சுழி என்உள்ளத்துள்ளிடங்
   கொண்டனவே.
திருமேனி, வயிறு, உந்தி
[5]
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து)
   ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரவாய் மொழியார் மகிழ்ந்தேத்து
   சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
   காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்
   துள்ளிடங் கொண்டனவே.
அணிகள்
[6]
படங்கொள் பாம்பணை யானொடு
   பிரமன் பரம்பரமா அருளென்று
தடங்கையால் தொழவும்
   தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும்
   தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே
   வினையேனை மெலிவித்தவே.
திருக்கைகள் முதலியன
[7]
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு
   தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு
   சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும்
   காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே
   அடியேனை ஆட்கொண் டனவே.
பல், காது முதலியன
[8]
செற்றுவன் புரந்தீ எழச்சிலை கோலி
   ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறிநீர்த்
   தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு
   மலரும் திருமுக மும்முகத்தினுள்
நெற்றி நாட்டம் அன்றே
   நெஞ்சு ளேதிளைக் கின்றனவே.
திருமுகம் முதலியன
[9]
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக்
   கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய்
   தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ்
   அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே
   பிரியா(து) என்னுள் நின்றனவே.
திருமுடி
[10]
தூவி நீரொடு பூஅவை தொழு(து)
   ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய
   அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக்
   கூத்தனைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே.
[11]

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.023   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=JWNaGVHhL7w
Audio: https://www.youtube.com/watch?v=v7OKvzP2umQ
Audio: https://www.youtube.com/watch?v=vY6Nc5l-Uf0
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
   அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
   துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு
   தில்லையுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
   என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.
   
[1]
ஒக்க ஒட்டந்த அந்தியும்
   மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப்
   பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு
   தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன்
   மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே.
[2]
அலந்து போயினேன் அம்பலக்
   கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று)
   அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக்
   காலனை உயிர்செக வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை
   மேலொற்ற வந்தருள் செய்யாயே.
[3]
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக்
   கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை
   பொன்பயப் பிப்பது வழக்கமோ
திரளும் நீள்மணிக் கங்கையைத்
   திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல்
   அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.
[4]
வைத்த பாதங்கள் மாலவன்
   காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந்(து) இன்னமும்
   துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
   தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட
   என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.
[5]
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைந்து
   அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை
   வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர்
   தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள்
   காண்பதோர் மனத்தினை உடையேற்கே.
[6]
உடையும் பாய்புலித் தோலும்நல்
   அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வதும் மேவிடங்
   கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும்
   வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று
   ஆரையும் உள்ளுவது அறியேனே.
[7]
அறிவும் மிக்கநல் நாணமும்
   நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு
   தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன்
   ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர்
   ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.
[8]
வான நாடுடை மைந்தனே !
   ஓஎன்பன் வந்தரு ளாய் என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய
   படர்சடைப் பால்வண்ணனேஎன்பன்
தேனமர் பொழில் சூழ்தரு
   தில்லையுள் திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூணணி
   மார்பனே ! எனக்கருள் புரியாயே.
[9]
புரியும் பொன்மதில் சூழ்தரு
   தில்லையுள் பூசுரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக்
   காதலித்(து) இனைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர்
   மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர்
   பரமன(து) அடியிணை பணிவாரே.
   
[10]

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.024   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=LICJjJlbpv0
Audio: https://www.youtube.com/watch?v=o7JmpRbLGqw
Audio: https://www.youtube.com/watch?v=xckZv-Pze3M
அல்லாய்ப் பகலாய் அருவாய்
   உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை
   மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள்
   பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு)
   அருளித் தேவன் ஆடுமே.
[1]
அன்ன நடையார் அமுத
   மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
   கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
   தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
   காண விகிர்தன் ஆடுமே.
[2]
இளமென் முலையார் எழில்மைந்
   தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத்திருவார் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர
   மலைபோல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர்
   போற்ற அழகன் ஆடுமே.
[3]
சந்தும் அகிலும் தழைப்பீ
   லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின்
   கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப்
   பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட
   நட்டம் நாதன் ஆடுமே.
[4]
ஓமப் புகையும் அகிலின்
   புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்
   மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த
   பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள்
   சூடித் தேவன் ஆடுமே.
[5]
குரவம் கோங்கம் குளிர்புன்னை
   கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
   மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்
   டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
   ஏந்தி அழகன் ஆடுமே.
[6]
சித்தர் தேவர் இயக்கர்
   முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா! அருளாய் அணியம்
   பலவா! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த
   தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ
   நட்டம் குழகன் ஆடுமே.
[7]
அதித்த அரக்கன் நெரிய
   விரலால் அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்கும்
   தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக்
   கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள
   மேனிப் பரமன் ஆடுமே.
[8]
மாலோ(டு) அயனும் அமரர்
   பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா ! அரனே !
   அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை
   மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள்
   தாழப் பரமன் ஆடுமே.
[9]
நெடிய சமணும் அறைசாக்
   கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத்
   தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆரூர்
   நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய
   கோலக் குழகன் ஆடுமே.
[10]
வானோர் பணிய மண்ணோர்
   ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை
   மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத
   வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும்
   பாடப் பாவ நாசமே.
   
[11]

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.025   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Rjjr_Zh1fGA
Audio: https://www.youtube.com/watch?v=tSJh8XEFreE
Audio: https://www.youtube.com/watch?v=zBuAyJw7Mr8
கோல மலர்நெடுங்கண் கொவ்வை
   வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப்
   பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை
   என்றுகொல் காண்பதுவே.
[1]
காண்பதி யான் என்றுகொல்
   கதிர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று)
   அறிதற்கு அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ்
   தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறையோன்
   மலர்ப் பாதங்களே.
[2]
கள்ளவிழ் தாமரைமேல்
   கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந்
   தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ்
   தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற
   ஒருவனை உணர்வரிதே.
[3]
அரிவையோர் கூறுகந்தான் அழகன்
   எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம்
   உகந்தானும் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய்
   புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற
   எம்பிரான்என் இறையவனே.
[4]
இறைவனை என்கதியை
   என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும்
   மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை
   நினைத்தேன் இனிப் போக்குவனே.
[5]
நினைத்தேன் இனிப்போக்குவனோ நிமலத்
   திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த
   மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக்
   கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தோடு வந்தெறியும்
   தில்லைமாநகர்க் கூத்தனையே.
[6]
கூத்தனை வானவர்தம் கொழுந்தைக்
   கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவுருவின்
   முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர்
   தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற
   எம்பிரானடி சேர்வன்கொலோ.
[7]
சேர்வன்கொலோ அன்னைமீர்
   திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று)
   என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும்
   தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான்
   என்பால் நேசனையே.
[8]
நேசமு டையவர்கள் நெஞ்சுளே
   யிடங்கொண் டிருந்த
காய்சின மால்விடையூர்
   கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர்
   தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும்
   எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.
[9]
இறைவனை ஏத்துகின்ற
   இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள்
   மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின்
   அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை
   மகிழ்ந்தேத்துக வானெளிதே.
   
[10]

This page was last modified on Sun, 09 Mar 2025 21:44:56 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D book name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+ lang tamil