9.022 திருவாலியமுதனார் - கோயில் (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.022  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=CT2NY76fkys
Audio: https://www.youtube.com/watch?v=NYMysGOpkRc
Audio: https://www.youtube.com/watch?v=ceD-7NUFGIQ
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம் கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான் ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான் செய்ய பாதம் வந்தென் சிந்தையுள்ளிடம் கொண்டனவே. திருவடிகள் | [1] |
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன் புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல் சிலம்பு கிண்கிணி என் சிந்தையுள்ளிடங் கொண்டனவே. கிண்கிணி | [2] |
குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை திரண்ட தில்லை தன்னுள் திருமல்கு சிற்றம் பலவன் மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே. திருத்துடை | [3] |
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன் தாழ்ந்த தண்புனல்சூழ் தடமல்கு சிற்றம்பலவன் சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடு தாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளர்வித்ததே. பூணூல், கச்சு | [4] |
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம் நீக்கிய பன்முனிவரோ(டு) அந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன் செந்தழல் புரைமேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் உந்திவான்சுழி என்உள்ளத்துள்ளிடங் கொண்டனவே. திருமேனி, வயிறு, உந்தி | [5] |
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு மதுரவாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன் அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ் உதர பந்தனம் என்னுள்ளத் துள்ளிடங் கொண்டனவே. அணிகள் | [6] |
படங்கொள் பாம்பணை யானொடு பிரமன் பரம்பரமா அருளென்று தடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன் தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசை விடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே. திருக்கைகள் முதலியன | [7] |
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு சிற்றம் பலவன் செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு) ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண் டனவே. பல், காது முதலியன | [8] |
செற்றுவன் புரந்தீ எழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன் எற்றி மாமணிகள் எறிநீர்த் தில்லை அம்பலவன் மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுக மும்முகத்தினுள் நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே. திருமுகம் முதலியன | [9] |
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தர மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன் முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும் பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே. திருமுடி | [10] |
தூவி நீரொடு பூஅவை தொழு(து) ஏத்து கையின ராகி மிக்கதோர் ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய அன்பினராய்த் தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தனைத் திருவாலி சொல்லிவை மேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே. | [11] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.023  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=JWNaGVHhL7w
Audio: https://www.youtube.com/watch?v=v7OKvzP2umQ
Audio: https://www.youtube.com/watch?v=vY6Nc5l-Uf0
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்திரு நடம்புரி கின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. | [1] |
ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச் செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே பக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே. | [2] |
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ சிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனே உலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செக வுதைகொண்ட மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே. | [3] |
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே ! அணிதில்லை நகராளீ மருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோ திரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு) உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே. | [4] |
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப் பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே. | [5] |
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைந்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும் காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும் ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல் வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே. | [6] |
உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்து விடைய(து) ஊர்வதும் மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம் மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும் உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே. | [7] |
அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும் உடன்பிறந் தவரோடும் பிறிய விட்டுனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின் மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே. | [8] |
வான நாடுடை மைந்தனே ! ஓஎன்பன் வந்தரு ளாய் என்பன் பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனேஎன்பன் தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற ஏன மாமணிப் பூணணி மார்பனே ! எனக்கருள் புரியாயே. | [9] |
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர்போற்ற எரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனைபவள் மொழியாக வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியிணை பணிவாரே. | [10] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.024  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=LICJjJlbpv0
Audio: https://www.youtube.com/watch?v=o7JmpRbLGqw
Audio: https://www.youtube.com/watch?v=xckZv-Pze3M
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க் கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச் செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே. | [1] |
அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத் தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே. | [2] |
இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல் திளையும் மாடத்திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்(று) அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே. | [3] |
சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்டு உந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச் சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலந்தன்னுள் நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே. | [4] |
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்துமுகில்தோயத் தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள் வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத் தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே. | [5] |
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல் திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் வரைபோல் மலிந்த மணிமண் டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே. | [6] |
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை அத்தா! அருளாய் அணியம் பலவா! என்றென் றவரேத்த முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக் கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே. | [7] |
அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்று துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும் பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே. | [8] |
மாலோ(டு) அயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்(று) ஆல கண்டா ! அரனே ! அருளாய் என்றென்(று) அவரேத்தச் சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் பாலா டுமுடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே. | [9] |
நெடிய சமணும் அறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச் செடியும் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசைபாடக் கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே. | [10] |
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும் தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத் தானைத் தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப் பானேர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே. | [11] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.025  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Rjjr_Zh1fGA
Audio: https://www.youtube.com/watch?v=tSJh8XEFreE
Audio: https://www.youtube.com/watch?v=zBuAyJw7Mr8
கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர் பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச் சேலுக ளும்வயல்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்(து) ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே. | [1] |
காண்பதி யான் என்றுகொல் கதிர்மாமணி யைக்கனலை ஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கு அரி தாயவனைச் சேண்பணை மாளிகைசூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலம் மாண்புடை மாநடஞ்செய் மறையோன் மலர்ப் பாதங்களே. | [2] |
கள்ளவிழ் தாமரைமேல் கண்டயனொடு மால்பணிய ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த் தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத் துள்ளெரி யாடுகின்ற ஒருவனை உணர்வரிதே. | [3] |
அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின் உரிவைநல் உத்தரியம் உகந்தானும் பரார்தம்பிரான் புரிபவர்க்(கு) இன்னருள்செய் புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து) எரிமகிழ்ந் தாடுகின்ற எம்பிரான்என் இறையவனே. | [4] |
இறைவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற மறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த சிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே. | [5] |
நினைத்தேன் இனிப்போக்குவனோ நிமலத் திரளை நினைப்பார் மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக் கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம் சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே. | [6] |
கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த மூத்தனை மூவுருவின் முதலைமுத லாகிநின்ற ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் ஏத்தநின் றாடுகின்ற எம்பிரானடி சேர்வன்கொலோ. | [7] |
சேர்வன்கொலோ அன்னைமீர் திகழும்மலர்ப் பாதங்களை ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச் சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து) ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே. | [8] |
நேசமு டையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த காய்சின மால்விடையூர் கண்ணுதலைக் காமருசீர்த் தேசமிகு புகழோர் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து) ஈசனை எவ்வுயிர்க்கும் எம்மிறைவன்என்(று) ஏத்துவனே. | [9] |
இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால் மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை அறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலை மறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே. | [10] |