முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்; நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்; கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால் பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
|
1
|
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி- நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள் கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்- ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
|
2
|
தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை, ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை; சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை, வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
|
3
|
நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள் இருள் எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டு இடைச் சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை, பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
|
4
|
வேய் அன தோளி மலை மகளை விரும்பிய மாயம் இல் மாமலை நாடன் ஆகிய மாண்பனை, ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும், பேயனே! பித்தனே! என்பரால், எம்பிரானையே!
|
5
|
Go to top |
இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய், துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்; மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்- பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
|
6
|
தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்; ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்; ஊரும், ஒன்று இல்லை, உலகு எலாம், உகப்பார் தொழப் பேரும் ஓர் ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.
|
7
|
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்; வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?
|
8
|
கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால் எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள் பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்- கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?
|
9
|
காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து, ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான், ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே!
|
10
|
Go to top |