சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.120   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

மேலாறு செஞ்சடைமேல்
வைத்தவர்தாம் விரும்பியது
நூலாறு நன்குணர்வோர்
தாம்பாடும் நோன்மையது
கோலாறு தேன்பொழியக்
கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின்
கமழ்சாறூர் கஞ்சாறூர்.
1

கண்ணீலக் கடைசியர்கள்
கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண்
உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத்
தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த
வளவயல்கள் உளஅயல்கள்.
2

புயல்காட்டுங் கூந்தல்சிறு
புறங்காட்டப் புனமயிலின்
இயல்காட்டி இடைஒதுங்க
இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல்காட்டும் மதிதோற்கும்
முகங்காட்டக் கண்மூரிக்
கயல்காட்டுந் தடங்கள்பல
கதிர்காட்டுந் தடம்பணைகள்.
3

சேறணிதண் பழனவயல்
செழுநெல்லின் கொழுங்கதிர்போய்
வேறருகு மிடைவேலிப்
பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலைவளைப்ப
வண்டலைதண் டலையுழவர்
தாறரியும் நெடுங்கொடுவாள்
அனையவுள தனியிடங்கள்.
4

பாங்குமணிப் பலவெயிலும்
சுலவெயிலும் உளமாடம்
ஞாங்கரணி துகிற்கொடியும்
நகிற்கொடியும் உளவரங்கம்
ஓங்குநிலைத் தோரணமும்
பூரணகும் பமும்உளவால்
பூங்கணைவீ தியில்அணைவோர்
புலமறுகுஞ் சிலமறுகு.
5
Go to top

மனைசாலும் நிலையறத்தின்
வழிவந்த வளம்பெருகும்
வினைசாலும் உழவுதொழில்
மிக்கபெருங் குடிதுவன்றிப்
புனைசாயல் மயிலனையார்
நடம்புரியப் புகல்முழவங்
கனைசாறு மிடைவீதிக்
கஞ்சாறு விளங்கியதால்.
6

அப்பதியிற் குலப்பதியாய்
அரசர்சே னாபதியாம்
செப்பவருங் குடிவிளங்கத்
திருஅவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார்
விழுமியவே ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார்
மானக்கஞ் சாறனார்.
7

பணிவுடைய வடிவுடையார்
பணியினொடும் பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க்
காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார்
தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே
ஏவல்செயுந் தொழில்பூண்டார்.
8

மாறில்பெருஞ் செல்வத்தின்
வளம்பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக்கற்றை
அந்தணர்தம் அடியாராம்
ஈறில்பெருந் திருவுடையார்
உடையாரென் றியாவையுநேர்
கூறுவதன் முன்னவர்தம்
குறிப்பறிந்து கொடுத்துள்ளார்.
9

விரிகடல்சூழ் மண்ணுலகில்
விளக்கியஇத் தன்மையராம்
பெரியவர்க்கு முன்சிலநாள்
பிள்ளைப்பே றின்மையினால்
அரியறியா மலர்க்கழல்கள்
அறியாமை யறியாதார்
வருமகவு பெறற்பொருட்டு
மனத்தருளால் வழுத்தினார்.
10
Go to top

குழைக்கலையும் வடிகாதில்
கூத்தனார் அருளாலே
மழைக்குதவும் பெருங்கற்பின்
மனைக்கிழத்தி யார்தம்பால்
இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த
இப்பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்குநெறி தமக்குதவப்
பெண்கொடியைப் பெற்றெடுத்தார்.
11

பிறந்தபெரு மகிழ்ச்சியினால்
பெருமூதூர் களிசிறப்பச்
சிறந்தநிறை மங்கலதூ
ரியம்முழங்கத் தேவர்பிரான்
அறந்தலைநின் றவர்க்கெல்லாம்
அளவில்வளத் தருள்பெருக்கிப்
புறந்தருவார் போற்றிசைப்பப்
பொற்கொடியை வளர்க்கின்றார்.
12

காப்பணியும் இளங்குழவிப்
பதம்நீங்கிக் கமழ்சுரும்பின்
பூப்பயிலும் சுருட்குழலும்
பொலங்குழையும் உடன்தாழ
யாப்புறுமென் சிறுமணிமே
கலையணிசிற் றாடையுடன்
கோப்பமைகிண் கிணியசையக்
குறுந்தளிர்மெல் லடியொதுங்கி.
13

புனைமலர்மென் கரங்களினால்
போற்றியதா தியர்நடுவண்
மனையகத்து மணிமுன்றில்
மணற்சிற்றில் இழைத்துமணிக்
கனைகுரல்நூ புரம்அலையக்
கழல்முதலாப் பயின்றுமுலை
நனைமுகஞ்செய் முதற்பருவம்
நண்ணினள்அப் பெண்ணமுதம்.
14

உறுகவின்மெய்ப் புறம்பொலிய
ஒளிநுசுப்பை முலைவருத்த
முறுவல்புறம் அலராத
முகிண்முத்த நகையென்னும்
நறுமுகைமென் கொடிமருங்குல்
நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை
மறுவில்குலக் கொழுந்தினுக்கு
மணப்பருவம் வந்தணைய.
15
Go to top

திருமகட்கு மேல்விளங்குஞ்
செம்மணியின் தீபமெனும்
ஒருமகளை மண்ணுலகில்
ஓங்குகுல மரபினராய்க்
கருமிடற்று மறையவனார்
தமராய கழல்ஏயர்
பெருமகற்கு மகட்பேச
வந்தணைந்தார் பெருமுதியோர்.
16

வந்தமூ தறிவோரை
மானக்கஞ் சாறனார்
முந்தைமுறை மையின்விரும்பி
மொழிந்தமணத் திறங்கேட்டே
எந்தமது மரபினுக்குத்
தகும்பரிசால் ஏயுமெனச்
சிந்தைமகிழ் வுறஉரைத்து
மணநேர்ந்து செலவிட்டார்.
17

சென்றவருங் கஞ்சாறர்
மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர்
கோனாரும் மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு
திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல்வினை மங்கலநாள்
மதிநூல்வல் லவர்வகுத்தார்.
18

மங்கலமாம் செயல்விரும்பி
மகட்பயந்த வள்ளலார்
தங்குலநீள் சுற்றமெலாம்
தயங்குபெருங் களிசிறப்பப்
பொங்கியவெண் முளைப்பெய்து
பொலங்கலங்கள் இடைநெருங்கக்
கொங்கலர்தண் பொழில்மூதூர்
வதுவைமுகங் கோடித்தார்.
19

கஞ்சாறர் மகட்கொடுப்பக்
கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்ப்பெருமை
ஏயர்குலப் பெருமானும்
தஞ்சால்பு நிறைசுற்றந்
தலைநிறைய முரசியம்ப
மஞ்சாலும் மலர்ச்சோலைக்
கஞ்சாற்றின் மருங்கணைய.
20
Go to top

வள்ளலார் மணமவ்வூர்
மருங்கணையா முன்மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார்தம்
திருமனையில் ஒருவழியே
தெள்ளுதிரை நீருலகம்
உய்வதற்கு மற்றவர்தம்
உள்ளநிலைப் பொருளாய
உம்பர்பிரான் தாமணைவார்.
21

முண்டநிறை நெற்றியின்மேல்
முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின்கண்
கோத்தணிந்த எற்புமணி
பண்டொருவன் உடலங்கம்
பரித்தநாள் அதுகடைந்த
வெண்தரளம் எனக்காதின்
மிசையசையுங் குண்டலமும்.
22

அவ்வென்பின் ஒளிமணிகோத்
தணிந்ததிருத் தாழ்வடமும்
பைவன்பேர் அரவொழியத்
தோளிலிடும் பட்டிகையும்
மைவந்த நிறக்கேச
வடப்பூணு நூலும்மனச்
செவ்வன்பர் பவமாற்றுந்
திருநீற்றுப் பொக்கணமும்.
23

ஒருமுன்கைத் தனிமணிகோத்
தணிந்தவொளிர் சூத்திரமும்
அருமறைநூற் கோவணத்தின்
மிசையசையும் திருவுடையும்
இருநிலத்தின் மிசைதோய்ந்த
எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப்பஞ்ச
முத்திரையுந் திகழ்ந்திலங்க.
24

பொடிமூடு தழலென்னத்
திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின்
பரப்பணிந்த பான்மையராய்க்
கொடிநீடு மறுகணைந்து
தம்முடைய குளிர்கமலத்
தடிநீடும் மனத்தன்பர்
தம்மனையி னகம்புகுந்தார்.
25
Go to top

வந்தணைந்த மாவிரத
முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ்
சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்என்
றுருகியஅன் பொடுபணிந்தார்.
26

நற்றவராம் பெருமானார்
நலமிகும்அன் பரைநோக்கி
உற்றசெயல் மங்கலமிங்
கொழுகுவதென் எனஅடியேன்
பெற்றதொரு பெண்கொடிதன்
வதுவையெனப் பெருந்தவரும்
மற்றுமக்குச் சோபனம்ஆ
குவதென்று வாய்மொழிந்தார்.
27

ஞானச்செய் தவரடிமேற்
பணிந்துமனை யகம்நண்ணி
மானக்கஞ் சாறனார்
மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல்
திருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து
வருமவரைப் பணிவித்தார்.
28

தஞ்சரணத் திடைப்பணிந்து
தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன்
மஞ்சுதழைத் தெனவளர்ந்த
மலர்க்கூந்தற் புறம்நோக்கி
அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த்
தணங்கிவள்தன் மயிர்நமக்குப்
பஞ்சவடிக் காமென்றார்
பரவஅடித் தலங்கொடுப்பார்.
29

அருள்செய்த மொழிகேளா
அடற்சுரிகை தனையுருவிப்
பொருள்செய்தா மெனப்பெற்றேன்
எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல்
அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார்
மலர்க்கரத்தி னிடைநீட்ட.
30
Go to top

வாங்குவார் போல்நின்ற
மறைப்பொருளாம் அவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன்
பழையமழ விடையேறி
ஓங்கியவிண் மிசைவந்தார்
ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி
தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார்.
31

விழுந்தெழுந்து மெய்ம்மறந்த
மெய்யன்பர் தமக்குமதிக்
கொழுந்தலைய விழுங்கங்கை
குதித்தசடைக் கூத்தனார்
எழும்பரிவு நம்பக்கல்
உனக்கிருந்த பரிசிந்தச்
செழும்புவனங் களிலேறச்
செய்தோமென் றருள்செய்தார்.
32

மருங்குபெருங் கணநாதர்
போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்கவிடை மேல்கொண்டு
நின்றவர்முன் நின்றவர்தாம்
ஒருங்கியநெஞ் சொடுகரங்கள்
உச்சியின்மேற் குவித்தையர்
பெருங்கருணைத் திறம்போற்றும்
பெரும்பேறு நேர்பெற்றார்.
33

தொண்டனார் தமக்கருளிச்
சூழ்ந்திமையோர் துதிசெய்ய
இண்டைவார் சடைமுடியார்
எழுந்தருளிப் போயினார்
வண்டுவார் குழற்கொடியைக்
கைப்பிடிக்க மணக்கோலங்
கண்டவர்கள் கண்களிப்பக்
கலிக்காம னார்புகுந்தார்.
34

வந்தணைந்த ஏயர்குல
மன்னவனார் மற்றந்தச்
சிந்தைநினை வரியசெயல்
செறிந்தவர்பால் கேட்டருளிப்
புந்தியினில் மிகவுவந்து
புனிதனார் அருள்போற்றிச்
சிந்தைதளர்ந் தருள்செய்த
திருவாக்கின் திறங்கேட்டு.
35
Go to top

மனந்தளரும் இடர்நீங்கி
வானவர்நா யகரருளால்
புனைந்தமலர்க் குழல்பெற்ற
பூங்கொடியை மணம்புணர்ந்து
தனம்பொழிந்து பெருவதுவை
உலகெலாந் தலைசிறப்ப
இனம்பெருகத் தம்முடைய
எயின்மூதூர் சென்றணைந்தார்.
36

ஒருமகள் கூந்தல் தன்னை
வதுவைநாள் ஒருவர்க் கீந்த
பெருமையார் தன்மை போற்றும்
பெருமைஎன் அளவிற் றாமே
மருவிய கமரிற் புக்க
மாவடு விடேலென் னோசை
உரிமையால் கேட்க வல்லார்
திறமினி யுரைக்க லுற்றேன்.
37

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000