விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
|
1
|
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிரொளி காட்டிப் பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
|
2
|
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
|
3
|
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங் கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
|
4
|
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
|
5
|
Go to top |
மலங்களைந் தாமென மாற்றி அருளித் தலங்களைந் தான்நற் சதாசிவ மான புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.
|
6
|
அறிவைம் புலனுட னேநான் றதாகி நெறியறி யாதுற்ற நீராழம் போல அறிவறி வுள்ளே அழிந்தது போலக் குறியறி விப்பான் குருபரனாமே.
|
7
|
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம் தீமேவு பல்கர ணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.
|
8
|
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.
|
9
|
சிவயோக மாவது சித்தசித் தென்று தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகஞ் சாரா தவன்பதி போக நவயோகம் நந்தி நமக்களித் தானே.
|
10
|
Go to top |
அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.
|
11
|
வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
|
12
|
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.
|
13
|
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந் தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
|
14
|
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங் கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.
|
15
|
Go to top |
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.
|
16
|
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
|
17
|
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.
|
18
|
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
|
19
|
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
|
20
|
Go to top |
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் அருமை எளிமை அறிந்தறி வாரார் ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
|
21
|
புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற் கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
|
22
|
சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
|
23
|
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
|
24
|
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங் கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே.
|
25
|
Go to top |
திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
|
26
|
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
|
27
|
தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும் தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும் தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.
|
28
|
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
|
29
|
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.5,
|
30
|
Go to top |