துளமதி யுடைமறி தோன்று கையினர் இளமதி யணிசடை யெந்தை யாரிடம் உளமதி யுடையவர் வைக லோங்கிய வளமதி தடவிய மாடக் கோயிலே.
|
1
|
மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர் மையகண் மலைமக ளோடும் வைகிடம் வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச் செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.
|
2
|
கணியணி மலர்கொடு காலை மாலையும் பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் தணியணி யுமையொடு தாமும் தங்கிடம் மணியணி கிளர்வைகன் மாடக் கோயிலே.
|
3
|
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.
|
4
|
விடமடை மிடற்றினர் வேத நாவினர் மடமொழி மலைமக ளோடும் வைகிடம் மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க் குடதிசை நிலவிய மாடக்கோயிலே.
|
5
|
| Go to top |
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரி மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில் திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.
|
6
|
எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் திரிபுர மெரிசெய்த செல்வர் சேர்விடம் வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை வருமுகில் அணவிய மாடக் கோயிலே.
|
7
|
மலையன இருபது தோளி னான்வலி தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக் கோயிலே.
|
8
|
மாலவன் மலரவன் நேடி மால்கொள மாலெரி யாகிய வரதர் வைகிடம் மாலைகொ டணிமறை வாணர் வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே.
|
9
|
கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர் பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம் மடமுடை யவர்பயில் வைகல் மாநகர் வடமலை யனையநன் மாடக் கோயிலே.
|
10
|
| Go to top |
மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச் சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.
|
11
|