வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம் அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே.
|
1
|
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.
|
2
|
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும் தாமே உலகில் தலைவனு மாமே.
|
3
|
தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல் தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில் தலைவன் இடம்வலந் தன்வழி நூறே.
|
4
|
ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும் தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந் தேறியே நின்று தெளிஇவ் வகையே.
|
5
|
Go to top |
இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம் செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின் முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.
|
6
|
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில் எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.
|
7
|
பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில் ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப் போக்கலு மாகும் புகலற ஒன்றெனில் தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.
|
8
|
ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற் பாயிரு நாலும் பகையற நின்றிடும் தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில் ஆயுரு வாறென் றளக்கலு மாமே.
|
9
|
அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில் விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும் துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில் களக்க மறமூன்றிற் காணலு மாமே.
|
10
|
Go to top |
காணலு மாகுங் கருதிய பத்தோடிற் காணலு மாகுங் கலந்த இரண்டையும் காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற் காணலு மாகுங் கருத்துற ஒன்றே.
|
11
|
கருதும் இருபதிற் காணஆ றாகும் கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம் கருதும் இருப துடன்ஆறு காணில் கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.
|
12
|
காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில் காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக் காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற் காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.
|
13
|
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில் ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே.
|
14
|
ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற் கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும் சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின் மன்றியல் பாகு மனையில் இரண்டே.
|
15
|
Go to top |
மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும் சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே.
|
16
|
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள் ஆரு மறியா அறிவறிந் தேனே.
|
17
|
அறிவது வாயுவொ டைந்தறி வாய அறிவா வதுதான் உலகுயிர் அத்தின் பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற் செறிவது நின்று திகழும் அதுவே.
|
18
|
அதுவரு ளும்மரு ளான துலகம் பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும் மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி இதுவருள் செய்யும் இறைஅவ னாமே.
|
19
|
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் பழப்பதி யாவது பற்றறும் பாசம் அழப்படி செய்வார்க் ககலும் மதியே. 16,
|
20
|
Go to top |