சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
|
1
|
மன்னு மப்பதி வணிகர்தங் குலத்தினில் வந்தார்
பொன்னு முத்துநன் மணிகளும் பூந்துகில் முதலா
எந்நி லத்தினும் உள்ளன வருவளத் தியல்பால்
அந்நி லைக்கண்மிக் கவர்அமர் நீதியார் என்பார்.
|
2
|
சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.
|
3
|
முக்கண் நக்கராம் முதல்வனா ரவர்திரு நல்லூர்
மிக்க சீர்வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுதுசெய் திருமடஞ் சமைத்தார்
தொக்க சுற்றமுந் தாமும்வந் தணைந்தனர் தூயோர்.
|
4
|
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
திருவி ழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
பெருகும் இன்பமோ டமுதுசெய் திடஅருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்.
|
5
|
| Go to top |
பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசா ரியின்வடி வாகி.
|
6
|
செய்ய ஒண்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையும்
சைவ வெண்திரு நீற்றுமுண் டகத்தொளித் தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான் தோலும்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.
|
7
|
முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மாமறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடி யார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள்நிலம் பொலிய.
|
8
|
கண்ட வர்க்குறு காதலின் மனங்கரைந் துருகத்
தொண்டர் அன்பெனுந் தூநெறி வெளிப்படுப் பாராய்த்
தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்தமர் நீதியார் திருமடங் குறுக.
|
9
|
வடிவு காண்டலும் மனத்தினும் முகம்மிக மலர்ந்து
கடிது வந்தெதிர் வணங்கிஇம் மடத்தினிற் காணும்
படியி லாதநீ ரணையமுன் பயில்தவ மென்னோ
அடிய னேன்செய்த தென்றனர் அமர்நீதி யன்பர்.
|
10
|
| Go to top |
பேணும் அன்பரை நோக்கிநீர் பெருகிய அடியார்க்
கூணும் மேன்மையில் ஊட்டிநற் கந்தைகீ ளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவணம் ஈதல்கேட் டும்மைக்
காண வந்தனம் என்றனன் கண்ணுதற் கரந்தோன்.
|
11
|
என்று தம்பிரா னருள்செய இத்திரு மடத்தே
நன்று நான்மறை நற்றவர் அமுதுசெய் தருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீருமிங் கமுதுசெய் தருளுமென் றிறைஞ்ச.
|
12
|
வணங்கும் அன்பரை நோக்கிஅம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர்ப்பொன்னி ஆடிநான் வரமழை வரினும்
உணங்கு கோவணம் வைத்துநீர் தாருமென் றொருவெண்
குணங்கொள் கோவணந் தண்டினில் அவிழ்த்தது கொடுப்பார்.
|
13
|
ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.
|
14
|
கொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதிலா அன்பர்
கடுப்பில் இங்கெழுந் தருளும்நீர் குளித்தெனக் கங்கை
மடுத்த தும்பிய வளர்சடை மறைத்தஅம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னிநீ ராடுதற்கு அகன்றார்.
|
15
|
| Go to top |
தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.
|
16
|
போன வேதியர் வைத்தகோ வணத்தினைப் போக்கிப்
பான லந்துறைப் பொன்னிநீர் படிந்துவந் தாரோ
தூந றுஞ்சடைக் கங்கைநீர் தோய்ந்துவந் தாரோ
வான நீர்மழை பொழிந்திட நனைந்துவந் தணைந்தார்.
|
17
|
கதிரி ளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதின்
முதிரும் அன்புடைத் தொண்டர்தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறுசுவைத் திருவமு தாக்கி
எதிரெ ழுந்துசென் றிறைஞ்சிட நிறைந்தநூன் மார்பர்.
|
18
|
தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.
|
19
|
ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்
செய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.
|
20
|
| Go to top |
பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின நெறிமேல்
சங்கை யின்றியே தப்பின தென்றுதஞ் சரக்கில்
எங்கும் நாடியும் கண்டிலர் என்செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெருந்தொடக் கினில்அகப் பட்டார்.
|
21
|
மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனைய தொன்றுவந் தெய்திய தெனஇடர் கூர்ந்து
நினைவ தொன்றிலர் வருந்தினர் நிற்கவு மாட்டார்
புனைய வேறொரு கோவணங் கொடுபுறப் பட்டார்.
|
22
|
அத்தர் முன்புசென் றடிகள்நீர் தந்தகோ வணத்தை
வைத்தி டத்துநான் கண்டிலேன் மற்றுமோ ரிடத்தில்
உய்த்தொ ளித்தனர் இல்லைஅஃ தொழிந்தவா றறியேன்
இத்த கைத்தவே றதிசயங் கண்டிலே னென்று.
|
23
|
வேறு நல்லதோர் கோவணம் விரும்பிமுன் கொணர்ந்தேன்
கீறு கோவண மன்றுநெய் தமைத்தது கிளர்கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றது களைந்து
மாறு சாத்தியென் பிழைபொறுப் பீரென வணங்க.
|
24
|
நின்ற வேதியர் வெகுண்டமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்றால்
இன்று நான்வைத்த கோவணங் கொண்டதற் கெதிர்வே
றொன்று கொள்கென உரைப்பதே நீரென உரையா.
|
25
|
| Go to top |
நல்ல கோவணங் கொடுப்பன்என் றுலகின்மேல் நாளும்
சொல்லு வித்ததென் கோவணங் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்குறு வாணிபம் அழகிதே உமக்கென்
றெல்லை யில்லவ னெரிதுள்ளி னாலென வெகுண்டான்.
|
26
|
மறிக ரந்துதண் டேந்திய மறையவர் வெகுளப்
பொறிக லங்கிய உணர்வின ராய்முகம் புலர்ந்து
சிறிய என்பெரும் பிழைபொறுத் தருள்செய்வீர் அடியேன்
அறிய வந்ததொன் றன்றென அடிபணிந் தயர்வார்.
|
27
|
செயத்த கும்பணி செய்வன்இக் கோவண மன்றி
நயத்த குந்தன நல்லபட் டாடைகள் மணிகள்
உயர்த்த கோடிகொண் டருளும்என் றுடம்பினி லடங்காப்
பயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை பணிந்தார்.
|
28
|
பணியும் அன்பரை நோக்கிஅப் பரம்பொரு ளானார்
தணியும் உள்ளத்த ராயினர் போன்றுநீர் தந்த
மணியும் பொன்னும்நல் லாடையும் மற்றுமென் செய்ய
அணியுங் கோவணம் நேர்தர அமையும்என் றருள.
|
29
|
மலர்ந்த சிந்தைய ராகிய வணிகரே றனையார்
அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்குநே ராக
இலங்கு பூந்துகில் கொள்வதற் கிசைந்தருள்செய்யீர்
நலங்கொள் கோவணந் தரும்பரி சியாதென நம்பர்.
|
30
|
| Go to top |
உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.
|
31
|
நன்று சாலவென் றன்பரும் ஒருதுலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒருதட்டில் இட்டார்
நின்ற தொண்டருங் கையினி னெய்தகோ வணந்தட்
டொன்றி லேயிட நிறைநிலா தொழிந்தமை கண்டார்.
|
32
|
நாடு மன்பொடு நாயன்மார்க் களிக்கமுன் வைத்த
நீடு கோவண மடையநே ராகவொன் றொன்றாக்
கோடு தட்டின்மீ திடஇடக் கொண்டெழுந் ததுகண்
டாடு சேவடிக் கடியரு மற்புத மெய்தி.
|
33
|
உலகில் இல்லதோர் மாயையிக் கோவண மொன்றுக்
கலகில் கோவணம் ஒத்தில வென்றதி சயித்துப்
பலவும் மென்துகில் பட்டுடன் இடஇட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை யெடுத்துமே லிட்டார்.
|
34
|
முட்டில் அன்பர்தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்றதட் டருளொடுந் தாழ்வுறும் வழக்கால்
பட்டொ டுந்துகி லநேககோ டிகளிடும் பத்தர்
தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.
|
35
|
| Go to top |
ஆன தன்மைகண் டடியவர் அஞ்சியந் தணர்முன்
தூந றும்துகில் வருக்கநூல் வருக்கமே முதலா
மான மில்லன குவிக்கவும் தட்டின்மட் டிதுவால்
ஏனை யென்தனம் இடப்பெற வேண்டுமென் றிறைஞ்ச.
|
36
|
மங்கை பாகராம் மறையவர் மற்றதற் கிசைந்தே
இங்கு நாமினி வேறொன்று சொல்லுவ தென்கொல்
அங்கு மற்றுங்கள் தனங்களி னாகிலும் இடுவீர்
எங்கள் கோவண நேர்நிற்க வேண்டுவ தென்றார்.
|
37
|
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவமணித் திரளும்
பல்வ கைத்திறத் துலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை யில்தனம் சுமந்தவர் இடஇடக் கொண்டே
மல்கு தட்டுமீ தெழுந்தது வியந்தனர் மண்ணோர்.
|
38
|
தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.
|
39
|
நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.
|
40
|
| Go to top |
பொச்ச மில்லடி மைத்திறம் புரிந்தவ ரெதிர்நின்
றச்ச முன்புற உரைத்தலும் அங்கண ரருளால்
நிச்ச யித்தவர் நிலையினைத் துலையெனுஞ் சலத்தால்
இச்ச ழக்கினின் றேற்றுவார் ஏறுதற் கிசைந்தார்.
|
41
|
மனம கிழ்ந்தவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனைம லர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனைஇ டக்கொடு தனித்துலை வலங்கொண்டு தகவால்
இனைய செய்கையி லேறுவார் கூறுவா ரெடுத்து.
|
42
|
இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.
|
43
|
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துடன் ஏற
அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவண மதுவும்
கொண்ட அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றதத் துலைதான்.
|
44
|
மதிவி ளங்கிய தொண்டர்தம் பெருமையை மண்ணோர்
துதிசெய் தெங்கணும் அதிசய முறவெதிர் தொழுதார்
கதிர்வி சும்பிடைக் கரந்திட நிரந்தகற் பகத்தின்
புதிய பூமழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.
|
45
|
| Go to top |
அண்டர் பூமழை பொழியமற் றதனிடை ஒளித்த
முண்ட வேதிய ரொருவழி யான்முதல் நல்லூர்ப்
பண்டு தாம்பயில் கோலமே விசும்பினிற் பாகம்
கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சிமுன் கொடுத்தார்.
|
46
|
தொழுது போற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்
அழிவில் வான்பதங் கொடுத்தெழுந் தருளினார் ஐயர்.
|
47
|
நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
|
48
|
மலர்மிசை அயனு மாலுங் காணுதற் கரிய வள்ளல்
பலர்புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழைமைகாட்டி
உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம்உன்னித்
தலைமிசை வைத்து வாழுந் தலைமைநந் தலைமை யாகும்.
|
49
|