மல்லல்நீர் ஞாலந் தன்னுள்
மழவிடை யுடையான் அன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை
உற்றிடத் துதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க
எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்தன் றேனும்
ஆசையாற் சொல்ல லுற்றாம்.
|
1
|
பொன்மலைப் புலிவென் றோங்கப்
புதுமலை யிடித்துப் போற்றும்
அந்நெறி வழியே யாக அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அநபா யன்சீர் மரபின்மா நகர மாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னும்
சுடர்மணி வீதி மூதூர்.
|
2
|
மாமதில் மஞ்சு சூழும்
மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும் சதமகன் நகரம் தாழ.
|
3
|
கடகரி துறையி லாடும்
களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும்
அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும்
பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும்
தனிநகர் வளமை ஈதால்.
|
4
|
மன்னிய சிறப்பின் மிக்க
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.
|
5
|
| Go to top |
பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார் அவர்எறி பத்த ராவார்.
|
6
|
மழைவளர் உலகில் எங்கும்
மன்னிய சைவ மோங்க
அழலவிர் சடையான் அன்பர்க்
கடாதன அடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி
முரண்கெட எறிந்து தீர்க்கும்
பழமறை பரசுந் தூய
பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.
|
7
|
அண்ணலார் நிகழும் நாளில்
ஆனிலை யடிக ளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த
சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம்
பூப்பறித் தலங்கல் சாத்தி
உண்ணிறை காத லோடும்
ஒழுகுவார் ஒருநாள் முன்போல்.
|
8
|
வைகறை யுணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
நந்தன வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல
கமழ்முகை அலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்தும்
திருப்பள்ளித் தாமங் கொய்து.
|
9
|
கோலப்பூங் கூடை தன்னை
நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு
மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி
அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக்
கடிதினில் வாரா நின்றார்.
|
10
|
| Go to top |
மற்றவ ரணைய இப்பால்
வளநக ரதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
குலப்புகழ்ச் சோழ னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்.
|
11
|
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடிப்
பொங்கிய களிப்பி னோடும்
பொழிமதஞ் சொரிய நின்றார்
எங்கணு மிரியல் போக
எதிர்பரிக் காரர் ஓடத்
துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்த தன்றே.
|
12
|
வென்றிமால் யானை தன்னை
மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச்
சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும்
மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று
பிடித்துடன் பறித்துச் சிந்த.
|
13
|
மேல்கொண்ட பாகர் கண்டு
விசைகொண்ட களிறு சண்டக்
கால்கொண்டு போவார் போலக்
கடிதுகொண் டகலப் போக
நூல்கொண்ட மார்பின் தொண்டர்
நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால்கொண்ட களிற்றின் பின்பு
தண்டுகொண் டடிக்க வந்தார்.
|
14
|
அப்பொழு தணைய வொட்டா
தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
செயிர்த்துமுன் சிவதா வென்பார்.
|
15
|
| Go to top |
களியா னையின்ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா சிவதா.
|
16
|
ஆறும் மதியும் அணியுஞ் சடைமேல்
ஏறும் மலரைக் கரிசிந் துவதே
வேறுள் நினைவார் புரம்வெந் தவியச்
சீறுஞ் சிலையாய் சிவதா சிவதா.
|
17
|
தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
நெஞ்சேய் துயரங் கெடநேர் தொடரும்
மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள்
செஞ்சே வடியாய் சிவதா சிவதா.
|
18
|
நெடியோன் அறியா நெறியா ரறியும்
படியால் அடிமைப் பணிசெய் தொழுகும்
அடியார் களில்யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய.
|
19
|
என்றவ ருரைத்த மாற்றம்
எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும்
நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும்
வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று
கொடுமழு எடுத்து வந்தார்.
|
20
|
| Go to top |
வந்தவ ரழைத்த தொண்டர்
தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
நின்றதித் தெருவே யென்றார்.
|
21
|
இங்கது பிழைப்ப தெங்கே
இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும்
அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று
பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக்
கிடைத்தனர் சீற்ற மிக்கார்.
|
22
|
கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.
|
23
|
பாய்தலும் விசைகொண் டுய்க்கும்
பாகரைக் கொண்டு சீறிக்
காய்தழல் உமிழ்கண் வேழம்
திரிந்துமேற் கதுவ அச்சம்
தாய்தலை யன்பின் முன்பு
நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய்தனித் தடக்கை வீழ
மழுவினால் துணித்தார் தொண்டர்.
|
24
|
கையினைத் துணித்த போது
கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
அருவரை அனைய தோளார்.
|
25
|
| Go to top |
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார்
ஒழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கல் மன்னன்
வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப்
பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு
முதல்வனுக் குரையு மென்றார்.
|
26
|
மற்றவர் மொழிந்த மாற்றம்
மணிக்கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக்
குரைகழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின்பொற்
பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலரா மென்று
செப்பினார் பாக ரென்றார்.
|
27
|
வளவனுங் கேட்ட போதில்
மாறின்றி மண்காக் கின்ற
கிளர்மணித் தோள லங்கல்
சுரும்பினங் கிளர்ந்து பொங்க
அளவில்சீற் றத்தி னாலே
யார்செய்தா ரென்றுங் கேளான்
இளவரி யேறு போல
எழின்மணி வாயில் நீங்க.
|
28
|
தந்திரத் தலைவர் தாமும்
தலைவன்தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை
வல்விரைந் தெழமுன் சாற்ற
அந்தரத் தகல மெல்லாம்
அணிதுகிற் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரு மாவும்
இடையிடை களிறு மாகி.
|
29
|
வில்லொடு வேல்வாள் தண்டு
பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
றெழுந்தனர் எங்கு மெங்கும்.
|
30
|
| Go to top |
சங்கொடு தாரை காளம்
தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
மருங்கெழுந் தியம்பி மல்க.
|
31
|
தூரியத் துவைப்பும் முட்டுஞ்
சுடர்ப்படை ஒலியும் மாவின்
தார்மணி இசைப்பும் வேழ
முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர்தஞ் செருக்கி னார்ப்பும்
மிக்கெழுந் தொன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும்
கடலெனக் கலித்த வன்றே.
|
32
|
பண்ணுறும் உறுப்பு நான்கில்
பரந்தெழு சேனை யெல்லாம்
மண்ணிடை யிறுகான் மேன்மேல்
வந்தெழுந் ததுபோல் தோன்றத்
தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர்
அண்ணலம் புரவி மேல்கொண்
டரசமா வீதி சென்றான்.
|
33
|
கடுவிசை முடுகிப் போகிக்
களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
அன்பரை முன்பு கண்டான்.
|
34
|
பொன்தவழ் அருவிக் குன்றம்
எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
வெடிபட முழங்குஞ் சொல்லான்.
|
35
|
| Go to top |
அரசனாங் கருளிச் செய்ய
அருகுசென் றணைந்து பாகர்
விரைசெய்தார் மாலை யோய்நின்
விறற்களிற் றெதிரே நிற்குந்
திரைசெய்நீர் உலகின் மன்னர்
யாருளார் தீங்கு செய்தார்
பரசுமுன் கொண்டு நின்ற
இவரெனப் பணிந்து சொன்னார்.
|
36
|
குழையணி காதி னானுக்
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.
|
37
|
மைத்தடங் குன்று போலும்
மதக்களிற் றெதிரே யிந்த
மெய்த்தவர் சென்ற போது
வேறொன்றும் புகுதா விட்ட
அத்தவ முடையேன் ஆனேன்
அம்பல வாண ரன்பர்
இத்தனை முனியக் கெட்டேன் என்கொலோ பிழையென் றஞ்சி.
|
38
|
செறிந்தவர் தம்மை நீக்கி
அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
அருள்செயு மென்று நின்றார்.
|
39
|
மன்னவன் தன்னை நோக்கி
வானவர் ஈசர் நேசர்
சென்னியித் துங்க வேழஞ்
சிவகாமி யாண்டார் கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக்
கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.
|
40
|
| Go to top |
மாதங்கந் தீங்கு செய்ய
வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
பருவரைத் தடந்தோள் மன்னன்.
|
41
|
அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
|
42
|
வெந்தழற் சுடர்வாள் நீட்டும்
வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்
களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார்
தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி
வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.
|
43
|
வாங்கிய தொண்டர் முன்பு
மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன்
றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப்
பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட
எறிபத்தர் அதனுக் கஞ்சி.
|
44
|
வன்பெருங் களிறு பாகர்
மடியவும் உடைவா ளைத்தந்
தென்பெரும் பிழையி னாலே
யென்னையுங் கொல்லு மென்னும்
அன்பனார் தம்மைத் தீங்கு
நினைந்தன னென்று கொண்டு
முன்பென துயிர்செ குத்து
முடிப்பதே முடிவென் றெண்ணி.
|
45
|
| Go to top |
புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன் என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்.
|
46
|
வளவனார் விடாது பற்ற
மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த
இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய
கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந்
தெழுந்தது பலருங் கேட்ப.
|
47
|
தொழுந்தகை யன்பின் மிக்கீர்
தொண்டினை மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று
சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற் றென்றங்
கெழுந்தது பாக ரோடும்
யானையும் எழுந்த தன்றே.
|
48
|
ஈரவே பூட்டும் வாள்விட்
டெறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள்மேல்
விழுந்தனர் நிருபர் கோனும்
போர்வடி வாளைப் போக
எறிந்துஅவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தார் விண்ணோர்
பனிமலர் மாரி தூர்த்தார்.
|
49
|
இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்.
|
50
|
| Go to top |
மட்டவிழ் அலங்கல் வென்றி
மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பி னோடும்
உறங்கிய தெழுந்த தொத்து
முட்டவெங் கடங்கள் பாய்ந்து முகிலென முழங்கிப் பொங்கும்
பட்டவர்த் தனத்தைக் கொண்டு
பாகரும் அணைய வந்தார்.
|
51
|
ஆனசீர்த் தொண்டர் கும்பிட்
டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி
மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு
வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார்
இவுளிமேல் கொண்டு வந்தார்.
|
52
|
அந்நிலை எழுந்த சேனை
ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
திருவளர் கோயில் புக்கான்.
|
53
|
தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
திருப்பணி நோக்கிச் சென்றார்.
|
54
|
மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
|
55
|
| Go to top |
ஆளுடைத் தொண்டர் செய்த
ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
நினைக்கில்ஆர் அளக்க வல்லார்.
|
56
|
தேனாருந் தண்பூங் கொன்றைச்
செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர்
எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப லுற்றேன்.
|
57
|