சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.080   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

மல்லல்நீர் ஞாலந் தன்னுள்
மழவிடை யுடையான் அன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை
உற்றிடத் துதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க
எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்தன் றேனும்
ஆசையாற் சொல்ல லுற்றாம்.
1

பொன்மலைப் புலிவென் றோங்கப்
புதுமலை யிடித்துப் போற்றும்
அந்நெறி வழியே யாக 
அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அநபா யன்சீர் 
மரபின்மா நகர மாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னும்
சுடர்மணி வீதி மூதூர்.
2

மாமதில் மஞ்சு சூழும்
மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும் 
சதமகன் நகரம் தாழ.
3

கடகரி துறையி லாடும்
களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும்
அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும்
பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும்
தனிநகர் வளமை ஈதால்.
4

மன்னிய சிறப்பின் மிக்க
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.
5
Go to top

பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்.
6

மழைவளர் உலகில் எங்கும்
மன்னிய சைவ மோங்க
அழலவிர் சடையான் அன்பர்க்
கடாதன அடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி
முரண்கெட எறிந்து தீர்க்கும்
பழமறை பரசுந் தூய
பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.
7

அண்ணலார் நிகழும் நாளில்
ஆனிலை யடிக ளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த
சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம்
பூப்பறித் தலங்கல் சாத்தி
உண்ணிறை காத லோடும்
ஒழுகுவார் ஒருநாள் முன்போல்.
8

வைகறை யுணர்ந்து போந்து
புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
நந்தன வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல
கமழ்முகை அலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்தும்
திருப்பள்ளித் தாமங் கொய்து.
9

கோலப்பூங் கூடை தன்னை
நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு
மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி
அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக்
கடிதினில் வாரா நின்றார்.
10
Go to top

மற்றவ ரணைய இப்பால்
வளநக ரதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
குலப்புகழ்ச் சோழ னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்.
11

மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடிப்
பொங்கிய களிப்பி னோடும்
பொழிமதஞ் சொரிய நின்றார்
எங்கணு மிரியல் போக
எதிர்பரிக் காரர் ஓடத்
துங்கமால் வரைபோல் தோன்றித்
துண்ணென அணைந்த தன்றே.
12

வென்றிமால் யானை தன்னை
மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச்
சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும்
மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று
பிடித்துடன் பறித்துச் சிந்த.
13

மேல்கொண்ட பாகர் கண்டு
விசைகொண்ட களிறு சண்டக்
கால்கொண்டு போவார் போலக்
கடிதுகொண் டகலப் போக
நூல்கொண்ட மார்பின் தொண்டர்
நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால்கொண்ட களிற்றின் பின்பு
தண்டுகொண் டடிக்க வந்தார்.
14

அப்பொழு தணைய வொட்டா
தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
செயிர்த்துமுன் சிவதா வென்பார்.
15
Go to top

களியா னையின்ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா சிவதா.
16

ஆறும் மதியும் அணியுஞ் சடைமேல்
ஏறும் மலரைக் கரிசிந் துவதே
வேறுள் நினைவார் புரம்வெந் தவியச்
சீறுஞ் சிலையாய் சிவதா சிவதா.
17

தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
நெஞ்சேய் துயரங் கெடநேர் தொடரும்
மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள்
செஞ்சே வடியாய் சிவதா சிவதா.
18

நெடியோன் அறியா நெறியா ரறியும்
படியால் அடிமைப் பணிசெய் தொழுகும்
அடியார் களில்யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய.
19

என்றவ ருரைத்த மாற்றம்
எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும்
நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும்
வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று
கொடுமழு எடுத்து வந்தார்.
20
Go to top

வந்தவ ரழைத்த தொண்டர்
தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
நின்றதித் தெருவே யென்றார்.
21

இங்கது பிழைப்ப தெங்கே
இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும்
அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று
பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக்
கிடைத்தனர் சீற்ற மிக்கார்.
22

கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.
23

பாய்தலும் விசைகொண் டுய்க்கும்
பாகரைக் கொண்டு சீறிக்
காய்தழல் உமிழ்கண் வேழம்
திரிந்துமேற் கதுவ அச்சம்
தாய்தலை யன்பின் முன்பு
நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய்தனித் தடக்கை வீழ
மழுவினால் துணித்தார் தொண்டர்.
24

கையினைத் துணித்த போது
கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
அருவரை அனைய தோளார்.
25
Go to top

வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார்
ஒழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கல் மன்னன்
வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப்
பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு
முதல்வனுக் குரையு மென்றார்.
26

மற்றவர் மொழிந்த மாற்றம்
மணிக்கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக்
குரைகழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின்பொற்
பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலரா மென்று
செப்பினார் பாக ரென்றார்.
27

வளவனுங் கேட்ட போதில்
மாறின்றி மண்காக் கின்ற
கிளர்மணித் தோள லங்கல்
சுரும்பினங் கிளர்ந்து பொங்க
அளவில்சீற் றத்தி னாலே
யார்செய்தா ரென்றுங் கேளான்
இளவரி யேறு போல
எழின்மணி வாயில் நீங்க.
28

தந்திரத் தலைவர் தாமும்
தலைவன்தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை
வல்விரைந் தெழமுன் சாற்ற
அந்தரத் தகல மெல்லாம்
அணிதுகிற் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரு மாவும்
இடையிடை களிறு மாகி.
29

வில்லொடு வேல்வாள் தண்டு
பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
றெழுந்தனர் எங்கு மெங்கும்.
30
Go to top

சங்கொடு தாரை காளம்
தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
மருங்கெழுந் தியம்பி மல்க.
31

தூரியத் துவைப்பும் முட்டுஞ்
சுடர்ப்படை ஒலியும் மாவின்
தார்மணி இசைப்பும் வேழ
முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர்தஞ் செருக்கி னார்ப்பும்
மிக்கெழுந் தொன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும்
கடலெனக் கலித்த வன்றே.
32

பண்ணுறும் உறுப்பு நான்கில்
பரந்தெழு சேனை யெல்லாம்
மண்ணிடை யிறுகான் மேன்மேல்
வந்தெழுந் ததுபோல் தோன்றத்
தண்ணளிக் கவிகை மன்னன்
தானைபின் தொடரத் தானோர்
அண்ணலம் புரவி மேல்கொண்
டரசமா வீதி சென்றான்.

33

கடுவிசை முடுகிப் போகிக்
களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
அன்பரை முன்பு கண்டான்.
34

பொன்தவழ் அருவிக் குன்றம்
எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
வெடிபட முழங்குஞ் சொல்லான்.
35
Go to top

அரசனாங் கருளிச் செய்ய
அருகுசென் றணைந்து பாகர்
விரைசெய்தார் மாலை யோய்நின்
விறற்களிற் றெதிரே நிற்குந்
திரைசெய்நீர் உலகின் மன்னர்
யாருளார் தீங்கு செய்தார்
பரசுமுன் கொண்டு நின்ற
இவரெனப் பணிந்து சொன்னார்.
36

குழையணி காதி னானுக்
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.
37

மைத்தடங் குன்று போலும்
மதக்களிற் றெதிரே யிந்த
மெய்த்தவர் சென்ற போது
வேறொன்றும் புகுதா விட்ட
அத்தவ முடையேன் ஆனேன்
அம்பல வாண ரன்பர்
இத்தனை முனியக் கெட்டேன்
என்கொலோ பிழையென் றஞ்சி.
38

செறிந்தவர் தம்மை நீக்கி
அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
அருள்செயு மென்று நின்றார்.
39

மன்னவன் தன்னை நோக்கி
வானவர் ஈசர் நேசர்
சென்னியித் துங்க வேழஞ்
சிவகாமி யாண்டார் கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக்
கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத்
தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.
40
Go to top

மாதங்கந் தீங்கு செய்ய
வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
பருவரைத் தடந்தோள் மன்னன்.
41

அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
42

வெந்தழற் சுடர்வாள் நீட்டும்
வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்
களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார்
தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி
வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.
43

வாங்கிய தொண்டர் முன்பு
மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன்
றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப்
பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட
எறிபத்தர் அதனுக் கஞ்சி.
44

வன்பெருங் களிறு பாகர்
மடியவும் உடைவா ளைத்தந்
தென்பெரும் பிழையி னாலே
யென்னையுங் கொல்லு மென்னும்
அன்பனார் தம்மைத் தீங்கு
நினைந்தன னென்று கொண்டு
முன்பென துயிர்செ குத்து
முடிப்பதே முடிவென் றெண்ணி.
45
Go to top

புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்.
46

வளவனார் விடாது பற்ற
மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த
இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய
கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந்
தெழுந்தது பலருங் கேட்ப.
47

தொழுந்தகை யன்பின் மிக்கீர்
தொண்டினை மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று
சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்தணி வேணிக் கூத்தர்
அருளினால் கூடிற் றென்றங்
கெழுந்தது பாக ரோடும்
யானையும் எழுந்த தன்றே.
48

ஈரவே பூட்டும் வாள்விட்
டெறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள்மேல்
விழுந்தனர் நிருபர் கோனும்
போர்வடி வாளைப் போக
எறிந்துஅவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தார் விண்ணோர்
பனிமலர் மாரி தூர்த்தார்.
49

இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்.
50
Go to top

மட்டவிழ் அலங்கல் வென்றி
மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பி னோடும்
உறங்கிய தெழுந்த தொத்து
முட்டவெங் கடங்கள் பாய்ந்து
முகிலென முழங்கிப் பொங்கும்
பட்டவர்த் தனத்தைக் கொண்டு
பாகரும் அணைய வந்தார்.
51

ஆனசீர்த் தொண்டர் கும்பிட்
டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி
மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு
வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார்
இவுளிமேல் கொண்டு வந்தார்.
52

அந்நிலை எழுந்த சேனை
ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
திருவளர் கோயில் புக்கான்.
53

தம்பிரான் பணிமேற் கொண்டு
சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
திருப்பணி நோக்கிச் சென்றார்.
54

மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
55
Go to top

ஆளுடைத் தொண்டர் செய்த
ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
நினைக்கில்ஆர் அளக்க வல்லார்.
56

தேனாருந் தண்பூங் கொன்றைச்
செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர்
எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும்
மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த 
திருத்தொழி லியம்ப லுற்றேன்.
57

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000