புண்டரிகம் பொன்வரைமேல்
ஏற்றிப் புவியளிக்கும்
தண்தரள வெண்கவிகைத்
தார்வளவர் சோணாட்டில்
வண்டறைபூஞ் சோலைவயல்
மருதத் தண்பணைசூழ்ந்
தெண்திசையும் ஏறியசீர்
எயின்மூதூர் எயினனூர்.
|
1
|
வேழக் கரும்பினொடு
மென்கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி
தானோங்குந் தன்மையவாய்
வாழக் குடிதழைத்து
மன்னியஅப் பொற்பதியில்
ஈழக் குலச்சான்றார் ஏனாதி நாதனார்.
|
2
|
தொன்மைத் திருநீற்றுத்
தொண்டின் வழிபாட்டின்
நன்மைக்கண் நின்ற
நலமென்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி
வடிவாள் படைபயிற்றும்
தன்மைத் தொழில்
விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.
|
3
|
வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால் நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும் காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
|
4
|
நள்ளார் களும்போற்றும்
நன்மைத் துறையின்கண்
எள்ளாத செய்கை
இயல்பின் ஒழுகுநாள்
தள்ளாத தங்கள்
தொழிலுரிமைத் தாயத்தின்
உள்ளான் அதிசூரன்
என்பான் உளனானான்.
|
5
|
| Go to top |
மற்றவனும் கொற்ற
வடிவாட் படைத்தொழில்கள்
கற்றவர்கள் தன்னில்
கடந்துள்ளார் இல்லையெனும்
பெற்றிமையால் மாநிலத்து
மிக்க பெருமிதம்வந்
துற்றுலகில் தன்னையே
சால மதித்துள்ளான்.
|
6
|
தானாள் விருத்திகெடத்
தங்கள்குலத் தாயத்தின்
ஆனாத செய்தொழிலாம்
ஆசிரியத் தன்மைவளம்
மேனாளுந் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர்திறத்
தேலா இகல்புரிந்தான்.
|
7
|
கதிரோன் எழமழுங்கிக்
கால்சாயுங் காலை
மதிபோல் அழிந்துபொறா
மற்றவனும் சுற்றப்
பதியோ ருடன்கூடப்
பண்ணியமர் மேற்சென்
றெதிர்போர் விளைப்பதற்கே
எண்ணித் துணிந்தெழுந்தான்.
|
8
|
தோள்கொண்ட வல்லாண்மைச்
சுற்றத் தொடுந்துணையாம்
கோள்கொண்ட போர்மள்ளர்
கூட்டத் தொடும்சென்று
வாள்கொண்ட தாயம்
வலியாரே கொள்வதென
மூள்கின்ற செற்றத்தால்
முன்கடையில் நின்றழைத்தான்.
|
9
|
வெங்கட் புலிகிடந்த
வெம்முழையிற் சென்றழைக்கும்
பைங்கட் குறுநரியே
போல்வான் படைகொண்டு
பொங்கிப் புறஞ்சூழ்ந்து போர்குறித்து நேர்நின்றே
அங்கட் கடைநின்
றழைத்தா னொலிகேளா.
|
10
|
| Go to top |
ஆர்கொல் பொரவழைத்தார்
என்றரியேற் றிற்கிளர்ந்து
சேர்வு பெறக்கச்சில்
செறிந்தவுடை மேல்வீக்கி
வார்கழலுங் கட்டி
வடிவாள் பலகைகொடு
போர்முனையில் ஏனாதி
நாதர் புறப்பட்டார்.
|
11
|
புறப்பட்ட போதின்கண்
போர்த்தொழில்வாள் கற்கும்
விறற்பெருஞ்சீர்க் காளையர்கள்
வேறிடத்தி னின்றார்
மறப்படைவாள் சுற்றத்தார்
கேட்டோடி வந்து
செறற்கரும்போர் வீரர்க்
கிருமருங்குஞ் சேர்ந்தார்கள்.
|
12
|
வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.
|
13
|
என்றுபகைத் தோனுரைப்ப
ஏனாதி நாதரது
நன்றுனக்கு வேண்டுமேல்
நண்ணுவன்என் றுள்மகிழ்ந்து
சென்றவன்முன் சொன்ன செருக்களத்துப் போர்குறிப்பக்
கன்றி யிருபடையும்
கைவகுத்து நேர்மலைவார்.
|
14
|
மேக வொழுங்குகள் முன்கொடு
மின்னிரை தம்மிடை யேகொடு
மாக மருங்கினும் மண்ணினும்
வல்லுரு மேறெதிர் செல்வன
வாக நெடும்பல கைக்குல
மாள்வினை வாளுடை யாடவர்
காக மிடைந்த களத்திரு
கைகளின் வந்து கலந்தனர்.
|
15
|
| Go to top |
கால்கழல் கட்டிய மள்ளர்கள்
கைகளின் மெய்க ளடக்கிய
வாளொளி வட்ட முனைந்திட
வந்திரு கைகளின் முந்தினர்
வேலொடு வேலெதிர் நீள்வன
மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமு றும்பணி வீரர்கள்
நாநிமிர் கின்றன வொத்தன.
|
16
|
வெங்கண் விறற்சிலை வீரர்கள்
வேறிரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின
தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்தெரி யிற்புகை
போகு கொடிக்கள் வளைத்தெதிர்
செங்கண் விழிக்கனல் சிந்திய
சீறு பொறிச்செல வொத்தன.
|
17
|
வாளொடு நீள்கை துடித்தன
மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன
தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார்கழ லிற்றன
தாரொடு சூழ்சிர மற்றன
நாளொடு சீறி மலைப்பவர்
நாடிய போர்செய் களத்தினில்.
|
18
|
குருதியின் நதிகள் பரந்தன
குறையுடல் ஓடி யலைந்தன
பொருபடை அறுதுணி சிந்தின
புடைசொரி குடருடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின
விசியறு துடிகள் புரண்டன
இருபடை தனினும் எதிர்ந்தவர்
எதிரெதிர் அமர்செய் பறந்தலை.
|
19
|
நீளிடை முடுகி நடந்தெதிர்
நேரிரு வரில்ஒரு வன்றொடர்
தாளிரு தொடையற முன்பெயர்
சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுமுடல் வென்றவன்
மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியி னவனு மறிந்தனன்
ஆயினர் பலருள ரெங்கணும்.
|
20
|
| Go to top |
கூர்முனை அயில்கொடு முட்டினர் கூடிமுன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன்
நேர்பட எதிரெதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர்
ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொ டளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்.
|
21
|
பொற்சிலை வளைய வெதிர்ந்தவர்
புற்றர வனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர்
வெற்றிகொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும்
முற்படு கொடைநிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர்
ஒத்தனர் உளர்சில கண்டர்கள்.
|
22
|
அடல்முனை மறவர் மடிந்தவர்
அலர்முகம் உயிருள வென்றுறு
படர்சிறை சுலவு கருங்கொடி
படர்வன சுழல்வன துன்றலில்
விடுசுடர் விழிக ளிரும்புசெய்
வினைஞர்தம் உலையின் முகம்பொதி
புடைமிடை கரியிடை பொங்கிய
புகைவிடு தழலை நிகர்த்தன.
|
23
|
திண்படை வயவர் பிணம்படு
செங்கள மதனிடை முன்சிலர்
புண்படு வழிசொரி யுங்குடர்
பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன்செயல் குன்றுத லிலர்தலை நின்றனர்
விண்படர் கொடிவிடு பண்பயில்
விஞ்சையர் குமரரை வென்றனர்.
|
24
|
இம்முனைய வெம்போரில்
இருபடையின் வாள்வீரர்
வெம்முனையின் வீடியபின்
வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர்
பின்னாகத் தாமுன்பு
தெம்முனையில் ஏனாதி
நாதர் செயிர்த்தெழுந்தார்.
|
25
|
| Go to top |
வெஞ்சினவாள் தீயுமிழ
வீரக் கழல்கலிப்ப
நஞ்சணிகண் டர்க்கன்பர்
தாமெதிர்ந்த ஞாட்பின்கண்
எஞ்சியெதிர் நின்ற
இகல்முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும்
தாளும் விழத்துணித்தார்.
|
26
|
தலைப்பட்டார் எல்லாரும்
தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார்
கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு
நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல்
குற்றம்போ லாயினார்.
|
27
|
இந்நிலைய வெங்களத்தில்
ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல்படைஞர்
மீண்டார் தமைக்கொண்டு
மின்னொளிவாள் வீசி
விறல்வீரர் வெம்புலியே
றன்னவர்தம் முன்சென்
றதிசூரன் நேரடர்ந்தான்.
|
28
|
மற்றவர்தஞ் செய்கை
வடிவாள் ஒளிகாணச்
சுற்றிவரும் வட்டணையில்
தோன்றா வகைகலந்து
பற்றிஅடர்க் கும்பொழுதில்
தானும் படைப்பிழைத்துப்
பொற்றடந்தோள் வீரர்க்
குடைந்து புறகிட்டான்.
|
29
|
போன அதிசூரன்
போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர
மண்படுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும்
சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால்
வெல்வனென எண்ணினான்.
|
30
|
| Go to top |
சேட்டாருங் கங்குல்
புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே
நாமிருவேம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர்
மலைக்க வருகவெனத்
தோட்டார்பூந் தாரார்க்குச்
சொல்லி வரவிட்டான்.
|
31
|
இவ்வாறு கேட்டலுமே
ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்த லழகி
தெனவமைந்து
கைவாள் அமர்விளைக்கத்
தான்கருதும் அக்களத்தே
வெவ்வாள் உரவோன்
வருகவென மேற்கொள்வார்.
|
32
|
சுற்றத்தார் யாரும்
அறியா வகைசுடர்வாள்
பொற்பலகை யுந்தாமே
கொண்டு புறம்போந்து
மற்றவன்முன் சொல்லி
வரக்குறித்த அக்களத்தே
பற்றலனை முன்வரவு
பார்த்துத் தனிநின்றார்.
|
33
|
தீங்கு குறித்தழைத்த
தீயோன் தீருநீறு
தாங்கிய நெற்றியினார்
தங்களையே எவ்விடத்தும்
ஆங்கவருந் தீங்கிழையார்
என்ப தறிந்தானாய்ப்
பாங்கில் திருநீறு
பண்டு பயிலாதான்.
|
34
|
வெண்ணீறு நெற்றி
விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக்
கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள்
மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச்
சொன்னவி டம்புகுந்தான்.
|
35
|
| Go to top |
வென்றி மடங்கல்
விடக்குவர முன்பார்த்து
நின்றாற் போல்நின்றார்
நிலைகண்டு தன்னெற்றி
சென்று கிடைப்பளவும்
திண்பலகை யால்மறைத்தே
முன்தனிவீ ரர்க்கெதிரே மூண்டான் மறம்பூண்டான்.
|
36
|
அடல்விடையே றென்ன
அடர்த்தவனைக் கொல்லும்
இடைதெரிந்து தாள்பெயர்க்கும்
ஏனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான்
பலகை புறம்போக்கக்
கடையவன்தன் நெற்றியின்மேல்
வெண்ணீறு தாங்கண்டார்.
|
37
|
கண்டபொழு தேகெட்டேன்
முன்பிவர்மேற் காணாத
வெண்திருநீற் றின்பொலிவு
மேற்கண்டேன் வேறினியென்
அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்றுமனங்
கொண்டிவர்தங் கொள்கைக்
குறிவழிநிற் பேனென்று.
|
38
|
கைவா ளுடன்பலகை
நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக்
கொன்றா ரெனுந்தீமை
எய்தாமை வேண்டும்
இவர்க்கென் றிரும்பலகை
நெய்வா ளுடனடர்த்து
நேர்வார்போல் நேர்நின்றார்.
|
39
|
அந்நின்ற தொண்டர்
திருவுள்ளம் ஆரறிவார்
முன்னின்ற பாதகனும்
தன்கருத்தே முற்றுவித்தான்
இந்நின்ற தன்மை
யறிவார் அவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார்
தாமே வெளிநின்றார்.
|
40
|
| Go to top |
மற்றினிநாம் போற்றுவதென்
வானோர் பிரானருளைப்
பற்றலர்தங் கைவாளால்
பாசம் அறுத்தருளி
உற்றவரை யென்றும்
உடன்பிரியா அன்பருளிப்
பொற்றொடியாள் பாகனார்
பொன்னம் பலமணைந்தார்.
|
41
|
தம்பெருமான் சாத்தும்
திருநீற்றுச் சார்புடைய
எம்பெருமான் ஏனாதி
நாதர் கழலிறைஞ்சி
உம்பர்பிரான் காளத்தி
உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம்பெருமான் செய்தபணி
நாம்தெரிந்த வாறுரைப்பாம்.
|
42
|