சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.180   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

பகர்ந்துலகு சீர்போற்றும்
பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனல் கொள்ளிடம்பொன்
செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும்
முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு
மேற்கானாட் டாதனுர்.
1

நீற்றலர்பே ரொளிநெருங்கும்
அப்பதியில் நிறைகரும்பின்
சாற்றலைவன் குலைவயலிற்
தகட்டுவரால் எழப்பகட்டேர்
ஆற்றலவன் கொழுக்கிழித்த
சால்வழிபோய் அசைந்தேறிச்
சேற்றலவன் கருவுயிர்க்க
முருகுயிர்க்கும் செழுங்கமலம்.
2

நனைமருவும் சினைபொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
தினகரமண் டலம்வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனமருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல்மழையோ மதுமழையோ
பொழிவொழியா பூஞ்சோலை.
3

பாளைவிரி மணங்கமழும்
பைங்காய்வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசைமுட்டித்
தடங்கிடங்கின் எழப்பாய்ந்த
வாளைபுதை யச்சொரிந்த
பழம்மிதப்ப வண்பலவின்
நீளமுதிர் கனிகிழிதேன்
நீத்தத்தில் எழுந்துகளும்.
4

வயல்வளமுஞ் செயல்படுபைந்
துடவையிடை வருவளமும்
வியலிடம்எங் கணும்நிறைய
மிக்கபெருந் திருவினவாம்
புயலடையும் மாடங்கள்
பொலிவெய்த மலிவுடைத்தாய்
அயலிடைவே றடிநெருங்கக்
குடிநெருங்கி யுளதவ்வூர்.
5
Go to top

மற்றவ்வூர்ப் புறம்பணையின்
வயல்மருங்கு பெருங்குலையில்
சுற்றம்விரும் பியகிழமைத்
தொழிலுழவர் கிளைதுவன்றிப்
பற்றியபைங் கொடிச்சுரைமேற்
படர்ந்தபழங் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில்பல
நிறைந்துளதோர் புலைப்பாடி.
6

கூருகிர்மெல் லடியளகின்
குறும்பார்ப்புக் குழுச்சுழலும்
வார்பயில்முன் றிலில்நின்ற
வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ்
காரிரும்பின் சரிசெறிகைக்
கருஞ்சிறார் கவர்ந்தோட
ஆர்சிறுமென் குரைப்படக்கும்
அரைக்கசைத்த இருப்புமணி.
7

வன்சிறுதோல் மிசையுழத்தி
மகவுறக்கும் நிழன்மருதுந்
தன்சினைமென் பெடையொடுங்குந்
தடங்குழிசிப் புதைநீழல்
மென்சினைய வஞ்சிகளும்
விசிப்பறைதூங் கினமாவும்
புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப்
புடைத்தெங்கும் உடைத்தெங்கும்.
8

செறிவலித்திண் கடைஞர்வினைச்
செயல்புரிவை கறையாமக்
குறியளக்க அழைக்குஞ்செங்
குடுமிவா ரணச்சேக்கை
வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி
விரிநீழல் மருங்கெல்லாம்
நெறிகுழற்புன் புலைமகளிர்
நெற்குறுபாட் டொலிபரக்கும்.
9

புள்ளுந்தண் புனற்கலிக்கும்
பொய்கையுடைப் புடையெங்கும்
தள்ளும்தாள் நடையசையத்
தளையவிழ்பூங் குவளைமது
விள்ளும்பைங் குழற்கதிர்நெல்
மிலைச்சியபுன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களிதூங்கக்
கறங்குபறை யுங்கலிக்கும்.
10
Go to top

இப்படித்தா கியகடைஞர்
இருப்பின்வரைப் பினின்வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன்கழற்கே
விளைத்தஉணர் வொடும்வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை
யான்றதொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார்
எனவொருவர் உளரானார்.
11

பிறந்துணர்வு தொடங்கியபின்
பிறைக்கண்ணிப் பெருத்தகைபால்
சிறந்தபெருங் காதலினால்
செம்மைபுரி சிந்தையராய்
மறந்தும்அயல் நினைவின்றி
வருபிறப்பின் வழிவந்த
அறம்புரிகொள் கையராயே
அடித்தொண்டின் நெறிநின்றார்.
12

ஊரில்விடும் பறைத்துடவை
உணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார்
தலைநின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப்
படையண்ணல் கோயில்தொறும்
பேரிகையே முதலாய
முகக்கருவி பிறவினுக்கும்.
13

போர்வைத்தோல் விசிவார்என்
றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும்
யாழுக்கும் நிலைவகையில்
சேர்வுற்ற தந்திரியும்
தேவர்பிரான் அர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ
சனையும்இவை அளித்துள்ளார்.
14

இவ்வகையால் தந்தொழிலின்
இயன்றவெலாம் எவ்விடத்தும்
செய்வனவுங் கோயில்களிற்
திருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு
மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பிற் பாடுதலு
மாய்நிகழ்வார் அந்நாளில்.
15
Go to top

திருப்புன்கூர்ச் சிவலோகன்
சேவடிகள் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள்
வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டங்
காதனூர் தனில்நின்றும்
வருத்தமுறுங் காதலினால்
வந்தவ்வூர் மருங்கணைந்தார்.
16

சீரேறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
புரிந்தருளிப் புலப்படுத்தார்.
17

சிவலோகம் உடையவர்தம்
திருவாயில் முன்னின்று
பவலோகங் கடப்பவர்தம்
பணிவிட்டுப் பணிந்தெழுந்து
சுவலோடு வாரலையப்
போவார்பின் பொருசூழல்
அவலோடும் அடுத்ததுகண்
டாதரித்துக் குளந்தொட்டார்.
18

வடங்கொண்ட பொன்னிதழி
மணிமுடியார் திருவருளால்
தடங்கொண்ட குளத்தளவு
சமைத்ததற்பின் தம்பெருமான்
இடங்கொண்ட கோயில்புறம்
வலங்கொண்டு பணிந்தெழுந்து
நடங்கொண்டு விடைகொண்டு
தம்பதியில் நண்ணினார்.
19

இத்தன்மை ஈசர்மகிழ்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சி
மெய்த்ததிருத் தொண்டுசெய்து
விரவுவார் மிக்கெழுந்த
சித்தமொடுந் திருத்தில்லைத்
திருமன்று சென்றிறைஞ்ச
உய்த்தபெருங் காதலுணர்
வொழியாது வந்துதிப்ப.
20
Go to top

அன்றிரவு கண்துயிலார்
புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிஅணை தருதன்மை
உறுகுலத்தோ டிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான்
ஏவலெனப் போக்கொழிவார்
நன்றுமெழுங் காதல்மிக
நாளைப்போ வேன்என்பார்.
21

நாளைப்போ வேன்என்று
நாள்கள்செலத் தரியாது
பூளைப்பூ வாம்பிறவிப்
பிணிப்பொழியப் போவாராய்ப்
பாளைப்பூங் கமுகுடுத்த
பழம்பதியி னின்றும்போய்
வாளைப்போத் தெழும்பழனம்
சூழ்தில்லை மருங்கணைவார்.
22

செல்கின்ற போழ்தந்தத்
திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த
பயில்வேள்வி எழும்புகையும்
மல்குபெருங் கிடையோதும்
மடங்கள்நெருங் கினவுங்கண்
டல்குந்தங் குலம்நினைந்தே
அஞ்சியணைந் திலர்நின்றார்.
23

நின்றவர்அங் கெய்தரிய
பெருமையினை நினைப்பார்முன்
சென்றிவையுங் கடந்தூர்சூழ்
எயில்திருவா யிலைப்புக்கால்
குன்றனைய மாளிகைகள்
தொறுங்குலவும் வேதிகைகள்
ஒன்றியமூ வாயிரம்அங்
குளவென்பார் ஆகுதிகள்.
24

இப்பரிசா யிருக்கவெனக்
கெய்தலரி தென்றஞ்சி
அப்பதியின் மதிற்புறத்தின்
ஆராத பெருங்காதல்
ஒப்பரிதாய் வளர்ந்தோங்க
உள்ளுருகிக் கைதொழுதே
செப்பரிய திருவெல்லை
வலங்கொண்டு செல்கின்றார்.
25
Go to top

இவ்வண்ணம் இரவுபகல்
வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த
அடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
மன்றில்நடங் கும்பிடுவ
தெவ்வண்ணம் எனநினைந்தே
ஏசறவி னொடுந்துயில்வார்.
26

இன்னல்தரும் இழிபிறவி
இதுதடையென் றேதுயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள்
ஆடுவார் அறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர்
வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண்
முறுவலொடும் அருள்செய்வார்.
27

இப்பிறவி போய்நீங்க
எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன்
முன்னணைவாய் எனமொழிந்
தப்பரிசே தில்லைவாழ்
அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளா னார்அருளி
அம்பலத்தே மேவினார்.
28

தம்பெருமான் பணிகேட்ட
தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில்
முன்பச்ச முடன்ஈண்டி
எம்பெருமான் அருள்செய்த
பணிசெய்வோம் என்றேத்தித்
தம்பரிவு பெருகவருந்
திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.
29

ஐயரே அம்பலவர்
அருளால்இப் பொழுதணைந்தோம்
வெய்யஅழல் அமைத்துமக்குத்
தரவேண்டி எனவிளம்ப
நையுமனத் திருத்தொண்டர்
நானுய்ந்தேன் எனத்தொழுதார்
தெய்வமறை முனிவர்களும்
தீயமைத்த படிமொழிந்தார்.
30
Go to top

மறையவர்கள் மொழிந்ததற்பின்
தென்றிசையின் மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சும் திருவாயில்
முன்னாகப் பிஞ்ஞகர்தம்
நிறையருளால் மறையவர்கள்
நெருப்பமைத்த குழியெய்தி
இறையவர்தாள் மனங்கொண்டே
எரிசூழ வலங்கொண்டார்.
31

கைதொழுது நடமாடும்
கழலுன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண்
எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப்
புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க
வேணிமுடி கொண்டெழுந்தார்.
32

செந்தீமேல் எழும்பொழுது
செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார்
அந்தரதுந் துபிநாதம்
வந்தெழுந்த துயர்விசும்பில்
வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர்மந் தாரத்தின்
பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.
33

திருவுடைய தில்லைவாழ்
அந்தணர்கள் கைதொழுதார்
பரவரிய தொண்டர்களும்
பணிந்துமனங் களிபயின்றார்
அருமறைசூழ் திருமன்றில்
ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப்
போவாராம் மறைமுனிவர்.
34

தில்லைவாழ் அந்தணரும்
உடன்செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார்
கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லைபோய் உள்புகுந்தார்
உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார்
யாவர்களுங் கண்டிலரால்.
35
Go to top

அந்தணர்கள் அதிசயித்தார்
அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர்
தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையும்
துணையடிகள் தொழுதிருக்க
அந்தமிலா ஆனந்தப்
பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.
36

மாசுடம்பு விடத்தீயில்
மஞ்சனஞ்செய் தருளிஎழுந்
தாசில்மறை முனியாகி
அம்பலவர் தாளடைந்தார்
தேசுடைய கழல்வாழ்த்தித்
திருக்குறிப்புத் தொண்டர்வினைப்
பாசம்அற முயன்றவர்தம்
திருத்தொண்டின் பரிசுரைப்பாம்.
37

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000