பகர்ந்துலகு சீர்போற்றும்
பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனல் கொள்ளிடம்பொன்
செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும்
முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு
மேற்கானாட் டாதனுர்.
|
1
|
நீற்றலர்பே ரொளிநெருங்கும்
அப்பதியில் நிறைகரும்பின்
சாற்றலைவன் குலைவயலிற்
தகட்டுவரால் எழப்பகட்டேர்
ஆற்றலவன் கொழுக்கிழித்த
சால்வழிபோய் அசைந்தேறிச்
சேற்றலவன் கருவுயிர்க்க
முருகுயிர்க்கும் செழுங்கமலம்.
|
2
|
நனைமருவும் சினைபொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
தினகரமண் டலம்வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனமருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல்மழையோ மதுமழையோ
பொழிவொழியா பூஞ்சோலை.
|
3
|
பாளைவிரி மணங்கமழும்
பைங்காய்வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசைமுட்டித்
தடங்கிடங்கின் எழப்பாய்ந்த
வாளைபுதை யச்சொரிந்த பழம்மிதப்ப வண்பலவின்
நீளமுதிர் கனிகிழிதேன்
நீத்தத்தில் எழுந்துகளும்.
|
4
|
வயல்வளமுஞ் செயல்படுபைந்
துடவையிடை வருவளமும்
வியலிடம்எங் கணும்நிறைய மிக்கபெருந் திருவினவாம்
புயலடையும் மாடங்கள்
பொலிவெய்த மலிவுடைத்தாய்
அயலிடைவே றடிநெருங்கக்
குடிநெருங்கி யுளதவ்வூர்.
|
5
|
| Go to top |
மற்றவ்வூர்ப் புறம்பணையின்
வயல்மருங்கு பெருங்குலையில்
சுற்றம்விரும் பியகிழமைத்
தொழிலுழவர் கிளைதுவன்றிப்
பற்றியபைங் கொடிச்சுரைமேற்
படர்ந்தபழங் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில்பல
நிறைந்துளதோர் புலைப்பாடி.
|
6
|
கூருகிர்மெல் லடியளகின்
குறும்பார்ப்புக் குழுச்சுழலும்
வார்பயில்முன் றிலில்நின்ற
வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ்
காரிரும்பின் சரிசெறிகைக்
கருஞ்சிறார் கவர்ந்தோட
ஆர்சிறுமென் குரைப்படக்கும்
அரைக்கசைத்த இருப்புமணி.
|
7
|
வன்சிறுதோல் மிசையுழத்தி
மகவுறக்கும் நிழன்மருதுந்
தன்சினைமென் பெடையொடுங்குந்
தடங்குழிசிப் புதைநீழல்
மென்சினைய வஞ்சிகளும்
விசிப்பறைதூங் கினமாவும்
புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப்
புடைத்தெங்கும் உடைத்தெங்கும்.
|
8
|
செறிவலித்திண் கடைஞர்வினைச்
செயல்புரிவை கறையாமக்
குறியளக்க அழைக்குஞ்செங்
குடுமிவா ரணச்சேக்கை
வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி
விரிநீழல் மருங்கெல்லாம்
நெறிகுழற்புன் புலைமகளிர்
நெற்குறுபாட் டொலிபரக்கும்.
|
9
|
புள்ளுந்தண் புனற்கலிக்கும்
பொய்கையுடைப் புடையெங்கும்
தள்ளும்தாள் நடையசையத்
தளையவிழ்பூங் குவளைமது
விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலைச்சியபுன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறை யுங்கலிக்கும்.
|
10
|
| Go to top |
இப்படித்தா கியகடைஞர்
இருப்பின்வரைப் பினின்வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன்கழற்கே
விளைத்தஉணர் வொடும்வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை
யான்றதொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார்
எனவொருவர் உளரானார்.
|
11
|
பிறந்துணர்வு தொடங்கியபின்
பிறைக்கண்ணிப் பெருத்தகைபால்
சிறந்தபெருங் காதலினால்
செம்மைபுரி சிந்தையராய்
மறந்தும்அயல் நினைவின்றி
வருபிறப்பின் வழிவந்த
அறம்புரிகொள் கையராயே
அடித்தொண்டின் நெறிநின்றார்.
|
12
|
ஊரில்விடும் பறைத்துடவை உணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார்
தலைநின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப்
படையண்ணல் கோயில்தொறும்
பேரிகையே முதலாய
முகக்கருவி பிறவினுக்கும்.
|
13
|
போர்வைத்தோல் விசிவார்என்
றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும்
யாழுக்கும் நிலைவகையில்
சேர்வுற்ற தந்திரியும்
தேவர்பிரான் அர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ
சனையும்இவை அளித்துள்ளார்.
|
14
|
இவ்வகையால் தந்தொழிலின்
இயன்றவெலாம் எவ்விடத்தும்
செய்வனவுங் கோயில்களிற்
திருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு
மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பிற் பாடுதலு
மாய்நிகழ்வார் அந்நாளில்.
|
15
|
| Go to top |
திருப்புன்கூர்ச் சிவலோகன்
சேவடிகள் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள்
வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டங்
காதனூர் தனில்நின்றும்
வருத்தமுறுங் காதலினால்
வந்தவ்வூர் மருங்கணைந்தார்.
|
16
|
சீரேறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
புரிந்தருளிப் புலப்படுத்தார்.
|
17
|
சிவலோகம் உடையவர்தம்
திருவாயில் முன்னின்று
பவலோகங் கடப்பவர்தம்
பணிவிட்டுப் பணிந்தெழுந்து
சுவலோடு வாரலையப்
போவார்பின் பொருசூழல்
அவலோடும் அடுத்ததுகண்
டாதரித்துக் குளந்தொட்டார்.
|
18
|
வடங்கொண்ட பொன்னிதழி
மணிமுடியார் திருவருளால்
தடங்கொண்ட குளத்தளவு
சமைத்ததற்பின் தம்பெருமான்
இடங்கொண்ட கோயில்புறம்
வலங்கொண்டு பணிந்தெழுந்து
நடங்கொண்டு விடைகொண்டு
தம்பதியில் நண்ணினார்.
|
19
|
இத்தன்மை ஈசர்மகிழ்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சி
மெய்த்ததிருத் தொண்டுசெய்து
விரவுவார் மிக்கெழுந்த
சித்தமொடுந் திருத்தில்லைத்
திருமன்று சென்றிறைஞ்ச
உய்த்தபெருங் காதலுணர்
வொழியாது வந்துதிப்ப.
|
20
|
| Go to top |
அன்றிரவு கண்துயிலார்
புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிஅணை தருதன்மை
உறுகுலத்தோ டிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான்
ஏவலெனப் போக்கொழிவார்
நன்றுமெழுங் காதல்மிக
நாளைப்போ வேன்என்பார்.
|
21
|
நாளைப்போ வேன்என்று
நாள்கள்செலத் தரியாது
பூளைப்பூ வாம்பிறவிப்
பிணிப்பொழியப் போவாராய்ப்
பாளைப்பூங் கமுகுடுத்த
பழம்பதியி னின்றும்போய்
வாளைப்போத் தெழும்பழனம்
சூழ்தில்லை மருங்கணைவார்.
|
22
|
செல்கின்ற போழ்தந்தத் திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த
பயில்வேள்வி எழும்புகையும்
மல்குபெருங் கிடையோதும்
மடங்கள்நெருங் கினவுங்கண்
டல்குந்தங் குலம்நினைந்தே
அஞ்சியணைந் திலர்நின்றார்.
|
23
|
நின்றவர்அங் கெய்தரிய
பெருமையினை நினைப்பார்முன்
சென்றிவையுங் கடந்தூர்சூழ்
எயில்திருவா யிலைப்புக்கால்
குன்றனைய மாளிகைகள்
தொறுங்குலவும் வேதிகைகள்
ஒன்றியமூ வாயிரம்அங்
குளவென்பார் ஆகுதிகள்.
|
24
|
இப்பரிசா யிருக்கவெனக்
கெய்தலரி தென்றஞ்சி
அப்பதியின் மதிற்புறத்தின்
ஆராத பெருங்காதல்
ஒப்பரிதாய் வளர்ந்தோங்க
உள்ளுருகிக் கைதொழுதே
செப்பரிய திருவெல்லை
வலங்கொண்டு செல்கின்றார்.
|
25
|
| Go to top |
இவ்வண்ணம் இரவுபகல்
வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த
அடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
மன்றில்நடங் கும்பிடுவ
தெவ்வண்ணம் எனநினைந்தே
ஏசறவி னொடுந்துயில்வார்.
|
26
|
இன்னல்தரும் இழிபிறவி
இதுதடையென் றேதுயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள்
ஆடுவார் அறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர்
வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண்
முறுவலொடும் அருள்செய்வார்.
|
27
|
இப்பிறவி போய்நீங்க
எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன்
முன்னணைவாய் எனமொழிந்
தப்பரிசே தில்லைவாழ்
அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளா னார்அருளி
அம்பலத்தே மேவினார்.
|
28
|
தம்பெருமான் பணிகேட்ட
தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில்
முன்பச்ச முடன்ஈண்டி
எம்பெருமான் அருள்செய்த
பணிசெய்வோம் என்றேத்தித்
தம்பரிவு பெருகவருந்
திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.
|
29
|
ஐயரே அம்பலவர்
அருளால்இப் பொழுதணைந்தோம்
வெய்யஅழல் அமைத்துமக்குத்
தரவேண்டி எனவிளம்ப
நையுமனத் திருத்தொண்டர்
நானுய்ந்தேன் எனத்தொழுதார்
தெய்வமறை முனிவர்களும்
தீயமைத்த படிமொழிந்தார்.
|
30
|
| Go to top |
மறையவர்கள் மொழிந்ததற்பின்
தென்றிசையின் மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சும் திருவாயில்
முன்னாகப் பிஞ்ஞகர்தம்
நிறையருளால் மறையவர்கள்
நெருப்பமைத்த குழியெய்தி
இறையவர்தாள் மனங்கொண்டே
எரிசூழ வலங்கொண்டார்.
|
31
|
கைதொழுது நடமாடும்
கழலுன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண்
எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப்
புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க
வேணிமுடி கொண்டெழுந்தார்.
|
32
|
செந்தீமேல் எழும்பொழுது
செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார்
அந்தரதுந் துபிநாதம்
வந்தெழுந்த துயர்விசும்பில்
வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர்மந் தாரத்தின்
பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.
|
33
|
திருவுடைய தில்லைவாழ்
அந்தணர்கள் கைதொழுதார்
பரவரிய தொண்டர்களும்
பணிந்துமனங் களிபயின்றார்
அருமறைசூழ் திருமன்றில்
ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப்
போவாராம் மறைமுனிவர்.
|
34
|
தில்லைவாழ் அந்தணரும்
உடன்செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார்
கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லைபோய் உள்புகுந்தார்
உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார்
யாவர்களுங் கண்டிலரால்.
|
35
|
| Go to top |
அந்தணர்கள் அதிசயித்தார்
அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர்
தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையும்
துணையடிகள் தொழுதிருக்க
அந்தமிலா ஆனந்தப்
பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.
|
36
|
மாசுடம்பு விடத்தீயில்
மஞ்சனஞ்செய் தருளிஎழுந்
தாசில்மறை முனியாகி
அம்பலவர் தாளடைந்தார்
தேசுடைய கழல்வாழ்த்தித்
திருக்குறிப்புத் தொண்டர்வினைப்
பாசம்அற முயன்றவர்தம்
திருத்தொண்டின் பரிசுரைப்பாம்.
|
37
|