சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.270   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

வையம் புரக்குந் தனிச்செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும்
செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல்
புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும்
ஏறூர் ஏமப் பேறூரால்.
1

மாலை பயிலும் தோரணங்கள்
மருங்கு பயிலும் மணிமறுகு
வேலை பயிலும் புனல்பருகு
மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்தஇருள்
சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேதஒலி
கழுநீர் பயிலும் செழுநீர்ச்செய்.
2

பணையில் விளைந்த வெண்ணெல்லின்
பரப்பின் மீது படச்செய்ய
துணர்மென் கமலம் இடைஇடையே
சுடர்விட் டெழுந்து தோன்றுவன
புணர்வெண் புரிநூ லவர்வேள்விக்
களத்தில் புனைந்த வேதிகைமேல்
மணல்வெண் பரப்பின் இடைஇடையே
வளர்த்த செந்தீ மானுமால்.
3

பெருமை விளங்கும் அப்பதியில்
பேணும் நீற்றுச் சைவநெறி
ஒருமை வழிவாழ் அந்தணர்தம்
ஓங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை உலகும் ஈசர்கழல்
இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி
அடிகள் என்பா ராயினார்.
4

வாய்மை மறைநூல் சீலத்தால்
வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்
தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப்
பொருளென் றறியுந் துணிவினார்
சாம கண்டர் செய்யகழல்
வழிபட் டொழுகும் தன்மைநிலை
யாம இரவும் பகலும்உணர்
வொழியா இன்பம் எய்தினார்.
5
Go to top

அவ்வூர் நின்றும் திருவாரூர்
அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்தன்
விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமும் எனக்கொள்ளும்
எண்ணம் உடையார் பலநாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்
திருப்பா தங்கள் வணங்கினார்.
6

செம்பொற் புற்றின் மாணிக்கச்
செழுஞ்சோ தியைநேர் தொழுஞ்சீலம்
தம்பற் றாக நினைந்தணைந்து
தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோந்
தம்பொற் புரிசைத் திருமுன்றில்
அணைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர்க் கிடமாங் கோயிலினுள்
புக்கு வணங்க நண்ணினார்.
7

நண்ணி இறைஞ்சி அன்பினால்
நயப்புற் றெழுந்த காதலுடன்
அண்ண லாரைப் பணிந்தெழுவார்
அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்குபல
பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்
கெடுத்த கருத்தின் இசைந்தெழுவார்.
8

எழுந்த பொழுது பகற்பொழுதங்
கிறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியி னிடையப்பாற்
செல்லிற் செல்லும் பொழுதென்ன
ஒழிந்தங் கணைந்தோர் மனையில்விளக்
குறுநெய் வேண்டி உள்புகலும்
அழிந்த நிலைமை அமணர்மனை
ஆயிற் றங்கண் அவருரைப்பார்.
9

கையில் விளங்கு கனலுடையார்
தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ
ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்
குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும்
பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார்.
10
Go to top

அருகர் மதியா துரைத்தவுரை
ஆற்றா ராகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன்
பெயர்ந்து போந்து பிறையணிந்த
முருகு விரியும் மலர்க்கொன்றை
முடியார் கோயில் முன்எய்தி
உருகும் அன்பர் பணிந்துவிழ
ஒருவாக் கெழுந்த துயர்விசும்பில்.
11

வந்த கவலை மாற்றும்இனி
மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர்
முகந்து கொடுவந் தேற்றுமென
அந்தி மதியம் அணிந்தபிரான்
அருளால் எழுந்த மொழிகேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி
அடிகள் செய்வ தறிந்திலரால்.
12

சென்னி மிசைநீர் தரித்தபிரான்
அருளே சிந்தை செய்தெழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு
நாதர் நாமம் நவின்றேத்தி
அந்நீர் முகந்து கொண்டேறி
அப்பர் கோயில் அடைந்தகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப
முறுக்குந் திரிமேல் நீர்வார்த்தார்.
13

சோதி விளக்கொன் றேற்றுதலும்
சுடர்விட் டெழுந்த ததுநோக்கி
ஆதி முதல்வர் அரனெறியார்
கோயில் அடைய விளக்கேற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிருங் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு
நீரால் எரித்தார் நாடறிய.
14

நிறையும் பரிசு திருவிளக்கு
விடியும் அளவும் நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாம்
கொள்ள வேண்டும் நீர்வார்த்து
மறையின் பொருளை அர்ச்சிக்கும்
மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே
அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.
15
Go to top

இரவு சென்று தம்பதியில்
எய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழில்முறையே
விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்தருளிப்
பள்ளி கொண்டு புலர்காலை
அரவம் அணிவார் பூசையமைத்
தாரூர் நகரின் மீண்டணைந்தார்.
16

வந்து வணங்கி அரனெறியார்
மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக்
கெங்கும் ஏற்றி அடிபணிவார்.
17

பண்டு போலப் பலநாளும்
பயிலும் பணிசெய் தவர்ஒழுகத்
தண்டி அடிக ளால்அமணர்
கலக்கம் விளைந்து சார்வில்அமண்
குண்டர் அழிய ஏழுலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர்கழல்
அமரர் பணியும் அணியாரூர்.
18

நாத மறைதேர் நமிநந்தி
அடிக ளார்நற் தொண்டாகப்
பூத நாதர் புற்றிடங்கொள்
புனிதர்க் கமுது படிமுதலாம்
நீதி வளவன் தான்வேண்டும்
நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான்
வேதா கமநூல் விதிவிளங்க.
19

வென்றி விடையார் மதிச்சடையார்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
என்றுந் திருவா ரூர்ஆளும்
இயல்பின் முறைமைத் திருவிளையாட்
டொன்றுஞ் செயலும் பங்குனிஉத்
திரமாந் திருநாள் உயர்சிறப்பும்
நின்று விண்ணப் பஞ்செய்த
படிசெய் தருளும் நிலைபெற்றார்.
20
Go to top

இன்ன பரிசு திருப்பணிகள்
பலவுஞ் செய்தே ஏழுலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர்
மன்னர் அடியார் வழிநிற்பார்
அன்ன வண்ணந் திருவிளையாட்
டாடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்தி
அடிகள் தொழுதார் நாம்உய்ய.
21

தேவர் பெருமான் எழுச்சிதிரு
மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவ ரென்னா துடன்சேவித்
தெல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமுமுடன்
சேவித் தணைந்து விண்ணவர்தம்
காவ லாளர் ஓலக்கம்
அங்கே கண்டு களிப்புற்றார்.
22

பொழுது வைகச் சேவித்துப்
புனிதர் மீண்டுங் கோயில்புகத்
தொழுது தம்மூர் மருங்கணைந்து
தூய மனையுள் புகுதாதே
இழுதும் இருள்சேர் இரவுபுறங்
கடையில் துயில இல்லத்து
முழுதுந் தருமம் புரிமனையார்
வந்துள் புகுத மொழிகின்றார்.
23

திங்கள் முடியார் பூசனைகள்
முடித்துச் செய்யுங் கடன்முறையால்
அங்கி தனைவேட் டமுதுசெய்து
பள்ளி கொள்வீர் எனஅவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்
கெழுச்சி சேவித் துடன்நண்ண
எங்கும் எல்லா ரும்போத
இழிவு தொடக்கிற் றெனைஎன்று.
24

ஆத லாலே குளித்தடுத்த
தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசையினைத்
தொடங்க வேண்டும் அதற்குநீ
சீத நன்னீர் முதலான
கொண்டிங் கணைவாய் எனச்செப்பக்
காதல் மனையார் தாமும்அவை
கொணரும் அதற்குக் கடிதணைந்தார்.
25
Go to top

ஆய பொழுது தம்பெருமான்
அருளா லேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ
அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்தணைய
விண்ணோர் பெருமான் கழல்நினைந்து
தூய அன்பர் துயில்கொண்டார்
துயிலும் பொழுது கனவின்கண்.
26

மேன்மை விளங்குந் திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு
வருவார் போல வந்தருளி
ஞான மறையோய் ஆரூரில்
பிறந்தார் எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய்என்
றருளிச் செய்தங் கெதிர்அகன்றார்.
27

ஆதி தேவர் எழுந்தருள
உணர்ந்தார் இரவர்ச் சனைசெய்யா
தேதம் நினைந்தேன் எனஅஞ்சி
எழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி
மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர்
புகுத எதிர்அந் நகர்காண்பார்.
28

தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத் தனைய மணிகண்டர்
வடிவே யாகிப் பெருகொளியால்
மொய்வைத் தமர்ந்த மேனியராம்
பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத் தஞ்சி அவனிமிசை
விழுந்து பணிந்து களிசிறந்தார்.
29

படிவம் மாற்றிப் பழம்படியே
நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார்.
30
Go to top

நீறு புனைவார் அடியார்க்கு
நெடுநாள் நியதி யாகவே
வேறு வேறு வேண்டுவன
எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில்
இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர்
விளம்பப் பெற்ற பெருமையினார்.
31

இன்ன வகையால் திருப்பணிகள்
எல்லா உலகும் தொழச்செய்து
நன்மை பெருகும் நமிநந்தி
அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும்
அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல்மிகும்
வளர்பொற் சோதி மன்னினார்.
32

நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள்தா மரைநீர் மடுவின்கண்
தனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியின் மீட்பனவே.
33

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000