வையம் புரக்குந் தனிச்செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும்
செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல்
புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும்
ஏறூர் ஏமப் பேறூரால்.
|
1
|
மாலை பயிலும் தோரணங்கள்
மருங்கு பயிலும் மணிமறுகு
வேலை பயிலும் புனல்பருகு
மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்தஇருள்
சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேதஒலி
கழுநீர் பயிலும் செழுநீர்ச்செய்.
|
2
|
பணையில் விளைந்த வெண்ணெல்லின் பரப்பின் மீது படச்செய்ய
துணர்மென் கமலம் இடைஇடையே
சுடர்விட் டெழுந்து தோன்றுவன
புணர்வெண் புரிநூ லவர்வேள்விக்
களத்தில் புனைந்த வேதிகைமேல்
மணல்வெண் பரப்பின் இடைஇடையே
வளர்த்த செந்தீ மானுமால்.
|
3
|
பெருமை விளங்கும் அப்பதியில்
பேணும் நீற்றுச் சைவநெறி
ஒருமை வழிவாழ் அந்தணர்தம்
ஓங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை உலகும் ஈசர்கழல்
இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி
அடிகள் என்பா ராயினார்.
|
4
|
வாய்மை மறைநூல் சீலத்தால்
வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்
தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப்
பொருளென் றறியுந் துணிவினார்
சாம கண்டர் செய்யகழல்
வழிபட் டொழுகும் தன்மைநிலை
யாம இரவும் பகலும்உணர்
வொழியா இன்பம் எய்தினார்.
|
5
|
| Go to top |
அவ்வூர் நின்றும் திருவாரூர்
அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்தன்
விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமும் எனக்கொள்ளும்
எண்ணம் உடையார் பலநாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்
திருப்பா தங்கள் வணங்கினார்.
|
6
|
செம்பொற் புற்றின் மாணிக்கச்
செழுஞ்சோ தியைநேர் தொழுஞ்சீலம்
தம்பற் றாக நினைந்தணைந்து
தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோந்
தம்பொற் புரிசைத் திருமுன்றில்
அணைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர்க் கிடமாங் கோயிலினுள்
புக்கு வணங்க நண்ணினார்.
|
7
|
நண்ணி இறைஞ்சி அன்பினால்
நயப்புற் றெழுந்த காதலுடன்
அண்ண லாரைப் பணிந்தெழுவார்
அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்குபல
பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்
கெடுத்த கருத்தின் இசைந்தெழுவார்.
|
8
|
எழுந்த பொழுது பகற்பொழுதங்
கிறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியி னிடையப்பாற்
செல்லிற் செல்லும் பொழுதென்ன
ஒழிந்தங் கணைந்தோர் மனையில்விளக்
குறுநெய் வேண்டி உள்புகலும்
அழிந்த நிலைமை அமணர்மனை
ஆயிற் றங்கண் அவருரைப்பார்.
|
9
|
கையில் விளங்கு கனலுடையார்
தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ
ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்
குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும்
பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார்.
|
10
|
| Go to top |
அருகர் மதியா துரைத்தவுரை
ஆற்றா ராகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன்
பெயர்ந்து போந்து பிறையணிந்த
முருகு விரியும் மலர்க்கொன்றை
முடியார் கோயில் முன்எய்தி
உருகும் அன்பர் பணிந்துவிழ
ஒருவாக் கெழுந்த துயர்விசும்பில்.
|
11
|
வந்த கவலை மாற்றும்இனி
மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர்
முகந்து கொடுவந் தேற்றுமென
அந்தி மதியம் அணிந்தபிரான்
அருளால் எழுந்த மொழிகேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி
அடிகள் செய்வ தறிந்திலரால்.
|
12
|
சென்னி மிசைநீர் தரித்தபிரான்
அருளே சிந்தை செய்தெழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு
நாதர் நாமம் நவின்றேத்தி
அந்நீர் முகந்து கொண்டேறி
அப்பர் கோயில் அடைந்தகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப
முறுக்குந் திரிமேல் நீர்வார்த்தார்.
|
13
|
சோதி விளக்கொன் றேற்றுதலும்
சுடர்விட் டெழுந்த ததுநோக்கி
ஆதி முதல்வர் அரனெறியார்
கோயில் அடைய விளக்கேற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிருங் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு
நீரால் எரித்தார் நாடறிய.
|
14
|
நிறையும் பரிசு திருவிளக்கு
விடியும் அளவும் நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாம் கொள்ள வேண்டும் நீர்வார்த்து
மறையின் பொருளை அர்ச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே
அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.
|
15
|
| Go to top |
இரவு சென்று தம்பதியில்
எய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழில்முறையே
விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்தருளிப்
பள்ளி கொண்டு புலர்காலை
அரவம் அணிவார் பூசையமைத்
தாரூர் நகரின் மீண்டணைந்தார்.
|
16
|
வந்து வணங்கி அரனெறியார்
மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக்
கெங்கும் ஏற்றி அடிபணிவார்.
|
17
|
பண்டு போலப் பலநாளும்
பயிலும் பணிசெய் தவர்ஒழுகத்
தண்டி அடிக ளால்அமணர்
கலக்கம் விளைந்து சார்வில்அமண்
குண்டர் அழிய ஏழுலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர்கழல்
அமரர் பணியும் அணியாரூர்.
|
18
|
நாத மறைதேர் நமிநந்தி
அடிக ளார்நற் தொண்டாகப்
பூத நாதர் புற்றிடங்கொள்
புனிதர்க் கமுது படிமுதலாம்
நீதி வளவன் தான்வேண்டும்
நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான்
வேதா கமநூல் விதிவிளங்க.
|
19
|
வென்றி விடையார் மதிச்சடையார்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
என்றுந் திருவா ரூர்ஆளும்
இயல்பின் முறைமைத் திருவிளையாட்
டொன்றுஞ் செயலும் பங்குனிஉத்
திரமாந் திருநாள் உயர்சிறப்பும்
நின்று விண்ணப் பஞ்செய்த
படிசெய் தருளும் நிலைபெற்றார்.
|
20
|
| Go to top |
இன்ன பரிசு திருப்பணிகள்
பலவுஞ் செய்தே ஏழுலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர்
மன்னர் அடியார் வழிநிற்பார்
அன்ன வண்ணந் திருவிளையாட்
டாடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்தி
அடிகள் தொழுதார் நாம்உய்ய.
|
21
|
தேவர் பெருமான் எழுச்சிதிரு
மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவ ரென்னா துடன்சேவித்
தெல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமுமுடன்
சேவித் தணைந்து விண்ணவர்தம்
காவ லாளர் ஓலக்கம்
அங்கே கண்டு களிப்புற்றார்.
|
22
|
பொழுது வைகச் சேவித்துப்
புனிதர் மீண்டுங் கோயில்புகத்
தொழுது தம்மூர் மருங்கணைந்து
தூய மனையுள் புகுதாதே
இழுதும் இருள்சேர் இரவுபுறங்
கடையில் துயில இல்லத்து
முழுதுந் தருமம் புரிமனையார்
வந்துள் புகுத மொழிகின்றார்.
|
23
|
திங்கள் முடியார் பூசனைகள்
முடித்துச் செய்யுங் கடன்முறையால்
அங்கி தனைவேட் டமுதுசெய்து
பள்ளி கொள்வீர் எனஅவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்
கெழுச்சி சேவித் துடன்நண்ண
எங்கும் எல்லா ரும்போத
இழிவு தொடக்கிற் றெனைஎன்று.
|
24
|
ஆத லாலே குளித்தடுத்த
தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசையினைத்
தொடங்க வேண்டும் அதற்குநீ
சீத நன்னீர் முதலான
கொண்டிங் கணைவாய் எனச்செப்பக்
காதல் மனையார் தாமும்அவை
கொணரும் அதற்குக் கடிதணைந்தார்.
|
25
|
| Go to top |
ஆய பொழுது தம்பெருமான்
அருளா லேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ
அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்தணைய
விண்ணோர் பெருமான் கழல்நினைந்து
தூய அன்பர் துயில்கொண்டார்
துயிலும் பொழுது கனவின்கண்.
|
26
|
மேன்மை விளங்குந் திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு
வருவார் போல வந்தருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய்என்
றருளிச் செய்தங் கெதிர்அகன்றார்.
|
27
|
ஆதி தேவர் எழுந்தருள
உணர்ந்தார் இரவர்ச் சனைசெய்யா
தேதம் நினைந்தேன் எனஅஞ்சி
எழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி
மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர்
புகுத எதிர்அந் நகர்காண்பார்.
|
28
|
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத் தனைய மணிகண்டர்
வடிவே யாகிப் பெருகொளியால்
மொய்வைத் தமர்ந்த மேனியராம்
பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத் தஞ்சி அவனிமிசை
விழுந்து பணிந்து களிசிறந்தார்.
|
29
|
படிவம் மாற்றிப் பழம்படியே
நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார்.
|
30
|
| Go to top |
நீறு புனைவார் அடியார்க்கு
நெடுநாள் நியதி யாகவே
வேறு வேறு வேண்டுவன
எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில்
இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர்
விளம்பப் பெற்ற பெருமையினார்.
|
31
|
இன்ன வகையால் திருப்பணிகள்
எல்லா உலகும் தொழச்செய்து
நன்மை பெருகும் நமிநந்தி
அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும்
அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல்மிகும்
வளர்பொற் சோதி மன்னினார்.
|
32
|
நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள்தா மரைநீர் மடுவின்கண்
தனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியின் மீட்பனவே.
|
33
|