மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநா டதனில் வயல் பரப்பும்
நன்னித் திலவெண் திரைப்பாலி
நதியின் வடபால் நலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
யலர்புக் காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள்
விழவிற் காடு வேற்காடு.
|
1
|
செம்பொற் புரிசைத் திருவேற்கா
டமர்ந்த செய்ய சடைக்கற்றை
நம்பர்க் கும்பர்க் கமுதளித்து
நஞ்சை யமுது செய்தவருக்
கிம்பர்த் தலத்தில் வழியடிமை
யென்றுங் குன்றா வியல்பில்வரும்
தம்பற் றுடைய நிலைவேளாண்
குலத்தல் தலைமை சார்ந்துள்ளார்.
|
2
|
கோதின் மரபில் பிறந்துவளர்ந்
தறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின்
அடைவே பொருளென் றறிந்தரனார்
காத லடியார்க் கமுதாக்கி
அமுது செய்யக் கண்டுண்ணும்
நீதி முறைமை வழுவாத
நியதி பூண்ட நிலைமையார்.
|
3
|
தூய அடிசில் நெய்கன்னல்
சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி
விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர்வேண்டும்
படியால் உதவி அன்புமிக
ஏயு மாறு நாடோறும்
இனைய பணிசெய் தின்புற்றார்.
|
4
|
இன்ன செயலின் ஒழுகுநாள்
அடியார் மிகவும் எழுந்தருள
முன்ன முடைமை யானபொருள்
முழுதும் மாள அடிமையுடன்
மன்னு காணி யானநிலம்
மற்று முள்ள திறம்விற்றே
அன்னம் அளித்து மேன்மேலும்
ஆரா மனத்தா ராயினார்.
|
5
|
| Go to top |
அங்கண் அவ்வூர் தமக்கொருபற்று
அடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற
இலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கும் வகையால் தாமுன்பு
கற்ற தன்மை நற்சூதால்
பொங்கு பொருளாக் கவுமங்குப்
பொருவா ரின்மை யினிற்போவார்.
|
6
|
பெற்றம் ஏறிப் பலிக்குவரும்
பெருமான் அமருந் தானங்கள்
உற்றன் அன்பாற் சென்றெய்
உருகு முள்ளத் தொடும்பணிந்து
கற்ற சூதால் நியதியாங்
கடனு முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக்குடந்தை
யடைந்தார் வந்து சிலநாளில்.
|
7
|
இருளாரும் மணிகண்டர்
அடியார்க்கின் னமுதளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப்
புகழ்க்குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூதாடி
யுறுபொருள்வென் றனநம்பர்
அருளாக வேகொண்டங்
கமுதுசெய்வித் தின்புறுவார்.
|
8
|
முற்சூது தாந்தோற்று
முதற்பணையம் அவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும்
வென்றுபெரும் பொருளாக்கிச்
சொற்சூதுதான் மறுத்தாரைச்
சுரிகையுரு விக்குத்தி
நற்சூதர் மூர்க்கரெனும்
பெயர்பெற்றார் நானிலத்தில்.
|
9
|
சூதினில்வென் றெய்துபொருள்
துரிசற்ற நல்லுணர்வில்
தீதகல அமுதாக்கு
வார்கொள்ளத் தாந்தீண்டார்
காதலுடன் அடியார்கள்
அமுதுசெயக் கடைப்பந்தி
ஏதமிலா வகைதாமும்
அமுதுசெய்தங் கிருக்குநாள்.
|
10
|
| Go to top |
நாதன்தன் அடியார்க்கு
நல்லடிசில் நாடோறும்
ஆதரவி னால்அமுது
செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல
இவ்வுலகை விட்டதற்பின்
பூதங்கள் இசைபாட
வாடுவார் புரம்புக்கார்.
|
11
|
வல்லார்கள் தமைவென்று
சூதினால் வந்தபொருள்
அல்லாருங் கறைக்கண்டர்
அடியவர்கள் தமக்காக்கும்
நல்லார்நற் சூதராம்
மூர்க்கர்கழல் நாம்வணங்கிச்
சொல்லார்சீர்ச் சோமாசி
மாறர்திறஞ் சொல்லுவாம்.
|
12
|