எருக்கத்தம் புலியூர் மன்னி
வாழ்பவர் இறைவன் தன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப்
பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம்
பணிந்துபோய் விளங்கு கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும்
ஆலவாய் பணியச் சென்றார்.
|
1
|
ஆலவாய் அமர்ந்தார் கோயில்
வாயிலை அடைந்து நின்று
பாலையீ ரேழு கோத்த
பண்ணினிற் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில்
கைபல முறையும் ஆராய்ந்
தேலவார் குழலாள் பாகர்
பாணிகள் யாழில் இட்டார்.
|
2
|
மற்றவர் கருவிப் பாடல்
மதுரைநீ டால வாயில்
கொற்றவன் திருவுள் ளத்துக்
கொண்டுதன் தொண்டர்க் கெல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ
அருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார்
திருமுன்பு கொண்டு புக்கார்.
|
3
|
அன்பர்கள் கொண்டு புக்க
பொழுதினில் அரிவை பாகன்
மன்பெரும் பாண னாரும்
மாமறை பாட வல்லார்
தன்பெரும் பணியாம் என்று
தமக்குமெய் யுணர்த லாலே
முன்பிருந் தியாழிற் கூடல்
முதல்வரைப் பாடு கின்றார்.
|
4
|
திரிபுரம் எரித்த வாறும்
தேர்மிசை நின்ற வாறும்
கரியினை யுரித்த வாறும்
காமனைக் காய்ந்த வாறும்
அரிஅயற் கரிய வாறும்
அடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப்
பரமனார் அருளி னாலே.
|
5
|
| Go to top |
அந்தரத் தெழுந்த ஓசை
அன்பினிற் பாணர் பாடும்
சந்தயாழ் தரையிற் சீதந்
தாக்கில்வீக் கழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர்
இடுமெனத் தொண்ட ரிட்டார்
செந்தமிழ்ப் பாண னாருந்
திருவருள் பெற்றுச் சேர்ந்தார்.
|
6
|
தமனியப் பலகை ஏறித்
தந்திரிக் கருவி வாசித்
துமையொரு பாகர் வண்மை
உலகெலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி
எண்ணில்தா னங்கள் கும்பிட்
டமரர்நா டாளாது ஆரூர்
ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.
|
7
|
கோயில் வாயில் முன்னடைந்து
கூற்றன் செற்ற பெருந்திறலும்
தாயின் நல்ல பெருங்கருணை
அடியார்க் களிக்குந் தண்ணளியும்
ஏயுங் கருவி யில்தொடுத்தங்
கிட்டுப் பாடக் கேட்டுஅங்கண்
வாயில் வேறு வடதிசையில்
வகுப்பப் புகுந்து வணங்கினார்.
|
8
|
மூலத் தானத் தெழுந்தருளி
இருந்த முதல்வன் தனைவணங்கிச்
சாலக் காலம் அங்கிருந்து
தம்பி ரான்தன் திருவருளால்
சீலத் தார்கள் பிரியாத
திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தார்
அமருந் தானம் பலவணங்கி.
|
9
|
ஆழி சூழுந் திருத்தோணி
யமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமைஞானம்
ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன்
கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில்
வந்தார் சந்த இசைப்பாணர்.
|
10
|
| Go to top |
ஞானம் உண்டார் கேட்டருளி
நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
உடனே பரமர் தாளடைந்தார்.
|
11
|
வரும்பான் மையினில் பெரும்பாணர்
மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ
லூரில் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும்
பணியும் அணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார்
பெருமை சொல்ல லுறுகின்றாம்.
|
12
|