துள மதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையார், இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,
வள மதி தடவிய, மாடக்கோயிலே.
|
1
|
இறைவன் , துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன் . இளம்பிறையை அணிந்துள்ள சடையன் . எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும் . | |
மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர்
மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
வையகம் மகிழ்தர, வைகல் மேல்-திசை
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே.
|
2
|
இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர் . வேதத்தை அருளிச்செய்தவர் . அவர் , மை தீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில் , சிவந்த கண்ணுடைய கோச்செங்கட் சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும் . | |
கணி அணி மலர்கொடு, காலை மாலையும்
பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர்,
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே.
|
3
|
வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும் , மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர் . அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவ மாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும் . | |
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்-
தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம்
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்-திசை,
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே.
|
4
|
பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும் . | |
விடம் அடை மிடற்றினர், வேத நாவினர்
மடமொழி மலைமகளோடும் வைகு இடம்
மட அனம் நடை பயில் வைகல் மா நகர்க்
குட திசை நிலவிய மாடக்கோயிலே.
|
5
|
இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர் . வேதங்களை ஓதும் நாவினர் . அவர் , இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவி யோடு வீற்றிருந்தருளும் இடம் , இள அன்னப்பறவைகள் நடை பயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும் . | |
| Go to top |
நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்,
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.
|
6
|
புனிதமான கங்கையையும் , பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது , மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும் . | |
எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன்
திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை,
வரு முகில் அணவிய மாடக்கோயிலே.
|
7
|
அக்கினியாகிய அம்பை , மேருமலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரி யுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது , வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும் . | |
மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
வலம் வரு மலை அன மாடக்கோயிலே.
|
8
|
மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது வலிமையை அழித்து , பின்னர் அவன் சாம கானம் பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது , மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும் . | |
மாலவன், மலரவன், நேடி மால் கொள
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலைகொடு அணி மறைவாணர் வைகலில்,
மால் அன மணி அணி மாடக்கோயிலே.
|
9
|
திருமாலும் , பிரமனும் இறைவனின் அடிமுடி களைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள , நெருப்பு மலையாய் நின்ற , வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து , வேதங்களை ஓதி வழிபாடு செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால் அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும் . | |
கடு உடை வாயினர், கஞ்சி வாயினர்
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே.
|
10
|
கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும் , கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும் , புத்தர்களின் பிடகநூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது , மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும் . | |
| Go to top |
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை,
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்-
பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே.
|
11
|
அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர் . | |