முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.
|
1
|
நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற , உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும் . | |
மகரம் ஆடும் கொடி மன் மத வேள் தனை,
நிகரல் ஆகா நெருப்பு எழ, விழித்தான் இடம்
பகர வாள் நித்திலம், பல்மகரத்தோடும்,
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே.
|
2
|
மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வாள் போல் மின்னும் முத்துக்களும் , பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று உயர்ந்து விளங்கும் மாளிகைகளையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . | |
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்,
உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம்
பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.
|
3
|
இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே எல்லாப் பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன் . தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவமில்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உருவு கொள்ளும்படி தோற்றுவித்து அருள்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பருவகாலங்களிலும் , திருவிழாக்காலங்களிலும் பாடலும் , ஆடலும் செல்வத்தால் மிகச் சிறப்புற நடக்கும் புகழையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . கருவினாலன்றி என்றது சிவபெருமான் கருவயப்பட்டுப் பிறவான் என்பதை உணர்த்தும் . ` பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை ` ( தி .6 ப .11 பா .1) என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை இங்கு நினைவுகூர்க . பிறப்பில்லாத அவனுக்கு இறப்புமில்லை . அவன் அநாதி நித்தப்பொருள் . ( அநாதி - தோற்றமும் , அழிவுமில்லாதது ) உருவினாலன்றி - தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாதவன் . தன்பொருட்டு உருவு கொள்ளாது அடியார் பொருட்டு உருவம் கொள்பவன் . ` நானாவித உருவால் நமை ஆள்வான் ` ( தி .1 ப .9 பா .5) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கையும் , ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ` என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் ( தி .6 ப .97 பா .10) இங்கு நினைவுகூர்க . | |
உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே.
|
4
|
இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர் . அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல் , தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . | |
வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான்
அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர்
செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம்,
திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.
|
5
|
திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் , செருந்தி , மாதவி , செண்பகம் இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும் . | |
| Go to top |
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால்
கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.
|
6
|
இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர் . எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர் . திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர் . குமரக்கடவுளின் தந்தை . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் இவற்றைக் களைந்து , நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை அடக்கி , மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி , சிவனே மெய்ப்பொருள் எனத் தெளிந்தவர்கள் வழிபடும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . | |
கான் அலைக்கும்(ம்) அவன் கண் இடந்து அப்ப, நீள
வான் அலைக்கும் தவத் தேவு வைத்தான் இடம்
தான் அலைத் தெள் அம் ஊர், தாமரைத் தண்துறை
தேன் அலைக்கும் வயல், தென்குடித்திட்டையே.
|
7
|
காட்டிலுள்ள உயிர்களை வருத்தும் வேடர் குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பியபோது , தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி , தவத்தையுடைய கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தெளிந்த நீர்நிலைகளில் மலர்ந்துள்ள தாமரைகளில் தண்டிலிருந்து தேன்பெருகிப் பாயும் வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . | |
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால்
சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.
|
8
|
திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும் வல்லமைபெற்ற அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழ்ச் சிக்குண்டு ஓலமிட்டு அலறும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற மூக்குடைய கயல் , வரால் , சேல் போன்ற மீன்கள் வந்து பாயும் வயல்களையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . | |
நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய்,
காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ,
சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே.
|
9
|
திருமாலும் , பிரமனும் தேடியும் அடிமுடி காணவொண்ணாதவாறு விளங்கிய , உலகிற்கு நிமித்த காரணமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இப்பூவுலக தேவர்கள் என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய புகழுடன் சிவ பெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . | |
குண்டிகைக் கை உடைக் குண்டரும், புத்தரும்,
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர், தொழும்
வண்டு இரைக்கும் பொழில்-தண்டலைக் கொண்டல் ஆர்
தெண்திரைத் தண்புனல்,-தென்குடித்திட்டையே!
|
10
|
கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும் , புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர் . வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ , தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டையைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள் . | |
| Go to top |
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
பாவமே.
|
11
|
தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி , கடற்கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த , சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை . | |