வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.
|
1
|
நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப் பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர் . இன்ன தன்மையர் என்று அளந்தறிய முடியாதவர் . அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும் . | |
வான் இலங்க விளங்கும் இளம்பிறை-
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மடநோக்கு உடையாளொடே.
|
2
|
வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை மாலைபோல் விரும்பி அணிந்த தலைவரான சிவபெருமான் , கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார் . | |
கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;
கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?
|
3
|
இறைவர் எருதுக் கொடியுடையவர் . காலனைக் காலால் உதைத்தவர் . திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் பூஞ் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும் ? ஒருவராலும் முடியாது . | |
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?
|
4
|
பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும் பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார் . அவரே எம் கடவுள் அல்லரே ? | |
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்,
காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!
|
5
|
எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு , மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும் , மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள் . | |
| Go to top |
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார், இடு வெண்தலையில் பலி;
கள்வனார்; உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.
|
6
|
துள்ளுகின்ற இளமையான மானை , அழகிய கையில் ஏந்தி , ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை நினைந்து ஏத்த வினையாவும் நீங்கும் . | |
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!
|
7
|
மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும் , வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும் , பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்தவனும் , முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக ! | |
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
|
8
|
இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நொறுங்கும்படி கயிலைமலையில் தன்காற்பெருவிரலை ஊன்றிய , தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , மரக்கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும் . | |
ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்;
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.
|
9
|
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல் , காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திருமுடியையும் , திருவடியையும் அறிய முற்பட்டு , தமது தாழ்ச்சியால் அவற்றை அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர் . நூலறிவாலும் , ஆன்ம அறிவாலும் அறியப்படாதவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும் . | |
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!
|
10
|
சிவந்த மெல்லிய மஞ்சட்காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும் , அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ ? திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள் . | |
| Go to top |
அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.
|
11
|
அழகிய , குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் , பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப் பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர் . | |