சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.014   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தசபுராணம் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Y5yd2BE7cIw   Add audio link Add Audio

பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயம் ஆய்,
திரு நெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட, மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே! எனலும்,
அருள் கொடு மா விடத்தை, எரியாமல், உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.

1
பெரிய மலையைச் சுற்றிக் கடைகயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து நீங்கிய தேவர் ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும் , விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்து விசையொடு சென்று அந்நஞ்சு எங்கும் பரவ , ` பெருமானே ! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு ஒரு கழுவாய் அருளிச்செய்வாயாக ` என்று எல்லோரும் வேண்டவும் அருளினால் , அப்பெரிய விடத்தை , மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட பெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான் .

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட, நிலம் நின்று தம்பம் அது அப்
பரம் ஒரு தெய்வம் எய்த, இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்,
பரமுதல் ஆய தேவர், சிவன் ஆயமூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

2
பரவிய ஓசையை உடைய வெள்ளப்பெருக்கு மேற் சென்று நீண்ட கண்டங்களை மூழ்க்க , நிலத்திலே நின்ற தீத்தம்பத்தில் பரம்பொருளாகிய ஒப்பற்ற தெய்வம் அடைய , பிரமனும் திருமாலும் இதனை ஒத்த தீப்பிழம்பு முன்னும் இல்லை என்று கருதி அந்நாளில் இரு பக்கங்களிலும் நின்று பணியுமாறு அவர்கள் அதன் முடியையும் அடியையும் அறிய முடியாமல் நின்ற பெரியோனாய் மேம்பட்ட முற்பட்ட தேவனாம் சிவமூர்த்தியாகிய பெருமானே நமக்குப் பாதுகாவல் நல்கும் சரணியன் ஆவான் .

காலமும் நாள்கள் ஊழி படையா முன், ஏக உரு ஆகி, மூவர் உருவில்,
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி, நின்ற தழலோன்,
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறள் ஆய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரம் ஆய மூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

3
நாண்மீன்கள் முதல் ஊழி முடியப் பாகுபட்ட காலத்தையும் படைத்தற்கு முன்பு ஒன்றாய் நின்றவனாய் , மும் மூர்த்திகள் உருவிலும் அவர்கள் உயிருக்கு உயிராய் அமைந்தவனாய் , அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் பொருளாய் விளங்கி நிற்பவனாய் , உள்ள சோதி வடிவான பெருமான் வாமனனாகி மண்ணும் மேலை விண்ணுலகும் அடங்கிய ஏழுலகமும் உண்டு , ஓர் ஆலிலை மேல் சிறு குழந்தையாய்ப் பள்ளி கொண்ட திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாய் உள்ளவன் . அவன் தான் நமக்கு ஒப்பற்ற சரணியன் .

நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்,
ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே.

4
நெடிது உயர்ந்த விண்ணும் மண்ணும் நெடிய கடல் மலைகளொடு ஏழுலகமும் முழுதும் வருந்த வருத்திய தாரகனுடைய கொடுமைகளுக்கு ஆற்றாமல் தேவர் கூட்டத்தார் குவித்த கையராகிப் பெருமானுடைய புகழ்களைக் கூறியவாறு தொழுத அளவில் , தன் இறுதியை நினைத்து உயிர்தப்பி ஓடிய தாரகனுடைய உடலைப் பிளந்தும் நீங்காத கோபம் நீங்குதற்பொருட்டு மகாதாண்டவத்தை ஆடிய தீயாடியப்பருடைய திருவடிகளே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குவன .

நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று
அலை நலிவு அஞ்சி ஓடி, அரியோடு தேவர் அரணம் புக, தன் அருளால்-
கொலை நலி வாளி, மூள அரவு, அம் கை நாணும், அனல் பாய நீறு புரம் ஆம்-
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

5
எதிர்த்து நிலைத்து நிற்பதற்குரிய வலிமை இல்லாமையால் , மண்ணையும் , விண்ணையும் எங்கும் அழித்துக் கொண்டு சஞ்சரிக்கும் திரிபுரங்கள் துன்புறுத்தும் துயரத்துக்கு அஞ்சி ஓடித் திருமாலோடு தேவர்கள் அடைக்கலம் என்று அடையத் தன் அருளால் கொலைத் தொழிலால் வருத்தும் திருமாலாகிய அம்பில் தீக்கடவுள் இணையவும் , கையிலுள்ள வாசுகி என்ற பாம்பாகிய நாணில் தீப்பாயவும் மேருமலையாகிய வில் கையில் தளரவும் முப்புரங்களும் சாம்பலாகிவிடுமாறு வில்லை வளைவித்துச் செயற்படுத்திய அருட் கொடையாளனாம் அப்பெருமானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .
Go to top

நீல நல் மேனி, செங்கண், வளை வெள் எயிற்றின், எரிகேசன், நேடி வரும் நாள
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண், வந்து குறுகிப்
பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த, உயிர் வவ்வு பாசம் விடும்-அக்
காலனை வீடு செய்த கழல் போலும், அண்டர் தொழுது ஓது சூடு கழலே.

6
கருநீல மேனியனும் சிவந்த கண்ணினனும் வளைந்த வெள்ளைக் கோரப் பற்களை உடையவனும் நெருப்புப் போன்ற சிவந்த மயிர் முடியை உடையவனும் ஆகிய காலன் , மார்க்கண்டேயனைத் தேடிவந்த அன்று , அம்முனிவன் காலையிலே நல்ல மலர் மாலைகளைக் கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்த நேரத்தில் அவனிடத்து வந்து அணுகி அவனை மிகவும் அச்சுறுத்தி அவன் உயிரைக் கவரக்கயிற்றை வீசினானாக , அக்காலனை உதைத்து அழித்த சிவபெருமான் திருவடிகளே தேவர்கள் தொழுது வாழ்த்தித் தலைமேல் சூடும் திருவடிகளாகும் .

உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில்,-அவி உண்ண வந்த இமையோா
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம் ஆய்-
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டு கொள்கை கடனே.

7
தவத்தில் மேம்பட்ட தக்கன் நிகழ்த்திய மிகச் சிறப்பான வேள்வியில் அவியைப் பெற்று உண்ண வந்த தேவர்களும் அச்சம் மிக்குற்ற வேள்வித் தலைவனும் அக்கினியும் சந்திரனும் ஒறுக்கப்பட்டு அடைந்த நிலைமையை நோக்கி அச்சத்தோடு நின்று பிரமனும் , திருமாலும் , ` எங்கள் அறியாமை முதலிய குற்றங்களைப் பொறுத்தருள்வாய் `, என்று வணங்கி அப்பாற் செல்ல , வெற்றியுற்ற தன்மையைக் கண்ட , தீயைப் போன்ற செந்நிறத்தன் ஆகிய எங்கள் தந்தையின் திருவடிகளைக் கண்டு வழிபடுவதே பிறவாதிருக்க விரும்பும் உயிர்களின் கடமையாகும் .

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா,
உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட, இருள் ஓட, நெற்றி ஒரு கண்
அலர்தர, அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச, மதி போல்
அலர்தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவன், ஆம், நமக்கு ஓர் சரணே.

8
அழகும் பண்பும் மிக்க பார்வதி எம்பெருமானோடு ஓடி விளையாடிய பொழுது அவனுடைய கண்களைக் கைகளால் பொத்த , ஏழு உலகங்களையும் முழுதுமாக இருட்டுக் கவர்ந்து கொள்ளவே , எம்பெருமானுடைய ஒற்றை நெற்றிக்கண் அந்த இருள் அகலுமாறு திறக்க , அதுகண்டு அஞ்சிப் பார்வதி கண்களை மூடிய கைகளை எடுத்துவிட்டு எம்பெருமானை வணங்க , சந்திரனைப் போலவும் , சூரியனைப் போலவும் ஏனைய இருகண்களையும் ஒளிவிடச் செய்த அம்முக்கண் மூர்த்தியே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

கழை படு காடு தென்றல் குயில் கூவ, அஞ்சுகணையோன், -அணைந்து புகலும்
மழை வடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ, இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல,
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல் வண்ணன் எந்தை சரணே.

9
கரும்புகள் காடுபோல வளர்ந்துள்ள கருப்பங் கொல்லையில் தென்றல் உலவ , குயில்கூவ , ஐந்துமலரம்புகளை உடையவனாய் நெருங்கி வந்து , தனக்குப் பக்க பலமாக இருப்பதாகக் கூறிய கார்மேக வண்ணனாகிய திருமாலையும் இந்திரனையும் விட்டு நீங்கிய , மலர் அம்புகளை விடுத்த மன்மதனுடைய அழகிய உடல் சாம்பலாகித் தரையில் விழ அதனைக் கண்ட தேவர் கூட்டங்கள் நெருப்பு என்று சொல்லி அஞ்சி நீங்குமாறு நெருப்பை வெளிப் படுத்தும் நெற்றியின் ஒற்றைக்கண் சிவந்த தீ நிறத்தவனாகிய எங்கள் தந்தையே நமக்குச் சரணியன் ஆவான் .

தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக, நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை, எந்தை பெருமான், உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல் வித்து, அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி, ஆழியவனுக்கு அளித்த அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

10
பெரிய தாமரைப் பூக்கள் ஆயிரத்தில் ஒன்று குறைய , வழிபாடு நிறைவதற்காகத் தன் செந்தாமரைக் கண் ஒன்றை இடந்து அதனால் அருச்சித்து வழிபாட்டை நிறைவு செய்த திருமாலை எம் தந்தையாகிய பெருமான் மகிழ்ந்து , தன் ஒளிமிக்க சேவடியால் வட்டமாகச் சக்கரத்தை உண்டாக்கி அதனைச் சுழலச் செய்து , சலந்தரனுடைய மார்பைப் பிளந்த கொடுமை மிக்க வலிமை உடைய சக்கரத்தைப் பாற்கடலையுடைய திருமாலுக்கு அளித்தான் . அவனே எமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .
Go to top

கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது; கருதேல், உன் வீரம்; ஒழி, நீ!
முடுகுவது அன்று, தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா,
விடு விடு என்று சென்று விரைவு உற்று, அரக்கன், வரை உற்று எடுக்க, முடிதோள
நெடு நெடு இற்று வீழ, விரல் உற்ற பாதம் நினைவு உற்றது, என் தன் மனனே.

11
`விரைந்து செல்லும் தேராயினும் அது கயிலை மலை மீது செல்லாது ; உன் வீரத்தைப் பெரிதாகக் கருதாது விட்டு ஒழி . என்னிடத்தில் கோபிப்பது அறம் அன்று ` என்று நிறுத்திய தேரில் நின்று கூறிய பாகனை வெகுண்டு , வேகமாகச் சென்று விரைவாக இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட , அவனுடைய தலைகளும் தோள்களும் நெடுநெடு என்னும் ஓசையோடு இற்றுவிழுமாறு அழுத்தியது சிவபெருமானுடைய திருவடியின் விரல் ஒன்று . அத்தகைய திருவடிகளை என் உள்ளம் எண்ணலுற்றது .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தசபுராணம்
4.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பருவரை ஒன்று சுற்றி அரவம்
Tune - பழம்பஞ்சுரம்   (பொது -தசபுராணம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000