சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) - திருநேரிசை:காந்தாரம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=q21t0hnipwo   Add audio link Add Audio

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

1
தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து , தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும் அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார் . அப்பெருமான் திருப்பருப் பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் .

கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

2
முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி , வீட்டுவாயில்தோறும் பிச்சை எடுப்பவராய் , மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி , தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்ற முக்கட்பெருமான் தம்மைப் பற்றிய அடியவர்கள்மாட்டு அன்பு செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் . ( காட்டிக் காண்டல் என்ற நயம்பற்றிக் கற்பித்துக் கற்ற எனப்பட்டது .)

கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

3
இரவிலே தீயில் நின்று ஆடுபவராய் , பகைவருடைய மும்மதில்களையும் அழித்த செயலினராய் , வஞ்சனை யில்லாத மனத்தவராகிக் கையால் தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான் தம்மை முன்நின்று துதிப்பவர்களுக்குப் பல அருள்செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் .

கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

4
பண்டு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்தி , சாம்பலைப்பூசி , சுடுகாட்டில் தங்குபவராகி , உலகப்பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் சிறப்பாக அருள்கள் செய்து பட்டுடையை அணிந்த பெருமான் பருப்பதம் நோக்கினாரே .

கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.

5
மண்டையோட்டை ஏந்திய கையினராய் , மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி , வடிவை எடுத்துக் கொண்டவராய் , உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப்பூசி , தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்து , படம்எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பெருமான் பருப்பதம் நோக்கினார் .
Go to top

வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.

6
பெருமான் , அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய் , கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து , மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய் , உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து , கையில் தீயை ஏந்தி , விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார் .

மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.

7
கார்மேகம் போன்ற நீலகண்டராய் , யானையின் தோலைப் போர்த்து , ஏகம்பத்தில் விரும்பி உறையும் பெருமானாய் , தேவர்கள் முன்நின்று துதித்துப் புகழ , அவர்களைக் காப்பாற்றும் ஏகாம்பரநாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு பார்வதி பாகராய்க் காளையை ஏறி ஊர்ந்து பருப்பதம் நோக்கினார் .

பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.

8
பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும் , தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான் , நீலகண்டராய் , ஒரு கையில் மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார் .

அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.

9
சிவந்த கண்களை உடைய திருமால் முன்நின்று துதித்துப் புகழ்ந்து சிவனாதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார் பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை இவர்ந்து பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார் . உடம்பாகிய அவ்விடத்திலே மயக்கத்தை உடைய ஐம்பொ களால் அவை விரும்பியபடி செயற்படுதலொழிந்து உங்களுடைய மயக்கம் நீங்கு தலை விரும்பினால் அப்பெருமானாரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள் .

அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.

10
வலிய காளையை வாகனமாகக் கொண்டு , இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றி , கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டர் ஒளி வீசும் தம் திரு மேனியின் மீது திருநீற்றை அணிந்து , பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பதம் நோக்கினார் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
1.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)
4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
7.079   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மானும், மரை இனமும், மயில்
Tune - நட்டபாடை   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருவதநாதர் பருவதநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000