கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.
|
1
|
தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து , தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும் அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார் . அப்பெருமான் திருப்பருப் பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் . | |
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.
|
2
|
முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி , வீட்டுவாயில்தோறும் பிச்சை எடுப்பவராய் , மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி , தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்ற முக்கட்பெருமான் தம்மைப் பற்றிய அடியவர்கள்மாட்டு அன்பு செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் . ( காட்டிக் காண்டல் என்ற நயம்பற்றிக் கற்பித்துக் கற்ற எனப்பட்டது .) | |
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.
|
3
|
இரவிலே தீயில் நின்று ஆடுபவராய் , பகைவருடைய மும்மதில்களையும் அழித்த செயலினராய் , வஞ்சனை யில்லாத மனத்தவராகிக் கையால் தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான் தம்மை முன்நின்று துதிப்பவர்களுக்குப் பல அருள்செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் . | |
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.
|
4
|
பண்டு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்தி , சாம்பலைப்பூசி , சுடுகாட்டில் தங்குபவராகி , உலகப்பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் சிறப்பாக அருள்கள் செய்து பட்டுடையை அணிந்த பெருமான் பருப்பதம் நோக்கினாரே . | |
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.
|
5
|
மண்டையோட்டை ஏந்திய கையினராய் , மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி , வடிவை எடுத்துக் கொண்டவராய் , உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப்பூசி , தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்து , படம்எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பெருமான் பருப்பதம் நோக்கினார் . | |
| Go to top |
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.
|
6
|
பெருமான் , அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய் , கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து , மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய் , உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து , கையில் தீயை ஏந்தி , விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார் . | |
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.
|
7
|
கார்மேகம் போன்ற நீலகண்டராய் , யானையின் தோலைப் போர்த்து , ஏகம்பத்தில் விரும்பி உறையும் பெருமானாய் , தேவர்கள் முன்நின்று துதித்துப் புகழ , அவர்களைக் காப்பாற்றும் ஏகாம்பரநாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு பார்வதி பாகராய்க் காளையை ஏறி ஊர்ந்து பருப்பதம் நோக்கினார் . | |
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.
|
8
|
பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும் , தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான் , நீலகண்டராய் , ஒரு கையில் மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார் . | |
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.
|
9
|
சிவந்த கண்களை உடைய திருமால் முன்நின்று துதித்துப் புகழ்ந்து சிவனாதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார் பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை இவர்ந்து பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார் . உடம்பாகிய அவ்விடத்திலே மயக்கத்தை உடைய ஐம்பொ களால் அவை விரும்பியபடி செயற்படுதலொழிந்து உங்களுடைய மயக்கம் நீங்கு தலை விரும்பினால் அப்பெருமானாரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள் . | |
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.
|
10
|
வலிய காளையை வாகனமாகக் கொண்டு , இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றி , கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டர் ஒளி வீசும் தம் திரு மேனியின் மீது திருநீற்றை அணிந்து , பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பதம் நோக்கினார் . | |
| Go to top |