தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!
|
1
|
தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி , தலையில் மாலையை அணிவித்து , நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல் , காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது . | |
பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே!
என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள்
சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே!
நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!
|
2
|
முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே ! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும் , தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே ! திருநீறணிந்த மார்பினனே ! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான் . எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர் ? | |
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்;
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!
|
3
|
வஞ்சனை உடைய யான் , போலித் தொண்டனாய் , காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி , பின் மனத்தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன் . நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு , நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன் . | |
உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி,
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே.
|
4
|
உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக , பசு ஞானமான உணர்வே நெய்யாக , உயிரே திரியாக , சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி , அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும் , முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம் . | |
வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா;
வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்;
வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று
வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே!
|
5
|
வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்கு மிடம் சடைமுடி . அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடைய பாம்புகள் உறங்காவாய் உள்ளன . அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது . அந்தக் கங்கை யினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான் . அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி , வஞ்சனை உடைய அடியேன் , வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன் ? | |
| Go to top |
உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை,
உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி
எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே?
|
6
|
நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து , உருகி அன்பு ஊறி , உள்ளம் உருகினேன் . எந்தையாகிய பெருமானே ! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும் ? | |
மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன்
வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்;
சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ!
|
7
|
பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல , அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க , அடியேன் மயங்குகின்றேன் . உலகத்துக்குத் தலைவனே ! வெறுக்கத்தக்கதாய் , பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய் , நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும்வண்ணம் அடியேனுக்குச் சிவ ஞானத்தை அருளுவாயாக . | |
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை!
சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை,
எங்கு உற்றாய்? என்ற போதா, இங்கு உற்றேன் என் கண்டாயே!
|
8
|
மேம்பட்டவனே ! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே ! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி , உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன் . என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை , எங்கிருக்கின்றாய் என்று வினவினால் , இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக . | |
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ, புகுந்தீர்? என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு,
வெள்ளரோம்! என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.
|
9
|
விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான் , ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக , உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ , என் உள்ளத்தில் கலந்திருந்து , தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார் . | |
பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்;
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!
|
10
|
பார்வதி பாகனாய் உள்ள உருவத்தை யுடைய வள்ளலாகிய சிவபெருமான் , தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான் . சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்மையப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க . | |
| Go to top |