கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப் படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்- நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க் கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.
|
1
|
நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில் , கடிய கையுடைய கூற்றுவனை உதைத் திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர் , கொடிய கண்களை உடைய வெள்ளிய கபாலம் கொண்டு , குறை கொண்டு விலைகூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர் . | |
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை நீதியே கொளப்பாலது?-நின்றியூர் வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய், காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.
|
2
|
வேதங்களை ஓதுபவரும் , விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய ( அர்த்தநாரீசுவரரும் ) எமது கள்வரே ! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ ? உரைத்தருள்வீராக . | |
புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச் சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர் நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர் பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.
|
3
|
புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித் தோலின்மேல் சுற்றியவரும் , திருநீற்றைப் பூசிய மேனியினரும் , சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை , வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா . | |
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும், மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம் நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.
|
4
|
பறையின் ஓசையும் , தெய்வப்பாடல்களின் ஓசையும் , வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது . | |
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள், இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ? நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப் பனையின் ஈர் உரி போர்த்த பரமரே!
|
5
|
நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே ! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள் ! இத்தன்மை உடையவன் , என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை ? | |
| Go to top |
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை! நிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ? எனில், திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.
|
6
|
உரைப்பக் கேட்பீராக ; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை , வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில் மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின் , அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர் . | |
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு இன்றி ஏறலனால்; இது என்கொலோ? நின்றியூர் பதி ஆக நிலாயவன், வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.
|
7
|
திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும் , வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன் , கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ ? | |
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர் கொலை விலால் எயில் எய்த கொடியவன், நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.
|
8
|
நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும் , நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும் , நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர் இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும் . | |
அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும் நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ! இஞ்சிமா மதில் எய்து இமையோர் தொழக் குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.
|
9
|
நெஞ்சமே ! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து , தேவர்கள் தொழ , தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை , நீ , அஞ்சியாயினும் , அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக . | |
எளியனா மொழியா இலங்கைக்கு இறை, களியினால் கயிலாயம் எடுத்தவன், நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் அளியினால்-தொழுவார் வினை அல்குமே.
|
10
|
எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும் . | |
| Go to top |