சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.023   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநின்றியூர் - திருக்குறுந்தொகை அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=0Tjzc5wDpvw   Add audio link Add Audio

கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப்
படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்-
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்
கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

1
நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில் , கடிய கையுடைய கூற்றுவனை உதைத் திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர் , கொடிய கண்களை உடைய வெள்ளிய கபாலம் கொண்டு , குறை கொண்டு விலைகூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர் .

வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை
நீதியே கொளப்பாலது?-நின்றியூர்
வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய்,
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.

2
வேதங்களை ஓதுபவரும் , விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய ( அர்த்தநாரீசுவரரும் ) எமது கள்வரே ! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ ? உரைத்தருள்வீராக .

புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச்
சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர்
நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

3
புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித் தோலின்மேல் சுற்றியவரும் , திருநீற்றைப் பூசிய மேனியினரும் , சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை , வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா .

பறையின் ஓசையும், பாடலின் ஓசையும்,
மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம்
நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

4
பறையின் ஓசையும் , தெய்வப்பாடல்களின் ஓசையும் , வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது .

சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்,
இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ?
நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப்
பனையின் ஈர் உரி போர்த்த பரமரே!

5
நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே ! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள் ! இத்தன்மை உடையவன் , என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை ?
Go to top

உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை!
நிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ? எனில்,
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

6
உரைப்பக் கேட்பீராக ; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை , வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில் மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின் , அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர் .

கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலனால்; இது என்கொலோ?
நின்றியூர் பதி ஆக நிலாயவன்,
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.

7
திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும் , வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன் , கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ ?

நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்,
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.

8
நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும் , நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும் , நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர் இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும் .

அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும்
நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ!
இஞ்சிமா மதில் எய்து இமையோர் தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

9
நெஞ்சமே ! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து , தேவர்கள் தொழ , தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை , நீ , அஞ்சியாயினும் , அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக .

எளியனா மொழியா இலங்கைக்கு இறை,
களியினால் கயிலாயம் எடுத்தவன்,
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால்-தொழுவார் வினை அல்குமே.

10
எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநின்றியூர்
1.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
Tune - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
5.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடுங் கண் வெண்தலை கொண்டு,
Tune - திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.019   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
Tune - நட்டராகம்   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.065   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திருவும், வண்மையும், திண் திறல்
Tune - தக்கேசி   (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000