உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்- படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.
|
1
|
கோவண உடையினரும் , ஒன்றும் குறைவில்லாதவரும் , படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை . | |
மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்; பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.
|
2
|
ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும் , சித்தராகத் திரிபவரும் , அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும் , தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப் பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர் . | |
விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை, கழுது துஞ்சு இருள் காட்டு அகத்து ஆடலான்; பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர்தம் வினை தூளியே.
|
3
|
நிணம் பொருந்திய சூலத்தையும் , வெண் மழு வாளையும் படைக்கலமாக உடையவனும் , பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும் , பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும் . | |
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவு அரியான் இடம் சென்று பார்!-இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் என்றும் மேவி இருந்த அடிகளே.
|
4
|
திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம் , பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும் . இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது . | |
வேழத்தின்(ன்) உரி போர்த்த விகிர்தனார், தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர் தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; யாழின் பாட்டை உகந்த அடிகளே.
|
5
|
வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும் , செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும் , தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர் . | |
| Go to top |
குண்டுபட்டு, குறி அறியாச் சமண்- மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான், கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம் அண்டவாணன், அடி அடைந்து உய்ந்தெனே.
|
6
|
உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண் மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான் , கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன் . | |
வரிப் பை ஆடு அரவு ஆட்டி மதகரி- உரிப்பை மூடிய உத்தமனார் உறை திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.
|
7
|
வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர் . | |
கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல் பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார், பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்- ஆடும் நாகம் அசைத்த-அடிகளே.
|
8
|
செங்கோடலும் , வெண்கோடலும் , கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால் , வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர் , ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர் . | |
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான், வார் உலாம் முலைமங்கை ஓர் பங்கினன், தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!
|
9
|
கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும் , கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும் , பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக . | |
தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம், இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.
|
10
|
அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத் தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும் , நெருக்கித் திருவிரலால் ஊன்ற , சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை . | |
| Go to top |