கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால், இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்! நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல் சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.
|
1
|
அறிவற்றவர்களே ! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது ? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும் , நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல் , உம் துயர்கள் தீரும் . | |
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே, துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ; தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன், நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே.
|
2
|
பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன் ; கேட்பீராக ; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை . | |
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால் பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்! அணுக வேண்டில், அரன்நெறி ஆவது; நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.!
|
3
|
பாவம் செய்தவர்களே ! மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக்கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடத்து வைத்த காதலால் , அவர்கட்கு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால் , நெருங்கிப் பணி செய்ய வேண்டில் அரன் நெறியே அணுகி திருநல்லம் சென்று வழிபடுவீர்களாக . | |
தமக்கு நல்லது; தம் உயிர் போயினால், இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்; உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி- நமக்கு நல்லது-நல்லம் அடைவதே.
|
4
|
தம்முயிர் தம்மைவிட்டு நீங்கினால் தமக்கு நல்லது ; அங்ஙனமே இவ்வுடலாகிய குடிசை இமைப்பொழுது கூட நில்லா இயல்புடையது ; உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற பதியாகிய திருநல்லம் என்னுந் தலத்தை அடைந்து வழிபடுவதே நமக்கு நல்லது ஆகும் . | |
உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம், நரைவிடை உடையான் இடம் நல்லமே பரவுமின்! பணிமின்! பணிவாரொடே விரவுமின்! விரவாரை விடுமினே!
|
5
|
வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முன்பே , நரை உடைய இடபவாகனத்தை உடைய இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய திருநல்லத்திற்சென்று பரவிப் பணிவீர்களாக ; பணிகின்ற அன்பர்களோடு கலந்து வழிபடுவீராக ; அங்ஙனம் கலவாதவர்களை நீங்குவீர்களாக . | |
| Go to top |
அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும், வல்ல ஆறு சிவாய நம என்று, நல்லம் மேவிய நாதன் அடி தொழ, வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
|
6
|
ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும் , திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு ` சிவாயநம ` என்று தொழுதால் வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும் . | |
மாதராரொடு, மக்களும், சுற்றமும், பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே, நாதன் மேவிய நல்லம் நகர் தொழப் போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.
|
7
|
மனைவியரும் , மக்களும் , சுற்றத்தாரும் வேற்றுமைப்பட்டுப் பிரிகின்ற இறுதிக்காலம் வருவதற்குமுன்பே ; தலைவன் மேவியுள்ள திருநல்லமாகிய நகரைத் தொழப் போதுவீர்களாக ; எழுவீர்களாக ; அப்பெருமானே புகலாவான் . | |
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர், செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்; சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ, நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!
|
8
|
வண்டுகளின் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி , நம்மை ஆளுடையானாகிய பெருமான் உறையும் திருநல்லத்தினைத் தொழுவீர்களாக ; தொழுதால் . வெப்பம் பொருந்திய வினைக்கடலினின்றும் நீங்கி நீர் செம்மையாகிய சிவகதியினைச் சேரலாம் . | |
காலம் ஆன கழிவதன் முன்னமே, ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின் மாலும், மா மலரானொடு, மாமறை- நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!
|
9
|
திருமாலும் , பிரமனும் , பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம் . ஆதலால் , பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே , இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக . | |
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி, நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால் சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.
|
10
|
வளம் நிறைந்த தோள்களை உடைய இராவணன் ஆற்றலை விரைந்து ஒழித்த பெருமான் உறைகின்ற பதியாகிய நல்ல நல்லம் என்னும் பெயரை நாவினால் சொல்லும் வல்லமை உடையவர்கள் தூயநெறியிற் சேர்வர் . | |
| Go to top |