சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.043   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநல்லம் - திருக்குறுந்தொகை அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு உமாமகேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=X2PwqK7erCQ   Add audio link Add Audio

கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்!
நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல்
சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.

1
அறிவற்றவர்களே ! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது ? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும் , நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல் , உம் துயர்கள் தீரும் .

பொக்கம் பேசிப் பொழுது கழியாதே,
துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ;
தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்,
நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே.

2
பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன் ; கேட்பீராக ; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை .

பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்!
அணுக வேண்டில், அரன்நெறி ஆவது;
நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.!

3
பாவம் செய்தவர்களே ! மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக்கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடத்து வைத்த காதலால் , அவர்கட்கு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால் , நெருங்கிப் பணி செய்ய வேண்டில் அரன் நெறியே அணுகி திருநல்லம் சென்று வழிபடுவீர்களாக .

தமக்கு நல்லது; தம் உயிர் போயினால்,
இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்;
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி-
நமக்கு நல்லது-நல்லம் அடைவதே.

4
தம்முயிர் தம்மைவிட்டு நீங்கினால் தமக்கு நல்லது ; அங்ஙனமே இவ்வுடலாகிய குடிசை இமைப்பொழுது கூட நில்லா இயல்புடையது ; உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற பதியாகிய திருநல்லம் என்னுந் தலத்தை அடைந்து வழிபடுவதே நமக்கு நல்லது ஆகும் .

உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம்,
நரைவிடை உடையான் இடம் நல்லமே
பரவுமின்! பணிமின்! பணிவாரொடே
விரவுமின்! விரவாரை விடுமினே!

5
வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முன்பே , நரை உடைய இடபவாகனத்தை உடைய இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய திருநல்லத்திற்சென்று பரவிப் பணிவீர்களாக ; பணிகின்ற அன்பர்களோடு கலந்து வழிபடுவீராக ; அங்ஙனம் கலவாதவர்களை நீங்குவீர்களாக .
Go to top

அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும்,
வல்ல ஆறு சிவாய நம என்று,
நல்லம் மேவிய நாதன் அடி தொழ,
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

6
ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும் , திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு ` சிவாயநம ` என்று தொழுதால் வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும் .

மாதராரொடு, மக்களும், சுற்றமும்,
பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே,
நாதன் மேவிய நல்லம் நகர் தொழப்
போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.

7
மனைவியரும் , மக்களும் , சுற்றத்தாரும் வேற்றுமைப்பட்டுப் பிரிகின்ற இறுதிக்காலம் வருவதற்குமுன்பே ; தலைவன் மேவியுள்ள திருநல்லமாகிய நகரைத் தொழப் போதுவீர்களாக ; எழுவீர்களாக ; அப்பெருமானே புகலாவான் .

வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர்,
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்;
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ,
நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!

8
வண்டுகளின் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி , நம்மை ஆளுடையானாகிய பெருமான் உறையும் திருநல்லத்தினைத் தொழுவீர்களாக ; தொழுதால் . வெப்பம் பொருந்திய வினைக்கடலினின்றும் நீங்கி நீர் செம்மையாகிய சிவகதியினைச் சேரலாம் .

காலம் ஆன கழிவதன் முன்னமே,
ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின்
மாலும், மா மலரானொடு, மாமறை-
நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!

9
திருமாலும் , பிரமனும் , பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம் . ஆதலால் , பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே , இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக .

மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி,
நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால்
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.

10
வளம் நிறைந்த தோள்களை உடைய இராவணன் ஆற்றலை விரைந்து ஒழித்த பெருமான் உறைகின்ற பதியாகிய நல்ல நல்லம் என்னும் பெயரை நாவினால் சொல்லும் வல்லமை உடையவர்கள் தூயநெறியிற் சேர்வர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநல்லம்
1.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நிழல் மேய கறை
Tune - குறிஞ்சி   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
5.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
Tune - திருக்குறுந்தொகை   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000