சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நிழல் மேய கறை
பண் - குறிஞ்சி   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=QK_9CQJKKMA
5.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
பண் - திருக்குறுந்தொகை   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=X2PwqK7erCQ

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.085   கல்லால் நிழல் மேய கறை  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருநல்லம் ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு உமாமகேசுவரர் திருவடிகள் போற்றி )
கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[1]
தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ,
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[2]
அந்திமதியோடும் அரவச் சடை தாழ,
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[3]
குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ,
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில்,
தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய்,
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே.

[4]
மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு
பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித்
துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த,
நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[5]
வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை
ஈசன்! என உள்கி எழுவார் வினைகட்கு
நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[6]
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி,
கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக,
வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும்
நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[7]
பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு
கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி,
நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே.

[8]
நாகத்து அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும்
நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே.

[9]
குறி இல் சமணோடு, குண்டர்வண் தேரர்,
அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே!
பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும்,
நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே.

[10]
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.043   கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநல்லம் ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு உமாமகேசுவரர் திருவடிகள் போற்றி )
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்!
நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல்
சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.

[1]
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே,
துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ;
தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்,
நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே.

[2]
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்!
அணுக வேண்டில், அரன்நெறி ஆவது;
நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.!

[3]
தமக்கு நல்லது; தம் உயிர் போயினால்,
இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்;
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி-
நமக்கு நல்லது-நல்லம் அடைவதே.

[4]
உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம்,
நரைவிடை உடையான் இடம் நல்லமே
பரவுமின்! பணிமின்! பணிவாரொடே
விரவுமின்! விரவாரை விடுமினே!

[5]
அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும்,
வல்ல ஆறு சிவாய நம என்று,
நல்லம் மேவிய நாதன் அடி தொழ,
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

[6]
மாதராரொடு, மக்களும், சுற்றமும்,
பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே,
நாதன் மேவிய நல்லம் நகர் தொழப்
போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.

[7]
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர்,
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்;
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ,
நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!

[8]
காலம் ஆன கழிவதன் முன்னமே,
ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின்
மாலும், மா மலரானொடு, மாமறை-
நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!

[9]
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி,
நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால்
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list