சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.044   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=WFDXm6GlCIw   Add audio link Add Audio

மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;
ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.

1
தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும் , பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர் ; ` ஆமாத்தூர் அரனே ! அருள்வாயாக ` என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார் .

சந்தியானை, சமாதி செய்வார் தங்கள்
புந்தியானை, புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனை,
சிந்தியாதவர் தீவினையாளரே.

2
காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப்படுவானும் , யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும் , தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம் மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர் .

காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான்,
போம் ஆத்தை அறியாது, புலம்புவேன்;
ஆமாத்தூர் அரனேழு என்று அழைத்தலும்,
தேமாத்தீம் கனி போல, தித்திக்குமே.

3
காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் ` ஆமாத்தூர் அரனே !` என்று அழைத்தலும் , தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன் .

பஞ்ச பூதவலையில் படுவதற்கு
அஞ்சி, நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன்; நினைவு எய்தலும்,
வஞ்ச ஆறுகள் வற்றின; காண்மினே!

4
ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன் ; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன ; காண்பீராக .

குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்,
அரா மன்னும் சடையான், திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை,
நிராமயன் தனை, நாளும் நினைமினே!

5
குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும் , பாம்பு நிலைபெற்ற சடையனும் , திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும் , நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக .
Go to top

பித்தனை, பெருந்தேவர் தொழப்படும்
அத்தனை, அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை, அடியேன் உள் முயறலும்,
பத்திவெள்ளம் பரந்தது; காண்மினே!

6
பித்தேறியவனும் , பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனும் , அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும் , அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று ; காண்பீர்களாக .

நீற்றின் ஆர் திரு மேனியன்; நேரிழை
கூற்றினான்; குழல் கோலச் சடையில் ஓர்
ஆற்றினான்; அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே.

7
எம்மை ஆளுடைய இறைவன் , திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும் , நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும் , அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன் .

பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர்
சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர்
கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!

8
பண்ணினை உடைய பாடல்களைப் பாடித் தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும் , ஆமாத்தூரில் பொருந்தியவனும் , தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணினுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக !.

குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உயக்-
கொண்ட நாதன், குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார், இடம் ஆமாத்தூர்; காண்மினே!

9
குண்டர்களும் , மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும் . காண்பீர்களாக !

வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை,
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!

10
ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர் . தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான் .
Go to top

விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி
அடர ஓர்விரல் ஊன்றிய, ஆமாத்தூர்
இடம் அதாக் கொண்ட, ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக் கொண்டு இன்புற்று இருப்பனே.

11
அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றியவனும் , ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னுள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாமாத்தூர்
5.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா மாத்து ஆகிய மால்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
6.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணங்கள் தாம் பாடி, வந்து
Tune - திருத்தாண்டகம்   (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000