மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி; ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.
|
1
|
தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும் , பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர் ; ` ஆமாத்தூர் அரனே ! அருள்வாயாக ` என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார் . | |
சந்தியானை, சமாதி செய்வார் தங்கள் புந்தியானை, புத்தேளிர் தொழப்படும் அந்தியானை, ஆமாத்தூர் அழகனை, சிந்தியாதவர் தீவினையாளரே.
|
2
|
காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப்படுவானும் , யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும் , தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம் மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர் . | |
காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான், போம் ஆத்தை அறியாது, புலம்புவேன்; ஆமாத்தூர் அரனேழு என்று அழைத்தலும், தேமாத்தீம் கனி போல, தித்திக்குமே.
|
3
|
காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் ` ஆமாத்தூர் அரனே !` என்று அழைத்தலும் , தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன் . | |
பஞ்ச பூதவலையில் படுவதற்கு அஞ்சி, நானும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சினால் நினைந்தேன்; நினைவு எய்தலும், வஞ்ச ஆறுகள் வற்றின; காண்மினே!
|
4
|
ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன் ; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன ; காண்பீராக . | |
குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார், அரா மன்னும் சடையான், திரு ஆமாத்தூர் இராமனும் வழிபாடு செய் ஈசனை, நிராமயன் தனை, நாளும் நினைமினே!
|
5
|
குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும் , பாம்பு நிலைபெற்ற சடையனும் , திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும் , நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக . | |
| Go to top |
பித்தனை, பெருந்தேவர் தொழப்படும் அத்தனை, அணி ஆமாத்தூர் மேவிய முத்தினை, அடியேன் உள் முயறலும், பத்திவெள்ளம் பரந்தது; காண்மினே!
|
6
|
பித்தேறியவனும் , பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனும் , அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும் , அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று ; காண்பீர்களாக . | |
நீற்றின் ஆர் திரு மேனியன்; நேரிழை கூற்றினான்; குழல் கோலச் சடையில் ஓர் ஆற்றினான்; அணி ஆமாத்தூர் மேவிய ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே.
|
7
|
எம்மை ஆளுடைய இறைவன் , திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும் , நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும் , அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன் . | |
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர் சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர் கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!
|
8
|
பண்ணினை உடைய பாடல்களைப் பாடித் தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும் , ஆமாத்தூரில் பொருந்தியவனும் , தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணினுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக !. | |
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா மிண்டரோடு எனை வேறுபடுத்து உயக்- கொண்ட நாதன், குளிர் புனல் வீரட்டத்து அண்டனார், இடம் ஆமாத்தூர்; காண்மினே!
|
9
|
குண்டர்களும் , மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும் . காண்பீர்களாக ! | |
வானம் சாடும் மதி அரவத்தொடு தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை, தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!
|
10
|
ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர் . தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான் . | |
| Go to top |
விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி அடர ஓர்விரல் ஊன்றிய, ஆமாத்தூர் இடம் அதாக் கொண்ட, ஈசனுக்கு என் உளம் இடம் அதாக் கொண்டு இன்புற்று இருப்பனே.
|
11
|
அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றியவனும் , ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னுள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன் . | |