சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.064   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கோழம்பம் - திருக்குறுந்தொகை அருள்தரு சவுந்தரியம்மை உடனுறை அருள்மிகு கோகுலேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=-zwgm9vj5cU   Add audio link Add Audio

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்;
கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்-
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.

1
வேழம்பம் என்னும் விளையாட்டைப் புரிகின்ற ஐந்து புலன்களாகியவர்கள் விரும்பினவற்றையே தாமும் விரும்பிச் சென்று உலகியல் ஆழங்காற்பட்டுப் பல அறிவற்றவர்கள் வீழ்வர்; கோழம்பத்தில் உறைகின்ற கூத்தன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் பக்தர்களே மிகவும் திறம் உடையவர்கள்.

கயிலை நல்மலை ஆளும் கபாலியை,
மயில் இயல் மலைமாதின் மணாளனை,
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்
உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே.

2
திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.

வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்-
தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்-
தாழம் பூமணம் நாறிய தாழ் பொழில்
கோழம்பா! என, கூடிய செல்வமே.

3
வணங்கும் தன்மையோடு கூடியவராகித் தம் வாயினால், தாழம்பூக்களின் மணம் வீசுகின்ற பொழிலை உடைய \"கோழம்பத்தலத்து இறைவா!\" என்று கூறியதனால் கூடும் செல்வமே, வாழும் தன்மையராகிப் பெற்ற உயர்ந்த செல்வம் ஆகும்.

பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்;
கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!

4
வெண்கோடலும் செங்கோடலும் ஆகிய மலர்கள் பூத்து விளங்கும் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனாகிய இறைவனுக்கு இப்பெண் அன்றே அன்புபட்டாள் ஆதலின், பண்ணொடு கூடிய பாடல் ஆக்குவாள்; மணற்குன்றில் மணலினைக் கொண்டு கூடல் இழைப்பாள்.

தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர்
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்;
நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.

5
மாந்தளிரின் வண்ணம் கொண்ட மேனியளாகிய உமாதேவி மிக அஞ்சுமாறு ஒப்பற்ற பிளிறிவரும் யானையின் பச்சைத்தோலைப் போர்த்தவனாகிய, குளிர்ச்சிகொண்ட நீண்ட வயல்களையுடைய கோழம்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செறிவினைக்கொண்ட கங்கையினைச் சடைமேலும் நயந்தது வியப்புக்குரியதே.
Go to top

நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்-
வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில்
கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட
ஆதி, பாதம் அடைய வல்லார்களே.

6
வேதங்களை ஓதிய நாவை உடையவரும், இடபக்கொடியினரும், மலைமங்கையாகிய உமாதேவியோடும் கோழம்பத்திற் கோயில்கொண்ட ஆதியுமாகிய பெருமானின் பாதங்களை அடையவல்லவர்கள் தாம் நமக்கும் பிறர்க்கும் தலைவர் என்று மதிக்கத்தக்கவர்கள்.

முன்னை நான் செய்த பாவம் முதல் அற,
பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது-
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.

7
அன்னம் பொருந்திய வயலை உடைய கோழம்பத்துள் அமர்ந்திருக்கின்ற பின்னிய நீண்டசடையானைப் பிதற்றியே, முன்பு நான் செய்த பாவம் முதல் அறும்படிப் பின்பு நான் பெரிதும் அருள்பெற்றது.

ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்-
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.

8
ஏழையேனாகிய அடியேன் கூழைமீன்கள் பாய்கின்ற வயல்களை உடைய கோழம்பத்தான் அடியை மறந்து அவர்பால் இருந்தது, பெண்களிடம் நின்று இரண்டு கைகளாலும் அவர்கள் இடும் உணவைக்கொண்டு உண்ணும் கோழைகளோடு கூடிய குற்றமாம்.

அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி
பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை;
குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து
உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?

9
பாம்பாகிய படுக்கையில் பயிலும் திருமாலும், பிரமனும் வந்து அடிபரவப்பெறுவானும், பரம்பொருளாகிய உயர்ந்தசோதியும், பரமாசாரியனும் ஆகிய குரவமரங்கள் செறிந்த கோழம்பத்தின்கண் அறிவு வடிவானவனை நீங்குபவர்க்கு உணர்தல் இயலுமோ?

சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய,
அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள் உடையார்களே.

10
போரெதிர்ந்துவந்த சூரபன்மனைக் கொன்ற வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், நல்ல கோழம்பம் மேவிய தேவர்தலைவனும் ஆகிய பெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமரலோகத்தை ஆளும் உரிமையுடையவராவர்.
Go to top

துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப்
பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே.

11
கொட்ட நறுமணம் வீசுகின்ற கோழம்பத்து இறைவன் என்று விருப்பத்திற்குரிய கீதம் இசைத்த அரக்கன் துட்டனாகித் திருக்கயிலையை எடுக்கலுற்று, அம்மலையின் கீழ்ப்பட்டு விழுந்து படர்ந்து பின் உய்ந்தான்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோழம்பம்
2.013   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது
Tune - இந்தளம்   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
5.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000