பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார், பாவம் ஆயின பாறிப் பறையவே, தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.
|
1
|
பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர் , தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர் . | |
என்னன், என் மனை, எந்தை, என் ஆர் உயிர், தன்னன், தன் அடியேன் தனம் ஆகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்; இன்னன் என்று அறிவு ஒண்ணான், இயற்கையே!
|
2
|
பூவனூர் மேவிய இறைவன் என்னை உடையவன் ; என் மனையாளாகவும் உள்ளவன் ; என் தந்தை ; என் உயிர் ; தனக்குத்தானே உவமையானவன் ; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன் ; தன் இயல்பினால் இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன் . | |
குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்! மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்; புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் கற்று வாழ்த்தும், கழிவதன் முன்னமே!
|
3
|
குற்றங்களே மிகப் பெருகிக் குணம்பல கூடாதவர்களே ! புற்றிற்பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர் இறைவன் திருநாமத்தை நீர் மடிவதன் முன்பே கற்று வாழ்த்துவீராக ; அங்ஙனம் வாழ்த்தினால் நீர் செய்த வினைகளை மாய்க்கலாம் . | |
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான், தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான், மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை- பூவனூர் புகுவார் வினை போகுமே.
|
4
|
பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும் , தூய வெண்ணீறு செறிந்த செம்மேனியனும் , விரிகின்ற பூணூல் மேவியவனும் ஆகிய பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரைக் கண்ணதுமாகிய பூவனூரின்கண் புக்குத்தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும் . | |
புல்லம் ஊர்தி ஊர்-பூவனூர், பூம் புனல் நல்லம், மூர்த்தி நல்லூர், நனிபள்ளி ஊர், தில்லை ஊர், திரு ஆரூர், தீக்காலிநல்- வல்லம் ஊர் என, வல்வினை மாயுமே.
|
5
|
புல்லமும் , ஊர்தியூரும் , பூவனூரும் , புனல் வளம் உடைய நல்லமும் , ஊர்திநல்லூரும் , நனிபள்ளியூரும் , தில்லையூரும் , திருவாரூரும் , சீர்காழியும் , நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும் . | |
| Go to top |
அனுசயப்பட்டு அது இது என்னாதே, கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி, புனிதனை-பூவனூரனை- போற்றுவார் மனிதரில்- தலைஆன மனிதரே.
|
6
|
கனிந்த மனத்தொடு கண்கள் நீர் நிறைந்து , ஐயப்பட்டபொருளன்று இது ; தெளிந்தது என்று கருதிப் பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே எல்லா மனிதர்களிலும் தலையான மனிதராவர் . | |
ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்; வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர் பாதி ஆனான்; பரந்த பெரும் படைப் பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.
|
7
|
அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும் , தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும் , வேதம் ஓதும் நாவினனும் , மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும் , பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன் . | |
பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில் நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம், கோவலூர், குடவாயில், கொடுமுடி, மூவலூரும்- முக்கண்ணன் ஊர்; காண்மினே!
|
8
|
பூவனூரும் , குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும் , நள்ளாறும் , நன்னிலமும் , கோவலூரும் , குடவாயிலும் , கொடுமுடியும் , மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள் ; காண்பீர்களாக . மூவலூர் வைப்புத்தலம் . | |
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்- பாவகாரிகள்-சொல்வலைப்பட்டு, நான், தேவதேவன் திருநெறி ஆகிய பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே!
|
9
|
விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும் ; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும் . | |
நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன், வாரணன், குமரன், வணங்கும் கழல் பூரணன்திருப் பூவனூர் மேவிய காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே.
|
10
|
திருமாலும் , பிரமனும் , இந்திரனும் , விநாயகரும் , முருகனும் வணங்கும் கழலை உடைய நிறைவானவனும் , திருப்பூவனூரில் பொருந்திய உலககாரணனுமாகிய பெருமானே , என்னை ஆளுடைய காளைபோல்வான் . | |
| Go to top |
மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும், பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!
|
11
|
மேகத்தையொத்த நிறத்தை உடைய இராவணன் திருக்கயிலையைப் புகுந்தெடுத்தலும் , பூவனூர் இறைவன் திரு வடியில் மற்ற விரல்களினும் சிறப்புமிக்குள்ள பெருவிரலைச் சற்று ஊன்றுதலும் தன் உறுப்பெல்லாம் பிளந்து வருந்தியபிறகு பாடி அருள்பெற்று உய்ந்தான் . | |