சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.065   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை அருள்தரு கற்பகவல்லியம்மை உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=HCo_sta0KMM   Add audio link Add Audio

பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,
பாவம் ஆயின பாறிப் பறையவே,
தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.

1
பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர் , தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர் .

என்னன், என் மனை, எந்தை, என் ஆர் உயிர்,
தன்னன், தன் அடியேன் தனம் ஆகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்;
இன்னன் என்று அறிவு ஒண்ணான், இயற்கையே!

2
பூவனூர் மேவிய இறைவன் என்னை உடையவன் ; என் மனையாளாகவும் உள்ளவன் ; என் தந்தை ; என் உயிர் ; தனக்குத்தானே உவமையானவன் ; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன் ; தன் இயல்பினால் இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன் .

குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்!
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்;
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
கற்று வாழ்த்தும், கழிவதன் முன்னமே!

3
குற்றங்களே மிகப் பெருகிக் குணம்பல கூடாதவர்களே ! புற்றிற்பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர் இறைவன் திருநாமத்தை நீர் மடிவதன் முன்பே கற்று வாழ்த்துவீராக ; அங்ஙனம் வாழ்த்தினால் நீர் செய்த வினைகளை மாய்க்கலாம் .

ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்,
தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான்,
மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை-
பூவனூர் புகுவார் வினை போகுமே.

4
பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும் , தூய வெண்ணீறு செறிந்த செம்மேனியனும் , விரிகின்ற பூணூல் மேவியவனும் ஆகிய பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரைக் கண்ணதுமாகிய பூவனூரின்கண் புக்குத்தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும் .

புல்லம் ஊர்தி ஊர்-பூவனூர், பூம் புனல்
நல்லம், மூர்த்தி நல்லூர், நனிபள்ளி ஊர்,
தில்லை ஊர், திரு ஆரூர், தீக்காலிநல்-
வல்லம் ஊர் என, வல்வினை மாயுமே.

5
புல்லமும் , ஊர்தியூரும் , பூவனூரும் , புனல் வளம் உடைய நல்லமும் , ஊர்திநல்லூரும் , நனிபள்ளியூரும் , தில்லையூரும் , திருவாரூரும் , சீர்காழியும் , நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும் .
Go to top

அனுசயப்பட்டு அது இது என்னாதே,
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி,
புனிதனை-பூவனூரனை- போற்றுவார்
மனிதரில்- தலைஆன மனிதரே.

6
கனிந்த மனத்தொடு கண்கள் நீர் நிறைந்து , ஐயப்பட்டபொருளன்று இது ; தெளிந்தது என்று கருதிப் பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே எல்லா மனிதர்களிலும் தலையான மனிதராவர் .

ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்;
வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர்
பாதி ஆனான்; பரந்த பெரும் படைப்
பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.

7
அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும் , தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும் , வேதம் ஓதும் நாவினனும் , மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும் , பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன் .

பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில்
நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம்,
கோவலூர், குடவாயில், கொடுமுடி,
மூவலூரும்- முக்கண்ணன் ஊர்; காண்மினே!

8
பூவனூரும் , குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும் , நள்ளாறும் , நன்னிலமும் , கோவலூரும் , குடவாயிலும் , கொடுமுடியும் , மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள் ; காண்பீர்களாக . மூவலூர் வைப்புத்தலம் .

ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்-
பாவகாரிகள்-சொல்வலைப்பட்டு, நான்,
தேவதேவன் திருநெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே!

9
விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும் ; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும் .

நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன்,
வாரணன், குமரன், வணங்கும் கழல்
பூரணன்திருப் பூவனூர் மேவிய
காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே.

10
திருமாலும் , பிரமனும் , இந்திரனும் , விநாயகரும் , முருகனும் வணங்கும் கழலை உடைய நிறைவானவனும் , திருப்பூவனூரில் பொருந்திய உலககாரணனுமாகிய பெருமானே , என்னை ஆளுடைய காளைபோல்வான் .
Go to top

மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை
புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்,
பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!

11
மேகத்தையொத்த நிறத்தை உடைய இராவணன் திருக்கயிலையைப் புகுந்தெடுத்தலும் , பூவனூர் இறைவன் திரு வடியில் மற்ற விரல்களினும் சிறப்புமிக்குள்ள பெருவிரலைச் சற்று ஊன்றுதலும் தன் உறுப்பெல்லாம் பிளந்து வருந்தியபிறகு பாடி அருள்பெற்று உய்ந்தான் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பூவனூர்
5.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பூவனூர் புஷ்பவனநாதர் கற்பகவல்லியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000