வெள் எருக்கு அரவம் விரவும் சடைப் புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல் உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர், நள் இருப்பர், நரகக்குழியிலே.
|
1
|
வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர். | |
மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க் கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே, போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர், சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே!
|
2
|
விடைசொல்லும் தெளிவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக. | |
அருமறையனை, ஆணொடு பெண்ணனை, கருவிடம் மிக உண்ட எம் கண்டனை, புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர், உருகி நைபவர் உள்ளம் குளிருமே.
|
3
|
அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும். | |
தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை, பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.
|
4
|
தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில்பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை. | |
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர் பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர் மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.
|
5
|
சிவந்தகண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்குவேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும். | |
| Go to top |
குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால் செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை, புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
|
6
|
குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்குவேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும். | |
கையினோடு கால் கட்டி, உமர் எலாம், ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர், பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர், மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!
|
7
|
கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன்முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக. | |
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று, மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே; புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!
|
8
|
உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று \"சிவன்\" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக. | |
அரக்கனார் தலைபத்தும் அழிதர நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே.
|
9
|
இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும். | |