சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.097   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=HlK5Udb1OqY  https://www.youtube.com/watch?v=Sg6F6-2IZNM  https://www.youtube.com/watch?v=xuThl5Vc2Mg   Add audio link Add Audio

சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி
முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி
வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.

1
சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும் , சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும் , அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர் .

அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர்
உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம்,
வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.

2
அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும் ; அச்சுடரைக் கண்டு இங்குஆர் அறியவல்லவர்கள் ? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர் .

ஆதி ஆயவன், ஆரும் இலாதவன்,
போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன்
பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்-
சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.

3
தன்னுடலிற்பாதி பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் , அனைத்துக்கும் ஆதி ஆகியவன் ; தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் ; மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்முடியை உடைய புண்ணியன் .

இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர்
கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர்,
அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.

4
ஏற்றினை உகந்து ஏறிப் பட்டிதோறும் மக்கள் இட்ட சோற்றினைப் பலிதேர்வதாகிய ஒரு துன்பவாழ்க்கை உடையவனாகிலும் தேவர்கள் ` அட்டமூர்த்தியே ! அருள்வாயாக ` என்று அடைவர் .

ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-
நீறு பூசி நிலாமதி சூடிலும்,
வீறு இலாதன செய்யினும், விண்ணவர்,
ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.

5
முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும் , தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும் , தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர் .
Go to top

உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப்
பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம்
பிச்சையே புகும் ஆகிலும், வானவர்,
அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.

6
உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும் , தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும் , தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர் .

ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர்
பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா!
கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.

7
தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ! ஒன்றாக உரைக்கும் பேரில்லாதவனே ! பிறைசூடிய பிஞ்ஞகனே ! கருமை பொருந்திய திருக்கழுத்தினனே ! உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவையே என்றும் சேரும் .

எந்தையே! எம்பிரானே! என உள்கிச்
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்;
வெந்தநீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார், அடைந்தார்களே.

8
எந்தையே ! எம்பெருமானே ! என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் ; வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தன்மை உடையார் .

ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில்
ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்;
தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே
வான நாடர் வணங்குவர், வைகலே.

9
பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போர்த்துத் தீயுடன் ஆடினாலும் , தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர் .

ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய
மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.

10
படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் , தலைவன் ; அந்தணன் ; ( அழகும் குளிர்ச்சியும் உடையவன் ) ஆண் பெண் வடிவமுடைய திருமேனியினன் ; மேன்மை மிகுந்த வெண் திருநீறு பூசிய கருமைகொண்ட திருக்கழுத்தினன் ; மான்குட்டி உடைய கையினன் .
Go to top

ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்;
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்;
அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே.

11
இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும் , திருமாலும் பிரமனுமாகிய இருவராகி நின்றவர் அறிய இயலாதவனும் , அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந்த கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும் .

ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்,
நாதனே, அருளாய்! என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

12
கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் , ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும் , ` தலைவனே ! அருள்வாய் ` என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும் .

ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்;
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ!
மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு
பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.

13
அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக ; மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள் .

அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல்
புக்கு, பல்பலி தேரும் புராணனை-
நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!-
தொக்க வானவரால்-தொழுவானையே.

14
அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள்தோறும் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும் , தொகுத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக .

கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன்
திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்;
இங்கணார், எழில் வானம் வணங்கவே;
அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!

15
அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் ; இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் ; அதுவே அவர் தன்மை .
Go to top

ஙகர வெல் கொடியானொடு,-நன்நெஞ்சே!-
நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில்,
மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.

16
நல்ல நெஞ்சே ! வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக்கொண்டு உய்யப்போதலுற்றால் , மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும் .

சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்,
மரணம் எய்தியபின், நவை நீக்குவான்
அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?

17
புகலடையத்தக்கவர் பிறர் யாவர் ? செயலற்று உயிர் இறக்கும்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன் ? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ ?

ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம்
சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்;
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.

18
நரகர்க்கெல்லாம் ஞமனாகியும் , நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும் , மான்குட்டி உடைய கையினனும் , விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனும் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும் .

இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்;
அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப்
பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை,
கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!

19
இடபத்தின்மீது ஏறியும் , இல்லங்கள்தோறும் பலி ஏற்பவரும் , சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும் , ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக .

இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும்,
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
அணைந்த, அம் சடையான் அவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.

20
கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் தூளினைச் சொரிந்திடும் இயல்பினதும் , பொருந்திய வாள்போன்ற பாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர் .
Go to top

தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும்
கருமம் தான் கருமான்மறிக் கையினான்;
அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!-
சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!

21
தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினை யாளர்களே ! தானே தருமமாகவும் , தானே தவமாகவும் , தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது , அரிய மருந்து போன்ற ( அமிர்தம் ) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைச் சேர்வீராக .

நமச்சிவாய என்பார் உளரேல், அவர்-
தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்,
அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும்,
இமைத்து நிற்பது சால அரியதே.

22
நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர் தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும் .

பல்பல் காலம் பயிற்றி, பரமனைச்
சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினை
வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப்
புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.

23
பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக ! உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக்கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும் .

மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்;
கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால்
பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம்
பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!

24
கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும் , மான்குட்டியை உடைய கையினரும் , கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் ; அவ்வாறு புரியாது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர் .

இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர்,
நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்;
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.

25
வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன் , இயக்கர் , கின்னரர் , இந்திரன் , தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும் , பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான் .
Go to top

அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு,
குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல்
கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?

26
பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும் , குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ ?

அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு, தாவினான்,
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.

27
இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும் , வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல் ஊட்டியவனும் , எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திருமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டற்கரியவனுமாவான் .

இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார்,
வளமை போய், பிணியோடு வருதலால்,
உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான்
கிளமையே கிளை ஆக நினைப்பனே.

28
இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ள மெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினைப்பேன் .

தன்னில்-தன்னை அறியும் தலைமகன்
தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்;
தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில்,
தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.

29
தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான் ; தன்னில் தன்னை அறியும் அறிவிலனாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன் .

இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும்
வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.

30
இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை
5.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
Tune - திருக்குறுந்தொகை   (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000