சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.017   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=tnH6jbo3c98   Add audio link Add Audio

ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்;
படை உடையர்; அம் பொன்தோள் மேல்
நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம்
பலி கொள்வர்; மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள்
தால வேடத்தர்; கொள்கை சொல்லின்,
ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

1
இடைமருதூரினை விரும்பித் திருத்தலமாகக் கொண்ட ஈசனார் சடையில் கங்கையை அணிந்து , உள்ளங்கையில் தீயினை ஏற்றவர் . அழகர் . படைக்கலங்களை ஏந்திய அழகிய பொலிவு உடைய தோள் மீது , நீறு பூசிக் காளையை இவர்ந்து நாளும் பிச்சை ஏற்பவர் . தம்மைச் சுற்றியுள்ள பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப் பெறுபவர் . கோவணம் ஒன்றே உடையவர் . கையிலே உண்கலத்தை ஏந்திய வேடத்தவர் . இவ்வுலகிற்குத் தோற்றம் நிலை அழிவு ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர் .

மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான்
இடம் உடையர்; மாதராளைப்
பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்;
பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்;
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்;
சரிதை பல உடையர்; தன்மை சொல்லின்,
எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது
மேவி இடம்கொண்டாரே.

2
இடைமருது மேவிய இடங்கொண்ட பெருமானார் வானத்தில் இயங்கும் பிறையைச் சடையில் வைத்தவர் . தேவருலகிற்கும் உரியவர் . பார்வதியை இடப்பாகமாக உடையவர் . மான்குட்டியை இடக்கரத்தில் வைத்திருப்பவர் . பால்போன்ற திருநீற்றை அணிந்து , படிக மணிமாலை பூண்டு , அடியார் பாவங்களைப் போக்குபவர் . சங்குகள் அலைகளில் உலவும் சாய்க்காடு என்ற தலத்தை ஆள்பவர் . பல அரிய செயல்களை உடையவர் . எங்கும் பிச்சைக்காகத் திரியும் இயல்பினர் . என் உள்ளத்தை விடுத்து என்றும் நீங்காதிருப்பவர் .

ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு
வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்;
காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்;
கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு;
கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்;
கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்;
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது
மேவி இடம்கொண்டாரே.

3
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஆலமர நிழலிலும் ஆகாயத்திலும் மலை உச்சியிலும் இருப்பவர் . ஒரே உருவில் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் . காலங்களுக்கு அப்பாற் பட்டவர் . நீலகண்டர் . தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர் . பல வேடங்களை உடையவர் . முல்லை நிலத்துக்கு உரிய திருமாலைக் காளைவாகனமாக உடையவர் . கொடிய மழுப்படை ஏந்தியவர் . கோழம்பம் , ஏலக்காய் மணம்கமழும் ஈங்கோய் மலை இவற்றை விரும்பி நீங்காதிருப்பவர் .

தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்;
திரு ஆரூர் என்றும் உள்ளார்;
வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்;
மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்;
நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு
  நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும்
ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

4
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஒளியுடையவர் , தம் அருள் திறங்களைத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் சென்றடையும் செல்வர் . திருவாரூரில் என்றும் இருப்பவர் . பூவிலுள்ள மணம்போல உலகங்கள் எங்கும் பரவியிருப்பவர் . மான் தோலைப் போர்த்தியவர் . யானைத் தோலையும் உடையவர் . எவ்விடத்தும் உருக்காட்டாது மறைந்தே இருக்கும் கள்வர் . அடியார்களுக்கு அன்பர் . தம் அடிகளை அடையாதவர்களுக்குக் கொடியவர் . கட்டங்கப் படையுடையவர் . தம்மை விருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர் . காவிரியாகிய தீர்த்தத்தை உடையவர் .

கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம்
கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்;
தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி
நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள்
  சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம்
இரப்பர்; எமை ஆள்வர்; என் உள்
   நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.

5
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் வஞ்சனை மனத்தை உடைய கள்வர்க்குத் தம்மை மறைத்துக் கொள்பவர் . உள்ளத்தில் வஞ்சனையின்றித் தம்மை விருப்புற்று நினைப் பவருடைய பாவங்களை விரட்டுபவர் . கடல் விடத்தை உண்டவர் . தூய வேதங்களை ஓதுபவர் . அறிவில்லாத அசுரர்களின் மும்மதில் களையும் தீயிட்டுச் சாம்பலாக்கியவர் . நீண்ட சடை முடியர் . விரைந்து செல்லும் காளையை இவர்ந்து எங்கும் பிச்சை யெடுப்பவர் . எங்களை ஆள்பவர் . என் உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பவர் .
Go to top

கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர்
கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த
பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்;
புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்;
அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின்
மந்திரத்தார்; அமரர் போற்ற
இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

6
எல்லோரும் போற்றுமாறு இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் இடபக்கொடியினராய்க் கூத்தாடுபவராய்க் கொன்றை சூடியவராய் , அழகிய நீறு பூசிய மேனியராய்த் திருநீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலை உடுத்தவராய்ச் சீறும் பாம்பினராய்ப் பூணூலை அணிந்தவராய் அடியவர்களுக்கு மிக அணுகிய உறவினராய்க் கருணையுடையவராய் , வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரவடிவினராய்த் தேவர் போற்றுமாறு பிளிறிக்கொண்டு வந்த களிற்றைக்கொன்று அதன் தோலைப் போர்த்தியவராவர் .

பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்;
பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்;
கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று
கை ஏந்தி, இல்லம் தோறும்
பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு
சடைமுடியர்; பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

7
என்றும் உள்ளாராய் இடைமருதுமேவி இடங் கொண்ட எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடப்பாகத்தே பச்சை நிறம் உடையவராய் . மிக இளையராகவும் மிகப் பழையராகவும் காட்சி வழங்கி , அடியார்களை அவர்களுடைய பிழைகளைப் போக்கி ஆட்கொள்பவர் . கோபம் கொள்ளும் பாம்பினைக் கச்சையாகப் பூண்ட தோள்களை உடையவர் . கையில் மண்டையோடாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்பவர் . ஆயினும் உண்மை நிலையினில் மிகவும் பெரியவர் . விளங்குகின்ற சடைமுடியை உடையவர் . தம்மை விரும்பும் அடியார் களுடைய விருப்பத்தை மிகவும் அறிந்தவர் .

கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம்
மன்னினார்; பன்னும் இன்சொல்
பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி
பயிலும் திரு உருவம் பாகம் மேயார்;
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம்
மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட
ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

8
இடைமருது மேவி இடங்கொண்டு எங்கும் தாமேயாகப் பரவியிருக்கின்ற பெருமானார் , சோலை போலப் பரவிய சடையினராய் நாகை குடந்தைக் காரோணங்களிலும் , கயிலாயத்திலும் , தங்குபவராய்ப் பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட புன்கூரில் வாழ்பவராய் , இனிய சொற்களாலாகிய பாடல்களின் பொருளை ஆளுதல் உடையவராய் , வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் , முப்புரங்களையும் தீக்கொளுவுமாறு கொண்ட அம்பொடு பொருந்திய மலையாகிய வில்லை உடையவராய் விளங்குகின்றார் .

புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில்  ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும்    பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில்
எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ்  இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால்
இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும்  இடைமருது மேவி இடம் கொண்டாரே.

9
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் கூத்தில் விருப்பம் உடையவர் . பூதங்களின் தலைவர் . தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப் போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுந்து தங்குபவர் . அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய்த் தாம் விரும்பும் சுடுகாட்டில் எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர் . எழுவகையில் அமைந்த இசையால் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்கள் உள்ள இடங்களிலெல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவராவர் .

விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; 
விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்;
மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்;  மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்;
சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று 
செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால்
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், 
வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.

10
இடைமருது மேவி இடம் கொண்ட பெருமானார் ஒளிவீசும் பெரிய மழுப்படையை உடையவர் . கடல் நஞ்சுண்டவர் . அழகர் . நீர்வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர் . தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திருநீறு பூசியவர் . மழபாடியிலும் இரும்பை , அம்பர் , உஞ்சைனி என்ற மாகாளங்களிலும் உறைபவர் . பெருமை விளங்கும் வலிய அரக்கர்கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற போது சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால் நசுக்கிப் பின் அவன் பக்கல் இரக்கம் கொண்டு அவனுக்குப்பல வெற்றிகளையும் வழங்கியவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிடைமருதூர்
1.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓடே கலன்; உண்பதும் ஊர்
Tune - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு ஓர் காதினன்; பாடு
Tune - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நடை மரு திரிபுரம் எரியுண
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
Tune - காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
4.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு உடைச் சுடலை நீற்றார்;
Tune - திருநேரிசை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப்படை உடையார் தாமே போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
7.060   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கழுதை குங்குமம் தான் சுமந்து
Tune - தக்கேசி   (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
9.017   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
Tune -   (திருவிடைமருதூர் )
11.028   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவிடைமருதூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000