நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை; கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை; சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு, பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
1
|
கங்கையைச் சடையில் இருத்தி, அவனை நினையாத என் மனத்தை அவனை நினைக்கச் செய்து, அரும் பேருண்மைகளை எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, என்னை அடிமையாகக் கொண்டு, கொடிய சூலை நோயைத் தீர்த்து எனக்குக் காணாதன எல்லாம் காட்டிய தூயோனாகிய புண்ணியனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன். | |
குற்றாலம் கோகரணம் மேவினானை; கொடுங் கைக் கருங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை; உற்று ஆலம்-நஞ்சு உண்டு ஒடுக்கினானை; உணரா என் நெஞ்சை உணர்வித்தானை; பற்று ஆலின்கீழ் அங்கு இருந்தான் தன்னை; பண் ஆர்ந்த வீணை பயின்றான் தன்னை; புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை; புண்ணியனை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
2
|
குற்றாலம் கோகரணம் இவற்றை விரும்பி உறைந்து கொடிய செயலை உடைய கடியவனாகிய கூற்றுவனை ஒறுத்து, ஆலகால விடத்தை உண்டு கழுத்தில் இருத்தி, உணராத என் நெஞ்சத்தில் அரும் பேருண்மைகளை உணர்வித்து, கல்லால மரத்தின் கீழ் அதனைச் சார்பாகக் கொண்டிருந்து, பண் நிறைந்த வீணையை வாசித்து, புற்றிலிருக்கும் படம் எடுத்தாடும் பாம்பினை இறுக அணிந்த தூயோனாகிய புண்ணியனை நான் பூந்துருத்தியில் கண்டேன். | |
எனக்கு என்றும் இனியானை, எம்மான் தன்னை, எழில் ஆரும் ஏகம்பம் மேயான் தன்னை, மனக்கு என்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில் நில்லானை, நின்றியூர் மேயான் தன்னை, தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை, சங்கவார் குழையான் தன்னை, புனக் கொன்றைத்தார் அணிந்த புனிதன் தன்னை, பொய் இலியை பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
3
|
ஏகம்பம் நின்றியூர் இவற்றில் தங்குபவனாய், எனக்கு என்றும் இனிய எம் தலைவனாய், மனத்தில் என்றும் இருப்பவனாய், வஞ்சகர் நெஞ்சில் நில்லாதவனாய், என்னைத் தனக்கு என்றும் ஆளாகக் கொண்டு நன்மை செய்கின்றவனாய், சங்கினால் ஆகிய நீண்ட காதணியை உடையவனாய் மேட்டு நிலத்தில் வளரும் கொன்றைப் பூமாலை அணிந்த தூயோனாகிய, பாசம் இல்லாதவனை, யான் பூந்துருத்தியில் கண்டேன். | |
வெறி ஆர் மலர்க்கொன்றை சூடினானை, வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை, அறியாது அடியேன் அகப்பட்டேனை, அல்லல் கடல் நின்றும் ஏற வாங்கி நெறிதான் இது என்று காட்டினானை, நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான் தன்னை, பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.
|
4
|
மணம் கமழும் கொன்றைப் பூச் சூடி, ஐராவதம் வழிபட்ட வெண்காட்டில் உறைவானாய், அறியாத புறச்சமயத்தில் அகப்பட்ட என்னை அத்துயரக்கடலில் மூழ்காதபடி தூக்கி எடுத்து, இது தான் நேரிய வழி என்று காட்டி, நாடோறும் என்னை வருத்தும் பிணிகளைத் தீர்த்து, புள்ளிகளை உடைய ஆடும்பாம்பினை இறுகக் கட்டிய தூயோனாகிய பாசம் அற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன். | |
மிக்கானை, வெண்நீறு சண்ணித்தானை, விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி நக்கானை, நால் மறைகள் பாடினானை, நல்லார்கள் பேணிப் பரவ நின்ற தக்கானை, தண் தாமரைமேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம் புக்கானை, புண்ணியனை, புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
5
|
எல்லாரினும் மேம்பட்டவனாய், வெண்ணீறு பூசி, பகைவரின் மும்மதில்களையும் அழித்து, அவற்றின் அழிவுகண்டு சிரித்து, நான்கு வேதங்களையும் ஓதித் தக்கோர்களால் விரும்பி முன்னின்று துதிக்கப்படுபவனாய், பிரமன் மண்டை ஓட்டைச் சுமந்து ஒரு கணநேரத்தில் உலகமெல்லாம் சுற்றித் திரியும் புண்ணியனாய்த் தூயனாய்ப் பாசம் அற்றவனாயுள்ள எம்பெருமானைப் பூந்துருத்தியில் யான் கண்டேன். | |
| Go to top |
ஆர்த்தானை, வாசுகியை, அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை; அழகு ஆய பொன் ஆர் மேனிப் பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானை; பூங்கணையான் உடலம் வேவப் பார்த்தானை; பரிந்தானை; பனி நீர்க்கங்கை படர் சடைமேல் பயின்றானை; பதைப்ப யானை போர்த்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
6
|
வாசுகி என்ற பாம்பினையே வில்லுக்கு நாணாகக் கட்டியும், இடையிலே கச்சாக அணிந்தும் இருப்பவனாய், பொன் போன்ற உடம்பும் தாமரையாகிய இருப்பிடமும் உடைய பிரமனுடைய தலை ஒன்றனை அவன் உடலில் பொருந்தாதபடி நீக்கியவனாய், மன்மதன் உடல் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய்ப் பின் அவனிடம் அருள் கூர்ந்தவனாய், கங்கையைச் சடை மீது தரித்தவனாய், யானை நடுங்க அதன் தோலை உரித்துப் போர்த்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன். | |
எரித்தானை, எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பு அளவில் பொடி ஆக; எழில் ஆர் கையால் உரித்தானை, மதகரியை உற்றுப் பற்றி; உமை அதனைக் கண்டு அஞ்சி நடுங்கக் கண்டு சிரித்தானை; சீர் ஆர்ந்த பூதம் சூழ, திருச்சடைமேல் -திங்களும் பாம்பும் நீரும் புரித்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
7
|
பகைவர் முப்புரங்களையும் இமைகொட்டும் நேரத்திற்குள் பொடியாகுமாறு எரித்து, மத யானையைப் பற்றித் தன் அழகிய கைகளால் தோலை உரித்து, உமாதேவி அது கண்டு அஞ்ச, அவள் அச்சத்தைப் பார்த்து, சிரித்துச் சடையில் பிறையும் பாம்பும் கங்கையும் சூடிப் பூதகணங்கள் சூழ இருக்கும் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் இல்லாதவனான பெருமானை யான் பூந் துருத்தியில் கண்டேன். | |
வைத்தானை, வானோர் உலகம் எல்லாம், வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் வித்தானை; வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னை; விண்ணவர் தம் பெருமானை; வினைகள் போக உய்த்தானை; ஒலி கங்கை சடைமேல்-தாங்கி ஒளித்தானை; ஒருபாகத்து உமையோடு ஆங்கே பொய்த்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
8
|
வானோர் உலகமெல்லாம் படைத்தவனாய், அத்தேவர்கள் வந்து வணங்கி மலர்கொண்டு நின்று துதிக்கும் உலக காரணனாய், அடியவர்கள் விரும்பியதை அளிப்பவனாய், இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கியவனாய், கங்கையைச் சடையில் மறைத்துப் பாதி உருவாய் உள்ள பார்வதிக்குப் புலப்படாதவாறு செய்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாயுள்ள பாசமற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன். | |
ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்; அந் நாள் அறியாத தக்கன் வேள்வி மீண்டானை, விண்ணவர்களோடும் கூடி; விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர நீண்டானை; நெருப்பு உருவம் ஆனான் தன்னை; நிலை இலார் மும்மதிலும் வேவ, வில்லைப் பூண்டானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
9
|
தேவருலகமெல்லாம் ஆண்டவனாய், ஒரு காலத்தில் தக்கன் வேள்வியில் தொடர்பு கொண்டு தன்னால் தண்டிக்கப்பட்ட தேவர்களோடும் திரும்பியவனாய், தாமரையில் உள்ள பிரமனும் திருமாலும் தேடுமாறு தீப்பிழம்பாக நின்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீப்பற்றி அழியுமாறு வில்லைப் பூண்டவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய் உள்ள பாசம் அற்றவனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன். | |
மறுத்தானை, மலை கோத்து அங்கு எடுத்தான் தன்னை, மணி முடியோடு இருபது தோள் நெரியக் காலால் இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை அறுத்தானை; அமரர்களுக்கு அமுது ஈந்தானை; யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு பொறுத்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
|
10
|
நந்தி பெருமான் அறிவுரையை அலட்சியம் செய்து தன் கைகளைக் கோத்துக் கயிலை மலையை எடுத்த இராவணனைப் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு காலால் அழுத்தியவனாய்ப்பின் அவன் பாடிய ஏழுநரம்பின் ஓசையைக் கேட்டு அவனுக்கு அருள் செய்தவனாய், எட்டுக் கண்களை உடைய பிரமனின் மேல்தலையாகிய ஐந்தாம் தலையை அறுத்தவனாய்த் தேவர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், எவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தியவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன். | |
| Go to top |