சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.088
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாலினை மால் உற நின்றான், பண் - திருவிருத்தம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=pT_B4tkck3g |
5.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி கொள் செல்வ விழாக் பண் - திருக்குறுந்தொகை (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=MlvS1d5hqqg |
6.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; பண் - திருத்தாண்டகம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=VY4BBCiv1J0 |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.088  
மாலினை மால் உற நின்றான்,
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருப்பூந்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு அழகாலமர்ந்தநாயகி உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி )
மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல் போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும் ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே. | [1] |
மறி உடையான், மழுவாளினன், மாமலை மங்கை ஓர்பால் குறி உடையான், குணம் ஒன்று அறிந்தார் இல்லை; கூறில், அவன் பொறி உடை வாள் அரவத்தவன்; பூந்துருத்தி(ய்) உறையும் அறிவு உடை ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே. | [2] |
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால் அறுத்தனை, ஆல் அதன் கீழனை, ஆல்விடம் உண்டு அதனைப் பொறுத்தனை, பூதப்படையனை, பூந்துருத்தி(ய்) உறையும் நிறுத்தனை, நீலமிடற்றனை-யான் அடி போற்றுவதே. | [3] |
உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற திருவினை, தேசம் படைத்தனை, சென்று அடைந்தேனுடைய பொரு வினை எல்லாம் துரந்தனை, பூந்துருத்தி(ய்) உறையும் கருவினை, கண் மூன்று உடையனை-யான் அடி போற்றுவதே. | [4] |
தக்கன்தன் வேள்வி தகர்த்தவன்,-சாரம், அது(வ்) அன்று-கோள மிக்கன மும்மதில் வீய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால் புக்கனன், பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி(ய்) உறையும் நக்கனை, நங்கள் பிரான்தனை-நான் அடி போற்றுவதே. | [5] |
அருகு அடை மாலையும் தான் உடையான், அழகால் அமைந்த உரு உடை மங்கையும் தன் ஒரு பால் உலகு ஆயும் நின்றான், பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி(ய்) உறையும் திரு உடைத் தேச மதியனை-யான் அடி போற்றுவதே. | [6] |
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக் கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால் பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும் அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே. | [7] |
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான், என் நிறம்? என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும் எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே. | [8] |
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும் நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே. | [9] |
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும் மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.032  
கொடி கொள் செல்வ விழாக்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்பூந்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு அழகாலமர்ந்தநாயகி உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி )
கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக் கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார், பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர் அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [1] |
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்ப் பார்த்தனோடு படை தொடும் ஆகிலும், பூத்த நீள் பொழில் பூந்துருத்தி(ந்) நகர்த் தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [2] |
மாதினை மதித்தான், ஒருபாகமா; காதலால் கரந்தான், சடைக் கங்கையை; பூதநாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு ஆதி; சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [3] |
மூவனாய், முதல் ஆய், இவ்வுலகு எலாம் காவனாய், கடுங் காலனைக் காய்ந்தவன்; பூவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்த் தேவன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [4] |
செம்பொனே ஒக்கும் மேனியன்; தேசத்தில் உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும், பொன் பொன்னார் செல்வப் பூந்துருத்தி(ந்) நகர் நம்பன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [5] |
வல்லம் பேசி வலிசெய் மூன்று ஊரினைக் கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான் புல்லம் பேசியும்-பூந்துருத்தி(ந்) நகர்ச் செல்வன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [6] |
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும் பொருத்தன் ஆகிலும், பூந்துருத்தி(ந்) நகர்த் திருத்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே! | [7] |
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான், பொருத நீர் வரு பூந்துருத்தி(ந்) நகர்ச் சதுரன், சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [8] |
செதுகு அறா மனத்தார் புறம் கூறினும், கொதுகு அறாக் கண்ணின் நோன்பிகள் கூறினும், பொதுவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு அதிபன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [9] |
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப் பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம் பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப் படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.043  
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்பூந்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு அழகாலமர்ந்தநாயகி உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி )
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை; கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை; சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு, பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே. | [1] |
குற்றாலம் கோகரணம் மேவினானை; கொடுங் கைக் கருங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை; உற்று ஆலம்-நஞ்சு உண்டு ஒடுக்கினானை; உணரா என் நெஞ்சை உணர்வித்தானை; பற்று ஆலின்கீழ் அங்கு இருந்தான் தன்னை; பண் ஆர்ந்த வீணை பயின்றான் தன்னை; புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை; புண்ணியனை; பூந்துருத்திக் கண்டேன், நானே. | [2] |
எனக்கு என்றும் இனியானை, எம்மான் தன்னை, எழில் ஆரும் ஏகம்பம் மேயான் தன்னை, மனக்கு என்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில் நில்லானை, நின்றியூர் மேயான் தன்னை, தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை, சங்கவார் குழையான் தன்னை, புனக் கொன்றைத்தார் அணிந்த புனிதன் தன்னை, பொய் இலியை பூந்துருத்திக் கண்டேன், நானே. | [3] |
வெறி ஆர் மலர்க்கொன்றை சூடினானை, வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை, அறியாது அடியேன் அகப்பட்டேனை, அல்லல் கடல் நின்றும் ஏற வாங்கி நெறிதான் இது என்று காட்டினானை, நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான் தன்னை, பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே. | [4] |
மிக்கானை, வெண்நீறு சண்ணித்தானை, விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி நக்கானை, நால் மறைகள் பாடினானை, நல்லார்கள் பேணிப் பரவ நின்ற தக்கானை, தண் தாமரைமேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம் புக்கானை, புண்ணியனை, புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன், நானே. | [5] |
ஆர்த்தானை, வாசுகியை, அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை; அழகு ஆய பொன் ஆர் மேனிப் பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானை; பூங்கணையான் உடலம் வேவப் பார்த்தானை; பரிந்தானை; பனி நீர்க்கங்கை படர் சடைமேல் பயின்றானை; பதைப்ப யானை போர்த்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே. | [6] |
எரித்தானை, எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பு அளவில் பொடி ஆக; எழில் ஆர் கையால் உரித்தானை, மதகரியை உற்றுப் பற்றி; உமை அதனைக் கண்டு அஞ்சி நடுங்கக் கண்டு சிரித்தானை; சீர் ஆர்ந்த பூதம் சூழ, திருச்சடைமேல் -திங்களும் பாம்பும் நீரும் புரித்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே. | [7] |
வைத்தானை, வானோர் உலகம் எல்லாம், வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் வித்தானை; வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னை; விண்ணவர் தம் பெருமானை; வினைகள் போக உய்த்தானை; ஒலி கங்கை சடைமேல்-தாங்கி ஒளித்தானை; ஒருபாகத்து உமையோடு ஆங்கே பொய்த்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே. | [8] |
ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்; அந் நாள் அறியாத தக்கன் வேள்வி மீண்டானை, விண்ணவர்களோடும் கூடி; விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர நீண்டானை; நெருப்பு உருவம் ஆனான் தன்னை; நிலை இலார் மும்மதிலும் வேவ, வில்லைப் பூண்டானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே. | [9] |
மறுத்தானை, மலை கோத்து அங்கு எடுத்தான் தன்னை, மணி முடியோடு இருபது தோள் நெரியக் காலால் இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை அறுத்தானை; அமரர்களுக்கு அமுது ஈந்தானை; யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு பொறுத்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே. | [10] |