வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்; தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்; ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்; தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
1
|
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும் பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும் , வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும் , ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும் , நன்மையும் தீமையும் ஆனவரும் , அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார் . | |
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்; வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்; அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்; பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
2
|
மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறிகின்ற தெளிந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , விண்ணோர்கள் தொழுதுவேண்ட நஞ்சுண்டவரும் , பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும் , அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும் , அதியரைய மங்கையில் அமர்ந்தவரும் , மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப் பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார் . | |
கான் இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்; வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்; வட கயிலை மலை அது தம் இருக்கை போலும்; ஊன் இரியத் தலை கலனா உடையார் போலும்; உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் தேன் இரிய மீன் பாயும் தெண்நீர்ப் பொய்கைத் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
3
|
மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தெளிந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச் சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும் , காவிரிப்பூம்பட்டினத்து உள்ளவரும் , தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும் , வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும் , தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும் , பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார் . | |
ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்; ஊழி பல கண்டு இருந்தார் போலும்; மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்; கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
4
|
தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , தசை பொருந்தி இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும் , பல ஊழிகளைக் கண்டவரும் , மான் பொருந்திய கரதலம் ஒன்றுடையவரும் , திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும் , காட்டில் ஆடலை விரும்பியவரும் , காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார் . | |
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்; காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்; பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்; ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்; சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
5
|
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப் பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும் , காலனை ஓருதையால் வீழக்கண்டவரும் , நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும் , திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும் , மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும் , ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும் , தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார் . | |
| Go to top |
மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய- மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்; மூவாத மேனி முதல்வர் போலும்; முதுகுன்றமூதூர் உடையார் போலும்; கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை கழலால், அன்று, குமைத்தார் போலும்; தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
6
|
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும் , என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும் , முதுகுன்றமாகிய மூதூரினரும் , முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகிய பிரம விட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார் . | |
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்; இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்; ஏகம்பம் மேவி இருந்தார் போலும்; படி ஒருவர் இல்லாப் படியார் போலும்; பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்; செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
7
|
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும் , காரோணத்தலங்களில் என்றும் இருப்பவரும் , இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும் , ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும் , பாண்டிக்கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார் . | |
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்; வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்; மலையினார் மங்கை மணாளர் போலும்; மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்; தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்; சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
8
|
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , விலையில்லாத மாலையணிந்த மார்பரும் , வெண்ணீற்றை மெய்யிற் பூசிய விகிர்தரும் , ( மற்றையாரின் வேறுபட்டவர் ) மலையரையன் மங்கையின் மணாளரும் , மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும் , தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும் , சோற்றுத்துறை , துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும் , வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார் . | |
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்; நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்; முல்லை முகை நகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்; தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
9
|
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , அடியாருடைய அல்லலை அறுப்பவரும் , தம்மை அடைந்தார்க்கு அமருலக ஆட்சியை அளிப்பவரும் , நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்று காட்சி அளிப்பவரும் , நள்ளாற்றை என்றும் பிரியா தவரும் , முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும் , உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும் , தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார் . | |
உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால் ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச, நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்; பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்; பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்; சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
|
10
|
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே ! எடுத்த வினையை முடிப்பதில் தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும் , உமையாள் அஞ்ச , வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும் , பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும் , பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும் , பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனிய வரும் ஆவார் . | |
| Go to top |