நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
|
1
|
நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின் . | |
அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும்
அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி
உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.
|
2
|
பரந்த பூமிமுழுதும் எமக்கு இடமாகும் . ஊர்கள் தோறும் தம் உணவை அட்டுண்ணும் இல்லறத்தான் அதனைப் பிறர்க்கு இட்டு அல்லது உண்ணாராதலின் எமக்கு உணவுப் பிச்சையிடுதலை அவர்கள் ஒருபோதும் விலக்கார் . அம்பலங்கள் யாம் தங்கும் இடங்க ளாகும் . யாம் தன்னுடன் கிடந்தால் பூமிதேவி எம்மைப் புரட்டி எறியாள் . இது பொய்யன்று , மெய்யே . போர்விடையை ஊர்தியாக உடைய சிவபெருமானார் எம்மைத் தம் அடிமையாக ஏற்றுக் கொண்டார் . அதனால் இனியாம் ஏதும் குறைவில்லேம் ; துன்பமாயின எல்லாம் தீர்ந்தேம் . குற்றமற்றேம் ஆயின் யாம் சிறந்த உடைகளை உடுத்துப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் அரசர் சொல்லும் சொல்லை ஏற்க வேண்டிய கடப்பாடு உடையேம் அல்லேம் . | |
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
மாதேவா! மாதேவா! என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்;
நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக்
கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் வருவார் சொல்லும்
பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.
|
3
|
கச்சணிந்த கொங்கை மாதருடன் சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையில் பொருந்தோம் . மகாதேவா மகாதேவா என்று பலகாலும் அவனை வாழ்த்தி விடியற்காலத்து நீராடப் பெற்றோம் , திருநீறணியும் சைவத் திருக்கோலமே எம்பால் நிலவப் பெற்றோம் . பண்டு கல்லாய்த் திகழ்ந்த மனம் கரிய மேகம் பொழியும் மழை போலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம் . ஆகவே உலகியற் பொருளில் பற்றற்றேமாகிய யாம் பூமி முழுவதையும் ஆண்டு ஆனை ஏறி வரும் அரசர் ஏவும் பணிகளை ஏற்க வேண்டிய கடப்பாட்டினேம் அல்லேம் . | |
உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;
உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே;
செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும்
நன்மை ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;
நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன்
சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்;
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர் நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.
|
4
|
சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர் . கோவணமும் கீளும் யாம் உடுப்பனவாய் உள்ளன . ஆகவே பகைவரும் எம்மை வெகுளார் . தேன் நிறைந்து பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையணிந்த புகழுடைய சிவ பெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை நாவால் சொல்ல வல்லேமாய்ச் சுறவுக்கொடியானாகிய மன்மதனைப் பொடியாக அக்கினி நேத்திரத்தை விழித்த சோதிவடிவினனையே தொடர்வுற்றே மாதலின் , தீமை , நன்மையாய்ச் சிறக்கப் பிறப்பிற் செல்லேம் ஆயினேம் . | |
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலை மாலை அணிந்த
சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.
|
5
|
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய் , இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம் . இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை . யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம் . யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம் . அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின . | |
| Go to top |
மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு
ஆன மூர்த்தியே! என்று முப்பத்து மூவர்-
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே! என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும்,
கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே.
|
6
|
` அயன் , அரி , அரன் என்னும் மூவுருவிற்கும் முதலுருவாயவனே ! அட்டமூர்த்தியே ! முப்பத்து மூவர் தேவர்களும் அவர்களின் மிக்க இருடியரும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் செம்பவளத் திருமேனியுடைய சிவனே ` என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் கடிதாய செயலும் களவும் அற்றோமாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டினேம் அல்லேம் . | |
நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி,
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத்
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர்
பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே.
|
7
|
நிற்பனவும் , நடப்பனவும் , நிலனும் , நீரும் , நெருப்பும் , காற்றும் , நெடுவானும் , புன்மையதும் , பெரியதும் , அரியதும் , அன்புடையார்க்கெளியதும் , அளக்கலாகாத் தற்பரமும் , சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானை அவன் நன்மைகளையும் , பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம் ; அதனால் பிழையற்றோம் . அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்பப் பேயர் பேசுமாறுபோல யாம் பேசுவமோ ? | |
ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை,
இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை,
சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்;
நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே;
வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?.
|
8
|
எவ்வுலகினுக்கும் ஈசனும் , இறைவனும் , தேவர்கள் தலைவனும் , எரிபோன்று மிக்கு ஒளிரும் தேசனும் , செம்மேனியிடத்து வெண்ணீற்றானும் , மலையரையன் பொற்பாவை தன்னைக் காதலிக்க , தானும் அவளைக் காதலிக்கும் நேசனும் ஆகிய சிவபெருமானைத் தினமும் நினையப் பெற்றோம் . அதனால் நின்றுண்ணும் சமணர் என்றும் மறவாதிருக்கும்படி எமக்குச் சொன்ன உறுதிபோலும் சொற்களை எல்லாம் யாம் மறந்தொழிந்தோம் . இந்நிலையில் என்னிடம் வந்த நீர் யார் ? மன்னன் ஆவான் தானும் யாரே ?. | |
சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்;
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்;
உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்;
பாசம் அற வீசும் படியோம், நாமே.
|
9
|
சடையுடையானும் ஒருகாதில் விளங்கும் சங்கக் குழையானும் , சாம்பலைப் பூசிப் பாம்பை அணிந்த மேனியானும் , விடையுடையானும் , புலித்தோலாம் மேலாடையானும் , வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த உடை உடையானும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான் . அதனால் பாசத்தை முழுதும் உதறியெறியும் நிலையினை உடையோம் . ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களையுமுடைய அரசனுடைய ஆணைகேட்கும் தொழில் உடையோம் அல்லோம் . | |
நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்;
நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
ஆவா! என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்;
தென் திசைக்கோன் தானே வந்து,
கோ ஆடி, குற்றேவல் செய்க என்றாலும்,
குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.
|
10
|
நாவிடத்து இன்பம் நிறையச் சிவபெருமானையே பாடப் பெற்றோம் அதனால் உடை உடாத சமணர் எம்மை விரும்பாது விலகப்பெற்றோம் . அமரர் தலைவனாகிய சிவபெருமான் மனமிரங்கி எமை ஆள்வான் . நான்முகனும் திருமாலும் அறிதற்கு அரிய அனற் பிழம்பாய் நீண்டவனும் தேவர்க்குத் தேவனுமாகிய சிவபெருமான் எம் சிந்தையில் மன்னி நின்றான் . அதனால் அவனுக்குரிய எண் குணங்களை உடையேமாயினேம் . ஆகவே இயமனே வந்து தன் தலைமையை உரைத்து எம்மைக் குற்றேவல் செய்க என்றாலும் அதனை எமக்குரிய நெறியாகக் கொள்ளோம் . | |
| Go to top |