சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.098   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது - மறுமாற்றம் - திருத்தாண்டகம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார் என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரை யும் இழித்துரைக்கின்றார் என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர். இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும் என்றனர் சமணர். மன்னவன் அமைச் சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும் திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்து நின்றார்கள். திருநாவுக்கரசர் சிவபெரு மானுக்கே மீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம் யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம். நமன் வரினும் அஞ்சோம் என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் மறுமாற்றத் திருத் தாண்டகப் பதிகம் பாடியருளினார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=ySLUSOx0X50   Add audio link Add Audio

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன
சங்கரன், நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

1
நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின் .

அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும்
அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி
உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.

2
பரந்த பூமிமுழுதும் எமக்கு இடமாகும் . ஊர்கள் தோறும் தம் உணவை அட்டுண்ணும் இல்லறத்தான் அதனைப் பிறர்க்கு இட்டு அல்லது உண்ணாராதலின் எமக்கு உணவுப் பிச்சையிடுதலை அவர்கள் ஒருபோதும் விலக்கார் . அம்பலங்கள் யாம் தங்கும் இடங்க ளாகும் . யாம் தன்னுடன் கிடந்தால் பூமிதேவி எம்மைப் புரட்டி எறியாள் . இது பொய்யன்று , மெய்யே . போர்விடையை ஊர்தியாக உடைய சிவபெருமானார் எம்மைத் தம் அடிமையாக ஏற்றுக் கொண்டார் . அதனால் இனியாம் ஏதும் குறைவில்லேம் ; துன்பமாயின எல்லாம் தீர்ந்தேம் . குற்றமற்றேம் ஆயின் யாம் சிறந்த உடைகளை உடுத்துப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் அரசர் சொல்லும் சொல்லை ஏற்க வேண்டிய கடப்பாடு உடையேம் அல்லேம் .

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
மாதேவா! மாதேவா! என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்;
நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக்
கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் வருவார் சொல்லும்
பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.

3
கச்சணிந்த கொங்கை மாதருடன் சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையில் பொருந்தோம் . மகாதேவா மகாதேவா என்று பலகாலும் அவனை வாழ்த்தி விடியற்காலத்து நீராடப் பெற்றோம் , திருநீறணியும் சைவத் திருக்கோலமே எம்பால் நிலவப் பெற்றோம் . பண்டு கல்லாய்த் திகழ்ந்த மனம் கரிய மேகம் பொழியும் மழை போலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம் . ஆகவே உலகியற் பொருளில் பற்றற்றேமாகிய யாம் பூமி முழுவதையும் ஆண்டு ஆனை ஏறி வரும் அரசர் ஏவும் பணிகளை ஏற்க வேண்டிய கடப்பாட்டினேம் அல்லேம் .

உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;
உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே;
செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும்
நன்மை   ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;
நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன்
சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்;
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர் நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.

4
சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர் . கோவணமும் கீளும் யாம் உடுப்பனவாய் உள்ளன . ஆகவே பகைவரும் எம்மை வெகுளார் . தேன் நிறைந்து பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையணிந்த புகழுடைய சிவ பெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை நாவால் சொல்ல வல்லேமாய்ச் சுறவுக்கொடியானாகிய மன்மதனைப் பொடியாக அக்கினி நேத்திரத்தை விழித்த சோதிவடிவினனையே தொடர்வுற்றே மாதலின் , தீமை , நன்மையாய்ச் சிறக்கப் பிறப்பிற் செல்லேம் ஆயினேம் .

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.

5
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய் , இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம் . இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை . யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம் . யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம் . அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின .
Go to top

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
மூர்த்தியே! என்று முப்பத்து மூவர்-
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே! என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும்,
கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே.

6
` அயன் , அரி , அரன் என்னும் மூவுருவிற்கும் முதலுருவாயவனே ! அட்டமூர்த்தியே ! முப்பத்து மூவர் தேவர்களும் அவர்களின் மிக்க இருடியரும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் செம்பவளத் திருமேனியுடைய சிவனே ` என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் கடிதாய செயலும் களவும் அற்றோமாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டினேம் அல்லேம் .

நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி,
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத்
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர்
பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே.

7
நிற்பனவும் , நடப்பனவும் , நிலனும் , நீரும் , நெருப்பும் , காற்றும் , நெடுவானும் , புன்மையதும் , பெரியதும் , அரியதும் , அன்புடையார்க்கெளியதும் , அளக்கலாகாத் தற்பரமும் , சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானை அவன் நன்மைகளையும் , பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம் ; அதனால் பிழையற்றோம் . அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்பப் பேயர் பேசுமாறுபோல யாம் பேசுவமோ ?

ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை,
இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை,
சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்;
நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே;
வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?.

8
எவ்வுலகினுக்கும் ஈசனும் , இறைவனும் , தேவர்கள் தலைவனும் , எரிபோன்று மிக்கு ஒளிரும் தேசனும் , செம்மேனியிடத்து வெண்ணீற்றானும் , மலையரையன் பொற்பாவை தன்னைக் காதலிக்க , தானும் அவளைக் காதலிக்கும் நேசனும் ஆகிய சிவபெருமானைத் தினமும் நினையப் பெற்றோம் . அதனால் நின்றுண்ணும் சமணர் என்றும் மறவாதிருக்கும்படி எமக்குச் சொன்ன உறுதிபோலும் சொற்களை எல்லாம் யாம் மறந்தொழிந்தோம் . இந்நிலையில் என்னிடம் வந்த நீர் யார் ? மன்னன் ஆவான் தானும் யாரே ?.

சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்;
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்;
உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்;
பாசம் அற வீசும் படியோம், நாமே.

9
சடையுடையானும் ஒருகாதில் விளங்கும் சங்கக் குழையானும் , சாம்பலைப் பூசிப் பாம்பை அணிந்த மேனியானும் , விடையுடையானும் , புலித்தோலாம் மேலாடையானும் , வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த உடை உடையானும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான் . அதனால் பாசத்தை முழுதும் உதறியெறியும் நிலையினை உடையோம் . ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களையுமுடைய அரசனுடைய ஆணைகேட்கும் தொழில் உடையோம் அல்லோம் .

நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்;
நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
ஆவா! என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்;
தென் திசைக்கோன் தானே வந்து,
கோ ஆடி, குற்றேவல் செய்க என்றாலும்,
குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.

10
நாவிடத்து இன்பம் நிறையச் சிவபெருமானையே பாடப் பெற்றோம் அதனால் உடை உடாத சமணர் எம்மை விரும்பாது விலகப்பெற்றோம் . அமரர் தலைவனாகிய சிவபெருமான் மனமிரங்கி எமை ஆள்வான் . நான்முகனும் திருமாலும் அறிதற்கு அரிய அனற் பிழம்பாய் நீண்டவனும் தேவர்க்குத் தேவனுமாகிய சிவபெருமான் எம் சிந்தையில் மன்னி நின்றான் . அதனால் அவனுக்குரிய எண் குணங்களை உடையேமாயினேம் . ஆகவே இயமனே வந்து தன் தலைமையை உரைத்து எம்மைக் குற்றேவல் செய்க என்றாலும் அதனை எமக்குரிய நெறியாகக் கொள்ளோம் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது - மறுமாற்றம்
6.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
Tune - திருத்தாண்டகம்   (பொது - மறுமாற்றம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000