நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
|
1
|
அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும்
அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி
உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.
|
2
|
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
மாதேவா! மாதேவா! என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்;
நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக்
கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் வருவார் சொல்லும்
பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.
|
3
|
உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;
உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே;
செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும்
நன்மை ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;
நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன்
சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்;
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர் நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.
|
4
|
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலை மாலை அணிந்த
சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.
|
5
|
Go to top |
மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு
ஆன மூர்த்தியே! என்று முப்பத்து மூவர்-
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே! என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும்,
கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே.
|
6
|
நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி,
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத்
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர்
பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே.
|
7
|
ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை,
இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை,
சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்;
நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே;
வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?.
|
8
|
சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்;
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்;
உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்;
பாசம் அற வீசும் படியோம், நாமே.
|
9
|
நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்;
நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
ஆவா! என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்;
தென் திசைக்கோன் தானே வந்து,
கோ ஆடி, குற்றேவல் செய்க என்றாலும்,
குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.
|
10
|
Go to top |