சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.009   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருஅரிசிற்கரைப்புத்தூர் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு படிக்காசுவைத்தவீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=FgVItiMOny4   Add audio link Add Audio

மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை உரித்தீர்; எரித்தீர், வரு முப்புரங்கள்;
சிலைக்கும் கொலைச் சே உகந்து ஏறு ஒழியீர்; சில்பலிக்கு இல்கள் தொறும் செலவு ஒழியீர்
கலைக் கொம்பும் கரி மருப்பும்(ம்) இடறி, கலவம் மயில் பீலியும் கார் அகிலும்
அலைக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .

1
மான்களின் கொம்புகளையும் , யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து , தோகையையுடைய மயிலினது இறகுகளையும் , கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே ! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர் ; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர் ; முழங்குகின்ற , கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர் ; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர் .

அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்; செறுத்தீர், அழல் சூலத்தில் அந்தகனை;
திருமகள் கோன் நெடுமால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில்,
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா, நிறைவு ஆக ஓர் கண்மலர் சூட்டலுமே,
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!.

2
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர் ; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர் ; திருமகட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள் , அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய , அது நிறைவாகும்படி , தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து , போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர் .

தரிக்கும் தரை, நீர், தழல், காற்று, அந்தரம், சந்திரன், சவிதா, இயமானன், ஆனீர்;
சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தி, தையலார் பெய்ய, கொள்வது தக்கது அன்றால்
முரிக்கும் தளிர்ச் சந்தனத்தொடு, வேயும், முழங்கும் திரைக் கைகளால் வாரி மோதி
அரிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .

3
கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும் , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து , கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே , நீர் , ` எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம் , நீர் , நெருப்பு , காற்று , வானம் , சந்திரன் , சூரியன் , ஆன்மா ` ஆகிய எல்லாப் பொருள்களுமானீர் . ஆதலின் , ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட , அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று .

கொடி உடை மும்மதில் வெந்து அழிய, குன்றம் வில்லா, நாணியின் கோல் ஒன்றி(ன்)னால்
இடிபட எய்து எரித்தீர், இமைக்கும் அளவில்; உமக்கு ஆர் எதிர்? எம்பெருமான்!
கடி படு ங்கணையான், கருப்புச் சிலைக் காமனை, வேவக் கடைக் கண்ணி(ன்)னால்
பொடி பட நோக்கியது என்னை கொல்லோ? பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!

4
எம்பெருமானிரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி , மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து , இமைக்கும் அளவில் எரித்தீர் ; ஆதலின் , உமக்கு நிகராவார் யாவர் ? ஒருவரும் இல்லை ; அங்ஙனமாக , மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும் , கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம் பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ ?

வணங்கித் தொழுவார் அவர், மால், பிரமன், மற்றும் வானவர், தானவர், மா முனிவர்;
உணங்கல்-தலையில் பலி கொண்டல் என்னே? உலகங்கள் எல்லாம் உடையீர், உரையீர்!
இணங்கிக் கயல் சேல் இளவாளை பாய, இனக்கெண்டை துள்ள, கண்டிருந்த அன்னம்
அணங்கிக் குணம் கொள் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

5
கயலும் , சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள் , ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும் , கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு , முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற ( உண்கின்ற ) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , உலகம் எல்லாவற்றையும் உடையவரே , உம்மை அடிபணிந்து , கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார் , திருமாலும் , பிரமனும் , மற்றைய தேவரும் , அசுரரும் , பெரிய முனிவருமாவர் ; அங்ஙனமாக , நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ ? சொல்லியருளீர் .
Go to top

அகத்து அடிமை செயும் அந்தணன் தான், அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்,
மிகத் தளர்வு எய்தி, குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு, நடுங்குத(ல்)லும்,
வகுத்து அவனுக்கு, நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றிப்
புகழ்த்துணை கைப் புகச் செய்து உகந்தீர் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே! .

6
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர் , பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து , நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு , அப்பிழைக்காக நடுக்கமுற , நீர் அவரது கனவில் தோன்றி , ` அன்பனே , நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும் , நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து , நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து , அவரை ஆட்கொண்டருளினீர் .

பழிக்கும் பெருந் தக்கன் எச்சம் அழிய, பகலோன் முதலாப் பலதேவரையும்
தெழித்திட்டு, அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை கொலோ? மை கொள் செம்  மிடற்றீர்!
விழிக்கும் தழைப் பீலியொடு ஏலம் உந்தி, விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி,
அழிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

7
சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட , முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே , கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி , ஒளி வீசுகின்ற மாணிக்கம் , முத்து , பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு , கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரை யிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே , நீர் , உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி , சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி , அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ ?

பறைக்கண் நெடும் பேய்க் கணம் பாடல் செய்ய, குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க,
பிறைக் கொள் சடை தாழ, பெயர்ந்து, நட்டம், பெருங்காடு அரங்கு ஆக நின்று, ஆடல்  என்னே?
கறைக் கொள் மணிகண்டமும், திண்தோள்களும், கரங்கள், சிரம் தன்னிலும், கச்சும் ஆகப்
பொறிக் கொள் அரவம் புனைந்தீர், பலவும்; பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!

8
நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும் , திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும் , முன் கைகளிற் கங்கணமாகவும் , தலையில் தலைச் சூட்டாகவும் , அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே , நீர் , பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும் , குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும் , பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய , காலங் கடந்த காடே அரங்கமாக நின்று , அடிபெயர்த்து நடனமாடுதல் என் ?

மழைக் கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர்; வளர் புன்சடைக் கங்கையை வைத்து  உகந்தீர்;
முழைக் கொள் அரவொடு என்பு அணிகலனா, முழுநீறு மெய் பூசுதல் என்னைகொலோ?
கழைக் கொள் கரும்பும், கதலிக்கனியும், கமுகின் பழுக்காயும், கவர்ந்து கொண்டு இட்டு,
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

9
` கழை ` என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும் , வாழைப்பழங்களையும் , கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே , நீர் , மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர் ; அதன் மேலும் , வளர்கின்ற புல்லிய சடையின்மேல் , ` கங்கை ` என்பவளை விரும்பி வைத்தீர் . அங்ஙனமாக , செல்வ வாழ்க்கை வாழ நினையாது , புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும் , எலும்புமே அணிகலங்களாக , மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ ?

கடிக்கும்(ம்) அரவால் மலையால் அமரர் கடலைக் கடைய, எழு காளகூடம்
ஒடிக்கும்(ம்), உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர்; உமிழீர்
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு, அருவி இருபாலும் ஓடி, இரைக்கும் திரைக் கை
அடிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

10
இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு , முன்பு அருவியாய் ஓடி , பின்பு , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , நீர் , கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு , மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி , அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர் ; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை .
Go to top

கார் ஊர் மழை பெய்து(ப்) பொழி அருவிக் கழையோடு அகில் உந்திட்டு இருகரையும்
போர் ஊர் புனல் சேர் அரிசில்-தென்கரைப் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதர் தம்மை,
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்,
சீர் ஊர் தரு தேவர் கணங்களொடும் இணங்கி, சிவலோகம் அது எய்துவரே.

11
மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய , அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும் , அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு , இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை , நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும் , மொழிக்குற்றம் , இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும் , அத்துதியைக் கேட்பவர்களும் , சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட் கூடி வாழ்ந்து , பின் சிவலோகத்தை அடைவார்கள் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅரிசிற்கரைப்புத்தூர்
2.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்
Tune - காந்தாரம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
5.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து ஊரும் புனல் மொய்
Tune - திருக்குறுந்தொகை   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
7.009   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை
Tune - இந்தளம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp