சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.019   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநின்றியூர் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=DhIte7qQ1tE   Add audio link Add Audio

அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்;
பற்றவனார்; எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

1
பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும் , பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடைய வரும் , ` எம் இறைவர் ` என்று பலராலும் விரும்பப் படுகின்ற தலைவரும் , பகைவருடைய ஊரினை , பெரிய , கொடிய அம்பினால் அழித்த வரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே .

வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு
பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்;
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ்
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.

2
மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்த வரும் , அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும் , சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும் , அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும் , நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .

அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ,
சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்;
மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே .

3
அகங் கையில் மூவிலை வேலை ( சூலத்தை ) உடையவரும் , தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க , அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து , பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர் , உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம் , வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே .

ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும் ஆகி அடல்
ஏறு உகந்தார், இசை ஏழ் உகந்தார்; முடிக் கங்கை தன்னை
வேறு உகந்தார்; விரிநூல் உகந்தார்; பரி சாந்தம் அதா
நீறு உகந்தார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே.

4
வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்த வரும் , நான்கு வேதங்களையும் உடையவரும் , எவ்விடத்தும் நிறைந்து நின்று , வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும் , ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும் , கங்காதேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும் , அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும் , பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்ற வரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே .

வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால்
அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார்
நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

5
வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராத வரும் , ` நறுநெய் , தயிர் , பால் ` முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும் , திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்ட வரும் , தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றி யூரே .
Go to top

ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை
போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப்
பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

6
அரையில் புலியினது பசுந்தோலையும் , ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும் , உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும் , அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும் , பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரம தேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றி யூரேயாகும் .

தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்;
மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்-
அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய்
நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

7
தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடையசெல்வரும் , மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்த வரும் , மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம் .

எட்டு உகந்தார், திசை; ஏழ் உகந்தார், எழுத்து; ஆறும் அன்பர்
இட்டு உகந்து ஆர் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர்; முன்நாள்
பட்டு உகும் பார் இடைக் காலனைக் காய்ந்து, பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.

8
திசைகள் எட்டினையும் , ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும் , மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழி பாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு , பிச்சை யேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்பு கின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .

காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப,
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க,
நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .

9
காலமும் , அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும் , தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும் , செயல்களையும் கண்டு அவர்களை விரும்பு கின்றவரும் , நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு , அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் ` திருமால் , பிரமன் , இந்திரன் ` முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும் , திருநின்றியூரே இடமாய் நிற்கும் .

வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்-
தூயார்; சுடுபொடி ஆடிய மேனியர்; வானில் என்றும்
மேயார்; விடை உகந்து ஏறிய வித்தகர்; பேர்ந்தவர்க்குச்
சேயார்; அடியார்க்கு அணியவர்; ஊர் திரு நின்றியூரே .

10
வாயார வாழ்த்தி , மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும் , அரியதவக் கோலத்தை உடைய தூயவரும் , வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும் , இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும் , தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே .
Go to top

சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில்
சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ-
ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்,
பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே .

11
திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய , பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , வினை நீங்கப் பெற்று , மண்ணுலகத் தவரும் , விண்ணுலகத்தவரும் வணங்கும் படி , சிவபெருமானது திருவடியை அடைவார்கள் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநின்றியூர்
1.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
Tune - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
5.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடுங் கண் வெண்தலை கொண்டு,
Tune - திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.019   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
Tune - நட்டராகம்   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.065   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திருவும், வண்மையும், திண் திறல்
Tune - தக்கேசி   (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000