நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்- வாரும் அருவி மணி, பொன், கொழித்துச் சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
1
|
இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு , மணியையும் பொன்னையுங் கொழித்துக்கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , சடையின்மேல் நீரையும் , பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் . | |
அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச, துளைக்கைக்கரித் தோல் உரித்தான் இடம் ஆம்- வளைக்கைம் மடவார் மடுவில்-தடநீர்த் திளைக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
2
|
வளையையணிந்த கைகளையுடைய இளமகளிர் , மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , புற்றில் வாழ்கின்ற , படத்தையுடைய பாம்பு போலும் இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி , துளையையுடைய துதிக்கையையுடைய யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகிய இறைவனது இடமாகும் . | |
இகழும் தகையோர் எயில் மூன்றும் எரித்த பகழியொடு வில் உடையான் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலம்- திகழும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
3
|
அரும்புபோலும் , மெல்லிய தனங்களையுடைய மகளிரது முகங்களே , தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறை யூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை இகழுந் தன்மையைப் பெற்ற அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பை யும் , வில்லையும் உடைய இறைவனது இடமாகும் . | |
மறக் கொள் அரக்கன் வரைதோள் வரையால் இறக் கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்- நறக் கொள் கமலம் நளி பள்ளி எழத் திறக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
4
|
தேனைக் கொண்டுள்ள தாமரைமலரை , நன்கு துயிலெழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச் சரம் ` என்னும் திருக்கோயிலே , வீரத்தைக் கொண்ட இராவணனது மலைபோலும் தோள்களை , தனது மலையால் முரியச்செய்த விரலையுடைய தலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும் . | |
முழுநீறு அணி மேனியன், மொய்குழலார் எழு நீர்மை கொள்வான், அமரும் இடம் ஆம்- கழுநீர் கமழக் கயல், சேல், உகளும் செழுநீர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
5
|
குளங்களில் செங்கழுநீர்ப் பூவின் மணங் கமழுமாறு அவைகளின்மேல் கயல்மீன்களும் , சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற , மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , திருமேனிமுழுவதும் நீற்றை அணிந்தவனும் , அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ச்சி பொருந்திய பண்பு களைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இடமாகும் . | |
| Go to top |
ஊன் ஆர் உடை வெண்தலை உண் பலி கொண்டு, ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்- வான் ஆர் மதியம் பதி வண்பொழில்வாய்த் தேன் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
6
|
விண்ணிற் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும் , வளவிய சோலைகளினிடத்தில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , ஊன் பொருந்திய , உடைந்த , வெள்ளிய தலையில் , உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்று , ஆனினத்ததாகிய , வெற்றியையுடைய ஏற்றை விரும்புபவனாகிய இறைவனது இடமாகும் . | |
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்- வார் ஊர் முலையார் மருவும் மறுகில் தேர் ஊர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
7
|
கச்சு மேற்பொருந்தப்பெற்ற தனங்களையுடைய மகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கருமை நிறம் பொருந்திய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , தேவர்கட்கு அருள்செய்த , நீர்ததும்பும் சடையினையுடையவனாகிய இறைவன் விளங்கியிருக்கின்ற இடமாகும் . | |
கரியின் உரியும், கலைமான்மறியும், எரியும் மழுவும், உடையான் இடம் ஆம்- புரியும் மறையோர் நிறை சொல்பொருள்கள் தெரியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
8
|
தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர் கள் , நிறைந்த சொற்களின் பொருளை ஆராய்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , யானைத் தோலையும் , ஆண் மான்கன்றையும் , எரிகின்ற மழுவையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் . | |
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம் மாணாமை செய்தான் மருவும், இடம் ஆம்- பாண் ஆர் குழலும், முழவும், விழவில், சேண் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
9
|
பண் நிறைந்த குழல்களின் ஓசையும் , மத்தளங் களின் ஓசையும் விழாக்களில் சேய்மைக்கண் சென்று பொருந்துகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை விரும்பாது வெறுத்தவனாகிய தக்கனது பெருவேள்வியின் சிறப்புக் களை எல்லாம் சிறவாதபடி அழித்தவனாகிய இறைவன் பொருந்தி யிருக்கும் இடமாகும் . | |
குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்- நெறியில் வழுவா நியமத்தவர்கள் செறியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
|
10
|
நன்னெறியினின்றும் வழுவாத கடப்பாட்டினை யுடைய உயர்ந்தோர்கள் மிக்குள்ள திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கொடிய கூற்றுவனை உதைத்த , குறியினின் றும் தவறாது எறியும் மழுப்படையை உடையவனாகிய இறைவனது இடமாகும் . | |
| Go to top |
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும் சீர் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தை ஆரூரன் சொல் இவை வல்லவர்கள், ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே.
|
11
|
போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற , புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள் , எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள் . | |