இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.
|
1
|
தாடந்த போதே தலைதந்த எம்மிறை வாடந்த ஞான வலியையும் தந்திட்டு வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.
|
2
|
தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.
|
3
|
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.
|
4
|
குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண் டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற் றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.
|
5
|
Go to top |
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.
|
6
|
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும் விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.
|
7
|
திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக் கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.
|
8
|
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
|
9
|
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.
|
10
|
Go to top |
கழலார் கமலத் திருவடி யென்னும் நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும் குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.
|
11
|
முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின் முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன் குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.
|
12
|
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.
|
13
|
அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.
|
14
|
மந்திர மாவதும் மாமருந் தாவதும் தந்திர மாவதும் தானங்க ளாவதும் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்றன் இணையடி தானே. 3,
|
15
|
Go to top |