திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே?
பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!
|
1
|
பொடிதனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்த,
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே?
கடி-மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே!
|
2
|
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து, ஏறு அது ஏறி,
மான் அன நோக்கி தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே?
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
ஆன் நலம் தோய்ந்த எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
|
3
|
மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசி,
புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே?
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே!
|
4
|
வெந்த வெண் நீறு பூசி, விடை ஏறிய வேத கீதன்,
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே?
சந்தம் ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,
அந்தம் ஆம் ஆதி ஆகி, அயவந்தி அமர்ந்தவனே!
|
5
|
Go to top |
வேதம் ஆய், வேள்வி ஆகி, விளங்கும் பொருள் வீடு அது ஆகி,
சோதி ஆய், மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே?
சாதியால் மிக்க சீரால்-தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதி ஆய் நின்ற பெம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
|
6
|
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து, வெண் நீறு பூசி,
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே?
சமயம், ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,
அமைய வேறு ஓங்கு சீரான், அயவந்தி அமர்ந்தவனே!
|
7
|
பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி,
விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே?
தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
|
8
|
பேர் எழில்-தோள் அரக்கன் வலி செற்றதும், பெண் ஓர்பாகம்
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும், ஏற்பது ஒன்றே?
கார் எழில் வண்ணனோடு, கனகம்(ம்), அனையானும், காணா
ஆர் அழல்வண்ண! மங்கை அயவந்தி அமர்ந்தவனே!
|
9
|
கங்கை ஓர் வார்சடைமேல் அடைய, புடையே கமழும்
மங்கையோடு ஒன்றி நின்ற(ம்) மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே?
சங்கை இல்லா மறையோர் அவர்தாம் தொழு சாத்தமங்கை,
அங்கையில் சென்னி வைத்தாய்! அயவந்தி அமர்ந்தவனே!
|
10
|
Go to top |
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,
முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.
|
11
|