அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.
|
1
|
பெண் இட்டம் பண்டையது அன்று; இவை பெய் பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு, வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே
பண் இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி, நோக்கி நின்று,
கண்ணிட்டு, போயிற்றுக் காரணம் உண்டு-கறைக்கண்டரே.
|
2
|
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர்
இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து,
நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ?
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே.
|
3
|
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய,
நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால்
துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்
நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.
|
4
|
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ;
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்;
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே.
|
5
|
Go to top |
தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்;
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல்
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே.
|
6
|
நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா! என்று சொல்லிக் கிறிபடத் தான்
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ, இவ் அகலிடமே?
|
7
|
அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல்
நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்-
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே.
|
8
|
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை,
அன்னியர் அற்றவர், அங்கணனே, அருள் நல்கு! என்பரே.
|
9
|
திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல்,
குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி,
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.
|
10
|
Go to top |
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக்
கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான்,
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே?
|
11
|