பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று நாடக மாடும்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த ஆடகமாடம் நெருங்குகூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
1
|
திங்களம் போதுஞ் செழும்புனலும் செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து நங்கண் மகிழும்நள் ளாறுடைய நம்பெருமானிது வென்கொல்சொல்லாய் பொங்கிள மென்முலை யார்களோடும் புனமயி லாட நிலாமுளைக்கும் அங்கழ கச்சுதை மாடக்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
2
|
தண்ணறு மத்தமும் கூவிளமும் வெண்டலை மாலையும் தாங்கியார்க்கும் நண்ணல ரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார் அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
3
|
பூவினில் வாசம் புனலிற்பொற்புப் புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு நாவினிற் பாடல்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் தேவர்கள் தானவர் சித்தர்விச்சா தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
4
|
செம்பொன்செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும்பாட்டும் நம்பும் பெருமைநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் உம்பரும் நாகரு லகந்தானும் ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும் அம்புத நால்களால் நீடுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
5
|
Go to top |
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய் நாகமும் பூண்டநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட ஆகமு டையவர் சேருங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
6
|
கோவண வாடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு வேந்தலுஞ் செஞ்சடையும் நாவணப் பாட்டும்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் பூவண மேனி யிளையமாதர் பொன்னும் மணியும் கொழித்தெடுத்து ஆவண வீதியி லாடுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
7
|
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க வெழில்விர லூன்றி யிசைவிரும்பி நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும் அலங்க னல்லார்க ளமருங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
8
|
பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும் நணுகல ரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி யென்றுமோவா தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
9
|
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியி னீங்கிய வத்தவத்தர் நடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் எடுக்கும் விழவும் நன்னாள்விழவும் இரும்பலி யின்பினோ டெத்திசையும் அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.
|
10
|
Go to top |
அன்புடை யானை யரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று நன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும் பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவ ரேத்த விருப்பர்தாமே.
|
11
|