புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட் கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த விருந்தவூராம் விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும் பண்ணியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
1
|
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும் அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன ணங்கொ டிருந்தவூராம் தொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற் பத்திமைப் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
2
|
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார் இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம் தெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப் பங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
3
|
தேவியொர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும் ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே யமர்ந்தவூராம் பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப் பாவியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
4
|
இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார் வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம் கொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட மிடையிடை சேரும்வீதிப் பந்தணையும் விர லார்தமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
5
|
Go to top |
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார் ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொண்மாடம் சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானநல்கப் பற்றிய கையினர் வாழுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
6
|
நீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம் கூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்தவி ருந்தவூராம் தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப் பாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
7
|
வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விற லாரரக்கன் வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தரி டம்வள மோங்கியெங்கும் கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப் பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
8
|
மாலு மயனும் வணங்கிநேட மற்றவ ருக்கெரி யாகிநீண்ட சீல மறிவரி தாகிநின்ற செம்மையி னாரவர் சேருமூராம் கோல விழாவி னரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும் பாலென வேமொழிந் தேத்துமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
9
|
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள் தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ ரிடந்தள வேறுசோலைத் துன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப் பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
|
10
|
Go to top |
எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப் பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன் மேல் கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன கொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும வருடை யார்கள்வானே.
|
11
|