ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணம் கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைக டோறு மறையின்னொலி தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
1
|
பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ டணிநீர மேலுலக மெய்தலுறில் அறிமின் குறைவில்லை யானேறுடை மணிநீல கண்ட முடையபிரான் மலைமக ளுந்தானு மகிழ்ந்துவாழும் துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
2
|
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் ஆமா றறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை யானேறுடைப் பூமா ணலங்க லிலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையும் தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
3
|
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணின் மயங்காதுநீர் மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலு முகில்தோய்கொடி தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
4
|
மயறீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால் வியறீர மேலுலக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம் உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய் துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
5
|
Go to top |
பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கிற்கண் பவளந்நிற நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன் றுங்கால நமக்காதன்முன் பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையும் தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
6
|
இறையூண் டுகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லா நீள்கழ லேநாளு நினைமின்சென்னிப் பிறைசூ ழலங்க லிலங்குகொன்றை பிணையும் பெருமான் பிரியாதநீர்த் துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
7
|
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லா மிறையே பிரியா தெழுந்துபோதும் கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழும் தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
8
|
நோயும் பிணியு மருந்துயரமு நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம் வாயு மனங்கருதி நின்றீ ரெல்லா மலர்மிசைய நான்முகனு மண்ணும்விண்ணும் தாய வடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண் தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
9
|
பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன திகடீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழையுந் தானும் பொருந்திவாழும் துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
|
10
|
Go to top |
மண்ணார் முழவதிரு மாடவீதி வயற்காழி ஞானசம் பந்தனல்ல பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான் கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய் விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியதுவே யாகும் வினைமாயுமே.
|
11
|