சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத் தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.
|
1
|
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவாலயத் தோர்க்குத் தரும்முத்தி சார்பூட்டும் சன்மார்க்கந் தானே.
|
2
|
தெளிவறி யாதார் சிவனை அறியார் தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.
|
3
|
தானவவ னாகித்தான் ஐந்தாம் மலம்செற்று மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும் ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும் தானவ னாய்உற லானசன் மார்க்கமே.
|
4
|
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும் சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.
|
5
|
Go to top |
சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கம் தானவ னாகும்சன் மார்க்கமே.
|
6
|
சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப் பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால் நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.
|
7
|
அன்னிய பாசமும் ஆகும் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமும் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.
|
8
|
பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக் கசியாத நெஞ்சம் கசியக் கசிவித் தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை ஆனசன் மார்க்கமே.
|
9
|
மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர் மார்க்கம்சன் மார்க்க மதுசித்த யோகமே.
10, |
10
|
Go to top |