மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.
|
1
|
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
|
2
|
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரைஅன்னம் தாமரை நீலம் குறுகா நறுமலர் கொய்வன கண்டும் சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.
|
3
|
அருங்கரை யாவ தரனடி நீழல் பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம் ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.
|
4
|
உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் பயந்தும் பிறவிப் பயன்அது வாகும் பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.
|
5
|
Go to top |
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.
|
6
|
திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின் கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே.
12, |
7
|