பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல் ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே.
|
1
|
ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி வேறு செய்தத னுரிவை வெண்புலால் கலக்கமெய் போர்த்த ஊறு தேனவ னும்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம் ஆறு சேர்தரு சென்னி அடிகளுக் கிடமர சிலியே.
|
2
|
கங்கை நீர்சடை மேலே கதமிகக் கதிரிள வனமென் கொங்கை யாளொரு பாகம் மருவிய கொல்லைவெள் ளேற்றன் சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க்கருள் செய்து அங்கை யாலன லேந்து அடிகளுக் கிடமர சிலியே.
|
3
|
மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப் புக்க வூரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை அக்கி னாரமும் பூண்ட அடிகளுக் கிடமர சிலியே.
|
4
|
மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித் தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி ஆனஞ் சாடிய சென்னி அடிகளுக் கிடமர சிலியே.
|
5
|
Go to top |
பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்குமத் தாகப் பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய வவர்தமைக் கண்டு அரிய வாரமு தாக்கும் அடிகளுக் கிடமர சிலியே.
|
6
|
வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன் கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப் பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடமர சிலியே.
|
8
|
குறிய மாணுரு வாகிக் குவலய மளந்தவன் றானும் வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத் தோனும் செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடமர சிலியே.
|
9
|
குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத் திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல் பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும் அருளை யார்தர நல்கும் அடிகளுக் கிடமர சிலியே.
|
10
|
Go to top |
அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளும் சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த வல்ல வானுல கெய்தி வைகலு மகிழ்ந்திருப் பாரே.
|
11
|